சந்திப்பு: சின்னமுருகு
சிறுவயதிலிருந்தே புத்தகம் வாசிப்பதிலும், வரலாற்று தரவுகளைத் தேடிக் கண்டடைவதிலும் ஆர்வம் கொண்டவர் டாக்டர் மு.ராஜேந்திரன். எழுத வேண்டுமென்கிற உத்வேகம் உள்ளுக்குள் இருந்தாலும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக முக்கியப் பொறுப்பும், நேர நெருக்கடியும் எழுதவிடாமல் கைகளைக் கட்டிப்போட்டன. தனது 52-ஆவது வயதில் எப்படியாவது எழுதிட வேண்டுமென்கிற எண்ணம் மேலெழ, தான் எழுதுவதற்கான நேரமாக நள்ளிரவைத் தேர்வு செய்தார். இரவு 9 மணிக்குப் படுத்து, இரவு 1 மணிக்கு எழுந்து மூன்று, நான்கு மணி நேரம் எழுதிவிட்டு, மீண்டும் தனது தூக்கத்தை மூன்று மணிநேரம் தொடர்வது என்கிற முயற்சி, எழுதுவதற்கான நல்வாய்ப்பினை அவருக்கு வழங்கியது.
தனது குடும்பத்தின் வரலாற்றை ‘வடகரை’ (2015) எனும் இனவரைவியல் நூலாகவும், ‘1801’ (2017), ‘காலா பாணி’ (2020), ‘மதாம்’ (2021) ஆகிய வரலாற்று நாவல்களையும், ‘பாதாளி’ (2016) சிறுகதைத் தொகுப்பையும், ‘‘வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்’’, ‘‘யானைகளின் கடைசி தேசம்,’’ ‘‘ வண்ணச் சீரடி’’ உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் எழுதியதோடு, நேஷனல் புக் டிரஸ்ட்டுக்காக ‘இந்திய பழங்குடிகள்’ எனும் ஆங்கில நூலையும் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார்.

தனது எழுத்துப் பணிகளோடு இந்திய சிலம்பாட்ட அமைப்பின் தேசியத் தலைவராகவும், கம்பம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டியாகவும் இருந்து பல களப்பணிகளிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தி வரும் டாக்டர் மு.ராஜேந்திரனின், ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘சாகித்திய அகாதெமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புத்தகம் பேசுது’ இதழின் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைப் தெரிவித்துக்கொண்டு, அவரது எழுத்தனுபவம் பற்றிய உரையாடலின் தொகுப்பு ‘புத்தகம் பேசுது’ வாசகர்களுக்காக;
தங்களது சிறுவயது நாள்கள் பற்றி…
எனது சிறுவயது நாள்கள் மகிழ்ச்சிகரமாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தவிதப் பொறுப்புமின்றி, விளையாட்டுத்தனமாக, மகிழ்ச்சிகரமாக இளமைக் காலம் அமைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. எனது தகப்பனார் ராஜா என்கிற முத்தையாவுக்கு எனது தாயார் ஜெயலட்சுமி இரண்டாம் தாரம். மூத்த தாரம் உயிரோடு இருக்கையில், இளைய தாரம் அப்பிராணியாகவும், பயந்தாங்கொள்ளியாகவும் இருந்துவிட்டால் இரண்டாம் தாரத்து குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான்.
அதுவும் எனது மூன்று தம்பிகளுக்கும், ஒரே தங்கை கலைவாணிக்கும் நான்தான் மூத்தவன் என்பதால் என் தகப்பனார்மீது மதிப்பும் பயமும் கொண்ட எனது தாயாருக்கு என்னிடம் எதிர்பார்ப்பு அதிகம். அவரால் எனது தகப்பனாரிடம் கேட்டுப் பெற முடியாத நியாயமான கோரிக்கைகள் கூட என்னிடம் தரப்படும். இத்தனைக்கும் எனது தாயார் பஞ்சாயத்துப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். எனது தகப்பனார் கிராம நாட்டாமை. எனது தகப்பனாரைவிட எனது தாயாருக்கு நான்கு மடங்கு சம்பளம்.
