ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் ஒரு நூலின் அதிகபட்ச விற்பனை என்பது 10,000 பிரதிகளாக இருக்கிறது. அதுவே, கேரளத்தில் ஒரு லட்சம் என்று சொல்லப் படுகிறது (தமிழக மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டது கேரளம்). தமிழில் 10 ஆயிரத்துக்குமேல் பிரதிகள் தாண்டாது என்ற மதிப்பீடுகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, ‘ஆயிஷா’ என்ற சிறார் இலக்கிய நூல் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையை எட்டியுள்ளது. இரண்டு லட்சமாவது பிரதியை 5.1.2023 அன்று அரும்பு சிறார் நூலரங்கத்தில் (பாரதி புத்தகாலயம்) திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி வெளியிட, மானசி (ஆயிஷாவை ஆங்கில மொழியாக்கம் செய்தவர்) பெற்றுக்கொண்டார்.
ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் பல ஆயிரம் பிரதிகள், பல பதிப்புகள் கண்டுள்ளது ஆயிஷா. மேலும், பல மாவட்டங்களில் ஜெராக்ஸ் நகலெடுத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த பதிப்புகள் இந்த மொழிகளில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. நாடு கடந்து, ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், அந்நாட்டு மொழிகளிலும் ஆயிஷா வெளிவந்துள்ளது. இலங்கையில் சிங்கள மொழியிலும் இந்நூல் பதிப்பாகியிருக்கிறது.
ஆசிரியர் நடராசன் எழுதிய இந்நூல் 1996-இல் ‘‘கணையாழி’’ இதழ் நடத்திய குறுநாவலுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றது. முதல் பரிசைத் தட்டிச் சென்ற இந்நூலை அப்போது ‘‘ஸ்நேகா பதிப்பகம்’’ வெளியிட்டது. அடுத்து வாசல் பதிப்பகம் வெளியிட்டது. 2005-ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் ஆயிஷாவை வெளியிட்டது. இதுவரை பாரதி புத்தகாலயம் இந்நூலின் 25 பதிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மேலும் பல பதிப்புகள் வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நூலை பரவலாக மாநிலம் முழுவதும் எடுத்துச் சென்றது.
குறும்படமாக, வீதி நாடகமாக…
‘‘ஆயிஷா’’ நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறும்படமாகவும் வெளியாகியுள்ளது. திரைப்படக் கலைஞர் அர்ச்சனா இதில் ஆசிரியர் பாத்திரத்தில் நடித்துள்ளார். சமம் அமைப்பு வீதி நாடகமாக ஆயிஷாவை சிறார்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. துவக்கத்தில் மாநில அரசு ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க இந்நூலைப் பயன்படுத்தியது. பிரெஞ்சு நாட்டில் இந்நூலை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்க அமர்வில் ஆசிரியர் நடராசன் கலந்து கொண்டிருக்கிறார். லட்சங்களில் பதிப்பிக்கப்பட்ட, நாடு கடந்து சென்ற டைந்துள்ள இந்நூலின் ஆசிரியர் நடராசன், ‘ஆயிஷா நடராசன்’ என்றே அழைக்கப்பட்டு அறியப்படுகிறார்.
ஆயிஷா உருவான கதை
‘‘ஆயிஷா’’ நூல் மட்டும் பரபரப்பாக விற்பனை ஆவது ஏன்? சிறார் முதல் பெரியவர் வரை ஏன் இந்த நூலை வாங்குகிறார்கள், படிக்கிறார்கள்? இந்நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? ‘‘ஆயிஷா’’ எவ்வாறு உங்களுடைய சிந்தனையில் ஊடுருவினாள்? ஆயிஷா ஏன் உங்களுடைய மனதின் குரலாக மாறினாள்?’ என ‘‘ஆயிஷா’’ நடராசனிடம் நான் கேட்டேன். ‘‘என்ன நீங்க? ஆயிஷா அவங்க டீச்சரிடம் கேட்டதுபோலக் கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கிறீர்களே?!’ எனக் கேட்ட ஆயிஷா நடராசன், உணர்ச்சி வசப்பட்டு ஆயிஷா உருவான கதை பற்றிப் பேசத் தொடங்கினார். கடலூரில் நடராசனின் மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு திண்டிவனம் கலைக்கல்லூரியில் பட்டப் படிப்பு சேர்ந்திருக்கிறார்.