அந்தக் காலத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் பணி, சத்துணவு வேலை எல்லாம் ஆசிரியர்கள்தான் செய்வார்கள். இந்தக் காலத்திலும்தான் தொடர்கிறது. எனது தாயார் போன்றவர்கள் இந்த வேலைகளை, வாய்ச்சாமர்த்தியமுள்ள மற்ற ஆசிரியர்களிடம் ஒப்படைப்பார். அதற்காகச் சிறு மதிப்பூதியமும் அவர்களுக்கு கொடுப்பார். இந்தத் தொகையைச் சம்பளத்திலிருந்துதான் எனது தாயார் தர முடியும்.
சம்பளத்தை மொத்தமாக எனது தகப்பனாரிடம் தர வேண்டும் என்பது நடைமுறை. மதிப்பூதியத்தைப் பிடித்துக்கொண்டு தான் எனது அம்மாவுக்கு மாதச் சம்பளம் வரும். அந்த மாதங்களில் என் பாடு திண்டாட்டம். சிறுவனான நான்தான் என் அப்பாவிடம் சம்பளப் பணம் குறைவதற்கான காரணம் சொல்லி, அவரிடம் தர வேண்டும்.
அப்பாவின் அப்பாவை அய்யா என்றும், அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்றும் அழைப்போம். எனது அய்யா அய்யம்பெருமாள் தேவரும், அப்பத்தா கருப்பாயி, சின்ன அப்பத்தா சின்னம்மாள் இவர்கள் மூவர் மட்டுமே எனது சிறுவயது நாட்களை இனிமையாக்கியவர்கள்.
எழுத வேண்டுமென்கிற ஆர்வம் எப்போது உண்டானது?
பூப்பதற்கு முன்பே காய்க்க நினைத்த விருட்சம் நான். ஆர்வம் மட்டுமே உந்தித்தள்ள எந்தவிதப் பயிற்சியும் இன்றி கதை எழுத ஆரம்பித்தபோது எனக்குப் பத்து வயது ஆகியிருந்தது. எனது அய்யா, பஞ்சாயத்துத் தலைவராகயிருந்ததால் பஞ்சாயத்து நூலகம் தலைவர் வீட்டில்தான் இருக்கும். நூலகத்தில் கிராம சுயராஜ்யம், சர்வோதயம், திட்டக்குழு அறிக்கை என்று தலையணை அளவு புத்தகங்களுக்கு மத்தியில் நா.பா- வின் ‘பிறந்த மண்’ நாவலைக் கண்டடைந்தேன். பரவசமானேன். பயன்பட்டது போக மீதமிருந்த நோட்டுப் புத்தகக் காகிதங்களைக் கிழித்து நோட்டாக்கி, பெயர், ஊரை மாற்றி கதையொன்றினை எழுதினேன். அதை நானே, தனிமையில் வாசித்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.
கல்லூரி நாள்களில் கடைசி பெஞ்ச் எனது விருப்பத் தேர்வாகயிருந்ததால் படிப்பில் சிரத்தையின்றி, ஆசிரியரைப் பற்றியோ, நன்றாகப் படிக்கும் சக மாணவர்களைப் பற்றியோ நான் கிறுக்கித் தரும் வாசகங்கள் அங்கதச் சுவையுடன் இருப்பதாக எனது கடைசி பெஞ்ச் தோழர்கள் சொல்லி என்னை உசுப்பேற்றிவிட்டனர்.
பொருளாதார ரீதியாக நான் முன்னேற வேண்டுமென்பதால் எழுத்துப் பணியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசுப் பணிக்குப் படிக்க ஆரம்பித்தேன். போட்டித் தேர்வுகள் எழுதியபோதும், தேர்வெழுதி வேலை கிடைத்தபோதும் மனத்தின் மூலையில் எழுத வேண்டும் என்ற சிறு நெருப்பு இருந்து கொண்டுதான் இருந்தது.
தாங்கள் முதலில் எழுதிய படைப்பு எது?