அவருக்கு அறி வியலில் அளவு கடந்த ஆர்வமுண்டு. ஆனால், அறிவியல் படிப்பில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டு, தன்னுடைய உடலையே சோதனைக்கு உட்படுத்தினார். விஷப்பாம்பு கடித்தால் எப்படி விஷம் ஏறுகிறது, விஷத்தை எப்படி முறிப்பது என்ற ஆய்வில் அவர் ஈடுபட்டார். அதற்காக விஷப்பாம்புகளைப் பிடித்து தன்னைக் கடிக்கச் செய்து சோதனை நடத்தினார். இந்தப் பரிசோதனை துயரத்தில் முடிந்தது. அந்த மாணவன் இறந்துவிட்டார். திண்டிவனம் சென்று தன்னுடைய மாணவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்புகிற போதுதான், நடராசனின் சிந்தனைக்குள் ஆயிஷா ஊடுருவினாள்.
கேள்வி கேட்பதை ஒடுக்கும் கல்விமுறை
‘‘ஆயிஷா’’ நூல் இந்திய, தமிழகக் கல்வி முறை குறித்தும், பயிற்றுவிப்பு முறைகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியது. ஏட்டில் சொல்லப்படுகிற அறிவியல் கல்வி நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பற்றுப் போவது குறித்தும், குறிப்பாகப் பெண் கல்வி புறக்கணிக்கப்படுவது குறித்தும் பல கேள்வி களை எழுப்பியது. ‘‘ஆயிஷா’’ தன்னுடைய வகுப்பில் ஆசிரியர்களை நோக்கித் துளைக்கும் கேள்விகளைக் கேட்கிறாள். பெரும்பான்மையான ஆசிரியர்கள் இதற்காக அவளை அடிக்கிறார்கள். கேள்வி கேட்பதை ஒடுக்கும் இத்தகைய கல்வி முறை மாற வேண்டும் என்று இந்நூல் நமக்குப் பாடமெடுக்கிறது. அறிவியல் என்றால் என்ன? யார் ஒருவர் சரியான கேள்வியை எழுப்புகி றாரோ அவர் விடை தேடுவதில் பாதிக்குமேல் முன்னேறிவிட்டார் என்று பொருள். அவரால்தான் அந்தக் கேள்விக்கான சரியான விடையைக் கண்டடைய முடியும்.
“ஒரு கட்டத்தில் ஆசிரியர்கள் தன்னை அடிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆயிஷா, அடி வலிக்காமல் தனக்கு மரத்துப் போவதற்காக நைட்ரிக் ஆக்சைடு கரைசலை ஊசியாகத் தனக்குத் தானே போட்டுக்கொள்கிறாள்”. “இந்தாங்க ஸ்கேல்! என்னை அடிங்க பார்ப்போம்!” எனத் தன்னை நேசித்த வேதியியல் டீச்சரிடம் சொல்கிறாள். என்னே பரிதாபம்! வேதியியல் வகுப்பில் நைட்ரிக் ஆக்சைடு வாயுவின் குணத்தைப் பற்றியும் அது மரத்துப்போவதற்காகப் பயன்படுவது குறித்தும் வேதியியல் ஆசிரியர் பாடம் எடுத்திருக்கிறார். அதை உள்வாங்கிய ஆயிஷா வகுப்பறை வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக தன்னையே சோதனைக்குள்ளாக்கி உலகைவிட்டுப் பிரிந்தாள். இந்நூலின் கடைசிப் பகுதியில் ஆயிஷாவின் வாழ்க்கையில் இருந்து ஒரு கேள்வியை நூலாசிரியர் நடராசன் எழுப்புகிறார்.
“மிஸ் கரோலின் ஏர்ஷல் (யூரேனஸ் கோள் மற்றும் வால்நட்சத்திரங்களைக் கண்டறிந்த வானியலாளர்), போலவோ மேரி கியூரி (தனது கண்டுபிடிப்பிற்காக இருமுறை நோபல் பரிசு பெற்றவர்) போலவோ, நம்ம நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண்கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்?” “இந்தக் கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தங்கள் சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள் தேடட்டும்” என நூலாசிரியரே பதிலளித்து முடிக்கிறார்.