2010-இல் நான், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்தேன். வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி. வந்தவாசியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 22-இல் நடந்த ஆங்கிலோ-பிரெஞ்சுப் போர், இந்தியாவை ஆளப்போவது ஆங்கிலேயரா, பிரெஞ்சுக்காரரா என்ற கேள்விக்கு விடை தந்தது. அந்தப் போர் நிகழ்ந்து 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுபடுத்தவும் வந்தவாசி தினமாக ஜனவரி 22-யைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். வந்தவாசியைச் சேர்ந்த எழுத்தாளர் தம்பதி
அ.வெண்ணிலா & மு.முருகேஷ் உதவியை நாடினேன். எங்களது முயற்சியால் ‘வந்தவாசிப் போர்-250’ என்ற தொகுப்பை உருவாக்கினோம். இது ஒரு கூட்டு முயற்சி.
எனது முதல் நூல் என்றால் சோழர் காலச் செப்பேடு நூல்தான். அடுத்து பாண்டியர், பல்லவர், சேரர் செப்பேடுகள் எழுதினேன். அவற்றையும் படைப் பிலக்கியம் என்று சொல்ல முடியாது. வரலாற்று ஆய்வு நூல்தான். முதல் படைப்பு என்றால் ‘வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு’ நூல்தான். 600 ஆண்டுகாலத் தென்தமிழகத்தில் ஓர் எளிய கிராமக் குடும்பத்தின் வாழ்க்கையைப் புனைவுடன் எழுதினேன்.
பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இந்த நாவலைத் ‘‘தமிழில் வந்த முதல் இனவரைவியல் நூல்’’ என்று கூறினார். அவரின் விமர்சனம் பெரிய உத்வேகம் தந்தது. தமிழகத்தின் தனித்துவமான எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், கலாப்ரியா, இமையம், அம்பை, புவியரசு, அ.வெண்ணிலா, இறையன்பு, கீரனூர் ஜாகீர் ராஜா, மணிமாறன், க.வை.பழனிச்சாமி போன்றவர்கள் இந்த நாவலைப் பற்றிய விமர்சனங்களை எழுதினர். அதை ‘விஜயா பதிப்பகம்’ மு.வேலாயுதம் தொகுத்து, ஒரு தனிப் புத்தகமாகவும் வெளியிட்டார்.
வழக்கறிஞராகப் பணிசெய்த தங்களுக்குள் ஒரு வரலாற்று ஆய்வுத் தேடல் எப்போது வந்தது?
வழக்கறிஞராக நான் வேலை பார்த்த மூன்று வருடங்களும் எனது அரசு வேலைக்கான காத்திருப்புக் காலம். மதுரையின் பெருமைக்குரிய வழக்கறிஞர் கே.வெள்ளைச்சாமியிடம் நான் ஜூனியராக இருந்தேன். பணியின் நிமித்தம் அவரோடு பல பிரசித்திப்பெற்ற கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் போயிருக்கிறேன். எனது சீனியர் பக்தி சிரத்தையுடன் கோயிலை வலம் வரும்போது, நான் அதனுடைய வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பேன். எனது சீனியர் அப்பழுக்கற்ற அன்பான பேச்சிலர். நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்குகள் நடக்கும்போதே போட்டித் தேர்வுக்குப் படிக்கும் எனது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளைப் புன்முறுவலுடன் பார்ப்பார். ஒரு கடின வார்த்தை சொன்னதில்லை. என்மேல் அளப்பரிய நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த அந்த மாமனிதர், பல நேரம் நான் அவரைப் புனிதர் என்பேன். அவர் எனது தேடல்களுக்கு உறுதுணையாகயிருந்தார்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவர் காலச் செப்பேடுகளை எளிமையாக்கித் தர முடிவு செய்தது எதனால்?
செப்பேட்டுகளைப் பற்றி ஈரோடு புலவர் செ.ராசு, டாக்டர் இரா.நாகசாமி, டி.வி.மகாலிங்கம், நடன காசிநாதன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் துறை, திருவனந்தபுரம் தொல்லியல் துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முதலான நிறுவனங்கள் செப்பேடுகள் தொடர்பான நூல்களை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் செப்பேட்டின் மூலவரிகள் அப்படியே பதிப்பிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் அத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநருக்கு மட்டுமே பயன்படும், புரிந்துகொள்ளப்படும்.
வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களின் புரிதலுக்காகப் பாண்டியர் காலத்திய (25), பல்லவர் காலத்திய (21), சேரர் காலத்திய (37), சோழர் காலத்திய (21) செப்பேடுகளை எளிய தமிழ்நடையில் தந்தேன். வெளிப்படையாகச் சொன்னால் செப்பேடுகள் எழுதுவதற்கு முன்னால் அவற்றைப் புரிந்துகொள்ள நான் பட்ட சிரமங்கள் மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக நம் நான்கு பேரரசர்களின் செப்பேடுகளைப் பற்றி எழுதினேன். இன்னும் நாயக்கர், மராட்டா செபேடுகள் பாக்கியிருக்கின்றன. இதை யாராவது செய்தால் நன்றாகயிருக்கும்.
திருக்குறளைப் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்களே..!
தமிழக மக்களுக்குச் சட்ட நூலைத் தந்தவர் திருவள்ளுவர் என்று ஜி. யூ.போப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகத்தில் சொல்லியிருப்பார். திருக்குறளுக்கு உரை எழுதிய, பரிமேலழகர் ‘‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலுமுமாம். அது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்’’ என்கிறார். ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்றையும் உள்ளீடாகக் கொண்டதுதான் திருக்குறள். ம.சண்முக சுப்பிரமணியன், க.த.திருநாவுக்கரசு, நீதியரசர் ப.வேணுகோபால் போன்றவர்கள் திருக்குறள் நீதி இலக்கியம் என நிறுவ முயற்சித்துள்ளனர்.
எனது நூலில் நான் கூடுதலாக திருக்குறளில் உள்ள உள்நாட்டுச் சட்டங்களோடு, அயல்நாட்டுச் சட்டங்கள், சட்டம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத் தொகுத்து அதை ஆய்வாக்கினேன். 1993-இல் முதல் முறையாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக முனைவர் ஆய்வுபிரிவுகளில் சேரலாம் என்ற அறிவிப்பு வெளியானது. முனைவர் ஔவை நடராஜன் ஆய்வு செய்ய எனக்கு அனுமதி வழங்கினார்.
4-ஆவது ஆண்டின் நிறைவில் எனது ஆய்வைச் சமர்ப்பித்தேன். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பித்துப் பத்து ஆண்டுகள் கழித்தே அதன் முதல் பட்டமளிப்பு விழா அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி தலைமையில் 1998-ஆம் ஆண்டு நடந்தது. அதில் எனக்கு முதல் நபராக முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது நான் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியாகயிருந்தேன். பட்டம் பெறும்போது என்னைப் பற்றிய கூடுதல் தகவல்களை அமைச்சர் தமிழ்க்குடிமகனும், துணவேந்தர் கருணாகரனும் ஆளுநரிடம் தெரிவித்தனர். ஆளுநர் எனக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவித்தார்.
பல்வேறு துறையில் பணி செய்த அனுபவங்களை ‘செயலே சிறந்த சொல்’ எனும் நூலாக எழுதியிருப்பது பற்றி…
ஆம்; எனது 32 வருடப் பணிக்காலத்தில் நான் வேலை பார்த்ததே மொத்தம் 10 துறைகள் தான். அதில் ஆறு பதவியில் குறைந்தது மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ஒரு பதவியில் ஆறு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அடிக்கடி பணிமாறுதல் எனக்கு வந்ததில்லை. அதற்காக நான் எல்லாவற்றிலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகிறவன் என்றும் சொல்ல முடியாது. செய்ய வேண்டிய வேலையை நாமே செய்துவிட்டால் மற்றவர்கள் நம்மை வற்புறுத்தவேண்டிய அவசியம் எழாது. செய்ய முடியாதவற்றை செய்யச் சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் நான் அலுவலக ரீதியாக சந்தித்த 108 நிகழ்வுகளை, சம்பந்தப்பட்ட ஆட்களின் பெயர் குறிப்பிட்டு எழுதிருக்கிறேன். நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் பணி செய்த அலுவலகங்களிலிருந்து பலர் வந்திருந்தனர். புத்தகத்தைப் புரட்டிவிட்டு நான் சொல்லாமல் விட்ட நிகழ்வுகளையும் அவர்கள் மேடையில் விவரித்தனர்.