சிறார் இலக்கிய வரலாற்றில்…

‘‘ஆயிஷா’’ நூல் ஏன் லட்சக் கணக்கில் பதிப்பாகிறது; ஏன் நாடு கடந்து செல்கிறது என்பதற்கு இனியும் விளக்கம் தேவையில்லை. தமிழகத்தில் சிறார் இலக்கிய வரலாற்றில் ‘‘ஆயிஷா’’ நிச்சயம் தனது முத்தி ரையை பதித்துள்ளது. ‘‘ஆயிஷா’’வுக்கு முன், ‘‘ஆயிஷா’’வுக்கு பின் என சிறார் இலக்கியத்தை வரையறுக்கும் அளவுக்கு வகுப்பறை, சமூகச் சூழலிலும் இந்நூல் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. ‘‘ஆயிஷா’’ நூல் வெளியான பிறகு, தமிழ் வாசகர் பரப்பில் ஏராளமான சிறார் எழுத்தாளர்கள் உருவா னார்கள். ஏராளமான நூல்கள் வெளிவந்து கொண்டி ருக்கின்றன. வேறு பல நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில், தமிழகத்தில், சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சி தாமதமாகவே வருகிறது. ஆயிஷா இந்த மறுமலர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.
உலகில் சிறார் இலக்கியத்தின் முன்னோடி டென்மார்க் நாடு என்றாலும், சோவியத் யூனியன் படைப்புகள் மூலமாகவே நாம் சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினோம். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘‘ப்ராவ்தா’’ குழந்தைகளுக்கென தனி இதழை நடத்தியது. மேலும், 60 மொழிகளில் 60 சிறார் இதழ்களை சோவியத் யூனியன் பதிப்பித்தது. சமூகத்தில் மேம்பட்ட முற்போக்கு சிந்தனையை வளர்த்தெடுப்பதில் ரஷ்ய சிறார் இலக்கியங்கள் எந்த வகையான பங்களிப்பை செய்திருக்கும் என்பதை நம்மால் உணர முடியும்.
இனவெறி முறியடிப்பில் குழந்தைகளின் பங்கு
உலகளவில் சிறார்களுக்காகவே பல படைப்புகள் வெளிவருகின்றன. மேலும், பல நாவல்கள், கதைகள் சிறார்களுக்காக எளிமைப்படுத்தப்பட்டு, குழந்தைகள் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்காவில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தங்களு டைய குழந்தைகளைப் பொதுப்பள்ளியில் சேர்க்க முடியாது. வரலாற்றில் ஒரு காலகட்டம் வரையில் பொதுப்பள்ளிகள் வெள்ளையர்களுக்கு மட்டுமே ஆனது.
ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் செயல்பட்டன. இந்த விதியை முறியடித்தவர்தான் ரூபி பிரிட்ஜஸ் என்ற 6 வயது ஆப்ரிக்க அமெரிக்கக் குழந்தை. இவரது பெற்றோர்கள் மிசிசிப்பி மாகாணத்தில் வெள்ளையர்கள் மட்டுமே படித்த பள்ளியில் தங்கள் மகள் படிக்க வேண்டும் என உறுதியாக நின்றதற்காகப் பல இழப்புகளைச் சந்தித்தார்கள். மனிதத் தன்மையற்ற தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி ரூபி கல்வி கற்று, ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் உரிமைக்கான போராளியானார். இது The story of Ruby Bridges என்ற சிறார் இலக்கியமாக வெளி வந்தது.
அமெரிக்காவில் இனவெறியை முறியடித்த தில் குழந்தைகளுக்கும் பங்குள்ளது என்பதை இந்நூல் வாயிலாக உணர முடியும்.சிறார்களுக்காக ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளப் பாரதி புத்தகாலயம், ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ தற்போது ‘அரும்பு’ என்கிற பிரத்யேக சிறார் நூலரங்கத்தைத் துவக்கி, நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது பல சிறார் எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கான படைப்புகளை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். கடந்த புத்தாண்டு தினத்தில் அரும்பு நூலரங்கில் ஆயிஷா நடராசன் எழுதிய 15 சிறார் நூல்கள் வெளியிடப்பட்டன.
இன்றைய சிறார்கள்தான் இந்தியாவின் எதிர் காலம். ஆரோக்கியமான, அறிவியல் பூர்வமான ஒரு சமூகத்தை வளர்த்தெடுத்திட, இன்றைய சிறார்களுக்கு சீரான சிறார் படைப்புகளை நாம் உருவாக்கி அளித்திட வேண்டும். இந்த இலக்கியங்களை சிறார்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் உரியது.