ஒரு சிங்கக்குட்டியை என் கையில் ஏந்தியபடி நான் எடுத்துக்கொண்ட புகைப்படமே புத்தகத்தின் அட்டைப் படம். அதில் பல அர்த்தம் இருப்பதாக உணர்ந்தேன். இந்தப் புத்தகத்திற்கு 2020-ஆம் ஆண்டின் சிறந்த தன்வரலாறு என்ற வகைப்பாட்டில் தமிழக அரசு பரிசு வழங்கி கௌரவித்தது.
’வடகரை-ஒரு வம்சத்தின் வரலாறு’ நூலை எழுதிட என்ன காரணம்?
’வடகரை’ எழுத முக்கியக் காரணம் என் மனத்தின் மூலையில் நான் பாதுகாத்த எனது கிராமத்தின் வரலாற்றை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல். ஏற்கெனவே சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்களின் வரலாற்றை செப்பேடுகள் மூலம் அறிந்துகொண்ட நான், இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்திருந்தேன். கேள்விப்பட்டிருந்த, புத்தகங்களில் படித்திருந்த நாலு பேரரசுகளைப் பற்றி எழுதிய பிறகு, எனக்குப் பரிச்சயமான வாழ்க்கையையும் வெளிக்கொணர வேண்டும் என நினைத்தேன்.
ஒரு நாவலுக்குத் தேவையான சோகம், நிராகரிப்பு, வறுமை, பெருமித உணர்வு இயற்கையாகவே இதில் அமைந்துவிட்டதால், வடகரை’’ எனது சுயசரிதை என்ற சிறு வட்டத்தைத் தாண்டி, தென் தமிழகத்தின் கிராம வாழ்க்கை என்ற பெரும் சுற்றில் நிலைகொண்டது.
இந்தப் புத்தகத்தில் எனது தந்தையாரின் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக எழுதியிருந்ததை எனது குடும்ப உறவினர்களில் சிலர் ரசிக்கவில்லை. இறந்துபோன எனது தகப்பனாரின் ஆசி எனக்குக் கிடைக்காது என்ற அவர்களது நம்பிக்கை பொய்யானது, எனது பேரன் திரேன் பிரதீப் ராஜே, எனது தகப்பனார் ராஜா பிறந்த அதே ஆடிப்பெருக்கு நாள் அன்று பிறந்தபோது.
1801- நூலுக்கான வரவேற்பும், விமர்சனமும் எப்படியிருந்தன?
‘1801’ நாவல் ஊமைத்துரையுடன் 16 பேரைப் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிக்க வைத்த சின்ன மருது சேர்வைக்காரரின் சாகச நிகழ்வு. இந்தச் சாகசத்தை நிறைவேற்றிய மாபெரும் வீரர்கள் போத்தி பகடை, பாண்டியன் சேர்வைக்காரர், குமாரசாமி நாயக்கர் என்ற மூவர். இதிலிருந்து ‘‘1801’’ நாவலை ஆரம்பித்தேன். மருது பாண்டியர்கள், ஊமைத்துரை மற்றும் 500 போராளிகள் தூக்கிலிடப்பட்ட நிகழ்வைச் சொல்லி நாவலை முடித்தேன். பல விமர்சனங்கள். பல ஊக்குவிக்கும் முறையில் வந்தன. வரலாற்றுச் செய்திகள் அதிகமாகவும், புனைவு குறைவாகவும் இருப்பதாகச் சிலர் சொன்னார்கள். வரவேற்பின் முத்தாய்ப்பாக மலேசிய அரசின் நிலநிதி கூட்டுறவு அமைப்பின் தான்ஸ்ரீ சோமா விருதும், 7 லட்ச ரூபாய் பணமுடிப்பும் கிடைத்தது. ‘‘1801’’ நாவலில் வரலாற்றுச் செய்திகளைவிட புனைவு குறைவாகயிருந்தது என்ற விமர்சனத்தை அடுத்த நாவலில் சரி செய்யவும் முடிவு செய்தேன்.
‘காலா பாணி’ நாவலுக்கான களப்பணி அனுபவங்கள் குறித்து…
‘காலா பாணி’க்கான களப்பணிகள் நானே திட்டமிடாத ஒன்று. ‘‘1801’’ நாவலுக்காக மலேசிய விருது கிடைத்து அங்கு சென்றபோது, நண்பர்கள் வீரவிஸ்வாமித்திரன், மருது, கலைச்செல்வன், சிலம்ப ஆசான் முரளிதரன் உதவியுடன் பினாங்குத் தீவிற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பினாங்கில் தூக்கிலிடுவதற்கென்றே ஒரு சதுக்கம் இருந்திருக்கிறது. இன்று அதற்கான எச்சங்கள் அங்கு இருக்கின்றன. அந்தச் சதுக்கத்திலிருந்து பிரியும் ஒரு சாலைக்கு ஜார்ஜ் லெயித் சாலை என்று பெயர் இருந்ததை கவிஞர் வெண்ணிலா பார்த்து என்னிடம் சொன்னார். ஜார்ஜ் லெயித், பினாங்குத் தீவின் கவர்னராக இருந்துபோதுதான் சின்ன மருதுவின் இளவயது மகன் துரைசாமி, சிவகங்கை அரசர் வேங்கை உடையணத் தேவர், ராமநாதபுரம் ஜெகன்நாத அய்யர், சேக் உசேன், மணக்காடு சாமி, கள்ளி மந்தயம், வாராப்பூர், கோம்பை பாளையக்காரர்கள் பினாங்குத் தீவில் சிறைக் கைதிகளாக இருந்தனர். பினாங்கில் இருந்து திரும்பியவுடனேயே ‘‘1801’’ நாவலின் தொடர்ச்சியாக ‘காலா பாணி’ நாவல் சூல் கொண்டது.
இதே காலக்கட்டத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்த ஒரு விழாவில் இந்தோனேசியாவின் பெரியவர் சீனிவாசன், விசாகன் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்களது அழைப்பில் சுமத்திரா தீவு சென்று, சிவகங்கை அரசர் 1802-ஆம் ஆண்டு வேங்கை பெரிய உடையணத் தேவர் தனிமைச் சிறையிலிருந்த மால்பரோ கோட்டையைப் பார்த்தேன். ‘‘1801’’ புத்தகத்தையும், ஒரு பட்டு வேட்டியையும் வைத்து வேங்கைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அந்த டிசம்பர் 2-ஆம் நாள் வேங்கையின் மாமியாரான சிவகங்கை அரசி வேலு நாச்சியாரின் நினைவு தினமும்கூட.
நாடு கடத்தப்பட்ட பாளையக்காரர்களின் ஊர்களுக்குப் பயணப்பட்டேன். அவர்களது உறவினர்களைச் சந்தித்தேன். முழு களப்பணி ஆற்றிய பிறகு, ‘‘காலா பாணி’’ எழுத தீர்மானித்தேன். கொரோனா காலத்தின் இரண்டு மாத கால அலுவலக விடுமுறை, எழுத்துப் பணியை முழு நேரமாக்கியது. ‘‘1801’’ நாவலின் அடுத்த நகர்வாக ‘‘காலா பாணி’’ உருவானது. ‘‘காலா பாணி’’யை நான் எழுதினேன் என்பதைவிட காலமே என் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்று சொல்வேன்.
உயரதிகாரிகள் எழுத்தாளர்களாகவும் இருப்பதனால் உண்டாகும் சாதக, பாதகங்கள் பற்றி…
உயரதிகாரிகள் புலி, சிங்கமாகத்தான் இருக்கக் கூடாது, எழுத்தாளராக இருக்கலாம். எழுத்தாளர் என்றாலே கற்பனை வளம்மிக்க, சக மனிதரை நேசிக்கத் தெரிந்த, பண்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர் உயரதிகாரியாகயிருந்தால் சக பணியாளருக்கு நன்மைதான். இதில் ஒரே பாதகம் என்ன என்றால் சக அலுவலர்கள் எழுத்தாளர்தானே? பண்பட்ட மனிதர்தானே? எதையும் கண்டு கொள்ளமாட்டார் என்று நினைத்து விட வாய்ப்புள்ளது. ஏதாவது கண்டிப்புடன் பேசும்போது, ‘‘சார்… நீங்கள் எழுதிய அந்தப் புத்தகம்… பெயர்கூட நல்லா இருக்கும்… திடீரென்று ஞாபகம் வரல… வாய்க்குள்ளேயேயிருக்கும்… அது சூப்பர் சார்… எடுத்தா கீழே வைக்க முடியாது” என்று புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்துவிட்டு, படிக்காமலேயே சொல்லவும் வாய்ப்புண்டு. இவற்றிற்கெல்லாம் மயங்கிவிடாமல் ‘சரி’ என்று சொல்லிவிட்டு, நம் எழுதுவதை தொடர்வதே சரியான செயலாகும்.
தாங்கள் எழுதிய நூல்களுள் மிகவும் பிடித்த நூல் எது?
இதற்கு நான் என்ன பதில் சொல்வது? நான் மட்டுமல்ல; எந்தப் படைப்பாளியும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள யோசிப்பார். ஒரு தாய்க்குப் பல பிள்ளைகள் இருந்தாலும், எந்தப் பிள்ளையை அவர் உயர்வாக நினைப்பார்? அதே போலத்தான் எனது நிலையும். எனது சிறுகதைத் தொகுப்பான ‘பாதாளி’க்கு எழுத்தாளர் இமையம், விருத்தாச்சலத்தில் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இமையம் பேசியதை உங்களுக்கான பதிலாகத் தரலாம். “ராஜேந்திரன் ஒவ்வொரு நூலுக்கும் ஒரு விவரிப்பு யுக்தியைக் கையாளுகிறார். செப்பேடுகள் என்றால் அதற்கொரு மொழிநடை, ‘வடகரை’க்கு வித்தியாசமான மொழிநடை,
‘1801’-க்கு வேறொன்று, ‘செயலே சிறந்த சொல்’லுக்குச் சுய எள்ளல் மொழி நடை. அதனால் ராஜேந்திரன் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் தனித்துவமானவை. தனி மொழிநடை, தனி விவரணை…” என்றார். இதன்படி எனக்கு, நான் எழுதிய எல்லாமும் பிடிக்கும். “எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும்” என்று மடி பிடித்து இழுத்தீர்களென்றால் வேறுவழியின்றி எழுதியதில் பிடித்தது, ‘காலா பாணி’ என்பேன். சாகித்திய அகாதெமி விருது வாங்கித் தந்ததற்காக அல்ல, சாதிகளால் பிரிந்து கிடக்கும் இந்தக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாக இணைந்து எழுச்சிப் போராட்டம் நிகழ்த்திய நாயகர்களின் வாழ்க்கையை அவரவர் ஜாதி, மத அடையாளங்களுடன் வெளிப்படுத்திய நாவல் ‘காலா பாணி’ என்பதால்.
ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு நூலைச் செம்பதிப்பாக கொண்டுவரும் எண்ணம் எப்படி வந்தது?
17, 18-ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழக வரலாற்று ஆவணம், பாண்டிச்சேரி அரசு 1996-களில் வெளியிட்ட ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு 12 தொகுதிகளும் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. பாண்டிச்சேரிக்குச் சென்று பெரிய புத்தகக் கடைகளில் விசாரித்தபோது “இல்லை சார், புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்கள். ஆனந்த ரங்கப் பிள்ளையின் வீட்டிற்குச் சென்று, அவரது பேரன் ஆனந்த ரவிசங்கரைச் சந்தித்தேன். அவரிடமும் தொகுப்பு இல்லை. வெண்ணிலாவிடமும், முருகேஷிடமும் இது குறித்துப் பேசினேன். பெரும் பொருட்செலவு ஆகும் என்று தெரிந்தது. இருப்பினும் பாண்டிச்சேரி நண்பர்கள் தமிழ்மணி, பேராசிரியர் நடராஜன், ருத்ர துளசிதாஸ் போன்றவர்களின் உதவியுடன் ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பைச் செம்பதிப்பாகக் கொண்டுவந்தோம்.
ஆனந்த ரங்கப்பிள்ளை ஏழு மொழிகள் தெரிந்தவர். அவரது நாட்குறிப்பில் அத்தனை மொழிகளும் கலந்திருக்கும். இன்றைய வாசகர்களால் ஆனந்த ரங்கப்பிள்ளை எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் ஆனந்தரங்கப்பிள்ளை தொகுப்பின் ஆங்கிலப் பதிப்பையும் ஒப்பிட்டு, தேவையான இடங்களில் குறிப்புகள் கொடுத்துச் செம்பதிப்பாகக் கொண்டுவந்தோம். எழுத்தாளர்கள் ஜெயமோகன், கி.ரா. ஜோடி குரூஸ், பேராசிரியர்கள் இ.சுந்தரமூர்த்தி, வெ.பக்தவத்சல பாரதி போன்றவர்கள் இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டினர். புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் வீ.முத்து பாண்டிசேரியில் பெரிய அளவில் அறிமுகக் கூட்டமொன்றினை நடத்தினார்.
சாகித்திய அகாதெமி விருது கிடைத்த செய்தி அறிந்தபோது, உங்கள் மனநிலை எப்படியிருந்தது?
சாகித்திய அகாதமி விருதுகள் டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்று 16-ஆம் தேதி நாளிதழ்களில் செய்தி வந்தது. ஏற்கெனவே எனது ‘‘வடகரை’’, ‘‘1801’’ ஆகிய எனது நாவல்கள் 2018-ஆம் ஆண்டு இறுதிச் சுற்றில் வந்த 7 புத்தகங்களில் இருந்தன. 2019-ஆம் ஆண்டு ‘‘1801’’ நாவல் இறுதிச் சுற்றில் இருந்தது. பெரும்பாலும் நான் எதிலும் தோற்றதில்லை. வெற்றி பெறும் நேரத்தில் பார்த்தால் தோற்றவனைவிட அதிகம் அடிவாங்கியிருப்பேன். எனது வாழ்வில் மூன்றாவது முயற்சி எப்போதும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் மூன்றாவது அடிவாங்கியபின் திருப்பி அடிப்பதுபோல, எந்த வருடத்திலாவது மூன்றாம் முறையாக எனது புத்தகங்கள் பட்டியலில் வந்தால் சாகித்திய அகாதெமி உறுதி என்ற நம்பிக்கையிருந்தது.
இந்த ஆண்டு எனது ‘‘1801’’, ‘‘காலா பாணி’’ புத்தகங்கள் இறுதிச் சுற்றில் இருந்ததை விருது அறிவித்த அன்று தெரிந்துகொண்டேன். விருது அறிவிப்பு தொலைக்காட்சியில் வந்தபோது என்னை மிகவும் எளிமையானவனாக உணர்ந்தேன். கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். எழுத்தால் கிடைத்த வெளிச்சம் கூச்சத்தைத் தந்தது. தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமே என்ற பயமும் வந்தது. எழுதுவதற்காக நான் நிறைய இழந்திருக்கிறேன். என் இழப்புகளுக்கு சாகித்திய அகாதெமி விருது மருந்திட்டிருக்கிறது.
அடுத்த படைப்பு?
நானூறு ஆண்டுகால ஆங்கிலேயர் ஆவணங்கள் சென்னை ஆவணக் காப்பகத்தில் நிறைந்திருக்கின்றன. ஏறக்குறைய 40 கோடி ஆவணங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. ஆங்கிலேய அதிகாரிகள்மீது குறை கூறி மனு செய்யும் சாதாரணகக் கிராமத்து விவசாயிகள், அரசாங்கப் பணத்தைக் கையாடிவிட்டு, உயிலும் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஆங்கிலேய அதிகாரிகள், தலைமைச் செயலாளருக்கு கொஞ்சமும் பயமில்லாமல், “உங்கள் தலையீடு தேவையற்றது” என எகிறும் நேர்மையான பணியாளர்களின் கடிதங்கள் முதலானவற்றிலிருந்து ஒரு சமூக நாவல் எழுத உத்தேசித்துள்ளேன். ரொம்பக் காலத்திற்கு எனக்குள் ஊறிக் கிடக்கும் கதையை எப்போது எழுதத் தொடங்குவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எழுத ஆரம்பித்துவிட்டால் ஒரே மூச்சில் எழுதிவிடும் உத்வேகம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது என்பதே எழுத்து எனக்குள் செய்யும் மாயமாக இன்றளவும் இருக்கிறது.
