ரா.பி. சகேஷ் சந்தியா
‘புனைவுலகில் பிரதிநிதித்துவம்
என்பது சமூக இருத்தலைக் குறிக்கிறது.
பிரதிநிதித்துவம் இல்லையென்றால் அது
அழித்தலுக்கான குறியீடு.”
என்கிறார் ஜார்ஜ் கெர்ப்னர் எனும் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர். இது சிறார் இலக்கியத்திற்கு முற்றிலும் பொறுந்தக் கூடியது. சமூகத்தில் குழந்தைகளின் இருத்தலைப் பெரும்பாலும் பலர் மறந்து போகிறார்கள். குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிய விரும்புவதில்லை. அவர்கள் மனநிலை என்ன என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. சமூகத்திடமிருந்தும், வாழும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், இயற்கையின் கொடைகள் அனைத்திலிருந்தும் குழந்தைகள் மிக அற்புதமான பாடங்களையும் அனுபவங்களையும் கற்கிறார்கள்.
இது சமூகத்திடமிருந்து கற்றல் என்று கூறலாம். இந்தக் கற்றல் அனுபவங்களை எல்லாம் ஆவணமாக்குவதே சிறார் இலக்கியமாக இருக்கும்.
சிறார்களின் அனுபவங்களை மற்றவர்கள் அதிகம் பதிவு செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளே பதிவு செய்வது சிறப்பு. அண்மைக் காலங்களில் சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சீரிய முயற்சியில் பல படைப்புகள் குழந்தைகளுக்காக வெளிவருகின்றன என்றாலும் குழந்தைகளே எழுதிய படைப்புகள் மிகக் குறைவு.

சமூகத்திடமிருந்து குழந்தைகள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களே அவர்கள் மொழியில் பதிவு செய்தால் மிகச் சிறந்த ஆவணமாக இருக்கும். அந்த வகையில் 16 குழந்தைகள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ‘மீனு மீனு சாளை மீனு” மிகச் சிறந்த ஆவணமாகும்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் வாசிப்பை எடுத்துச் செல்லும் வாசிப்பு இயக்கத் மாநில கருத்தாளர், தோழர் சண்முக வடிவு இந்நூலை ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்துள்ளார். ஒருவாரம் கடந்த பிறகு அதே பள்ளிக்கும் வாசிப்பு இயக்கப் பணிக்காக சென்றபோது அம்மாணவி தோழரிடம் பகிர்ந்து கொண்டதை நாம் விரிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மீனு மீனு சாளை மீனு நூலை வாசித்த பிறகு எங்கள் தெருவில் மீன் விற்கும் அம்மாக்களைப் பார்க்கும் போது அவர்களின் வலியும் வேதனையும் தான் தெரிகிறது. இதுவரை அவர்கள் மீனை மட்டுமே சாப்பிட்ட எனக்கு இப்பொழுதுதான் அவர்கள் வாழ்வின் சிக்கல்கள் புரிகிறது.
எங்கள் வீட்டுத் திண்ணையில் கூட அவர்களின் மீன் கூடையை இறக்கவிடாமல் முற்றத்தில்தான் இறக்க அனுமதிப்பார்கள். அது எனக்கு இந்நூலை வாசித்த பிறகு மன உறுத்தலை ஏற்படுத்தியது.
தலை சுமட்டு மீனவப் பெண்களிடம் பத்து ரூபாய்க்குப் பல மணிநேரம் பேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். இனிமேல் நாங்கள் பேரம் பேசி அவர்கள் உழைப்பை குறைக்க மாட்டோம்.
அவர்கள் காலையில் எப்போது சாப்பிட்டிருப்பார்கள்? மதியம் எப்போது சாப்பிடுவார்கள்? சிறுநீர் எங்கு கழிப்பார்கள் என்றெல்லாம் அவர்களைப் பற்றி சிந்திக்கும் போது அவர்களின் அன்றாட வேதனை புரிகிறது.
அவர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? யார் தலைவாரி விடுவார்கள்.
அவர்களை இனி நான் மரியாதையாக அழைப்பேன், அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பேன். எல்லாரும் சமம்…
இலக்கியம் சமூகத்தில் என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்பதற்கு இந்நூல் மிகச் சிறந்த சான்று. சமூகத்திடமிருந்து இலக்கியமும் இலக்கியத்திடமிருந்து சமூகமும் கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் சரியானது. அந்த வகையில் மீனு மீனு சாளை மீனு சமூகத்திடமிருந்து கற்ற இலக்கியம் சமூகத்திற்குக் கற்றுகொடுக்கும் இலக்கியமாகவும் உள்ளது.
சிறார் இலக்கியம் எப்படி உருவாகிறது
குழந்தை இலக்கியத்தை உருவாக்க நாம் அதிக சிரமப்படத் தேவையில்லை. அது மிக எளிதாகவும், இயல்பாகவும் அமையும், அமைய வேண்டும். அது குழந்தைகளைப் போன்றே உள்ளதை உள்ளபடி கூறிச் செல்லும். மீனு மீனு சாளை மீனு நூல் உருவாக்க அனுபவத்தில் நாம் கற்ற பாடம் அதுவே. 06.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியைச் சேர்ந்த 65 வயது செல்வம் என்ற தலைசுமட்டு மீனவ முதியவரை அரசுப் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கிவிட்டது ஊடகங்களில் பெரும் செய்தியானது. இது கடலோர மீனவ கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வு என்றாலும் ஊடக வெளிச்சத்தால் பேசுபொருளாக மாறியது. இது குறித்த குழந்தைகளின் மனப்பான்மை என்ன? அவர்களின் புரிதல் எப்படி உள்ளது? இதிலிருந்து அவர்கள் கற்று கொள்ளும் பாடம் என்ன? என்பதை அறிய அவர்களின் அனுபவங்களைக் கதைகளாக எழுதிக் கேட்டோம், அவற்றில் 16 சிறுகதைகளைத் தொகுப்பாகியுள்ளோம்.
கதைகள் சமூகத்தின் வலிகளை ஆவணமாக்கும். ஆய்வுக் கட்டுரைகளைக் காட்டிலும் மிகச் சிறந்த ஆவணம் கதைகள். ஆய்வுகளில் சொல்ல முடியாத அனைத்து உணர்வுகளையும் பதிவு செய்ய மிகச் சிறந்த ஊடகம் கதைகள். குழந்தைகள் தங்கள் மனதில் பட்டதை அப்படியே எழுதியுள்ளார்கள். உழைக்கும் வர்க்கம் எல்லா சமூகத்திலும் ஒரே மாதிரியான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளது என்பது தெளிவு. அதிலும் பெரியவர்களைக் காட்டிலும் பெண்களும், சிறுவர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் காண முடிகிறது.
தலை சுமட்டாக மீன் விற்பனை செய்யும் அனைத்துப் பெண்களும் வாழ்வின் மிகப்பெரும் வலியையும் வேதனையையும் சேர்த்தே சுமக்கிறார்கள் என்பதைக் கதைகள் மூலம் அறிகிறோம். இந்நூலின் அனைத்துக் கதைகளில் வரும் பெண் கதை மாந்தர்களும் அன்றாடம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் போல் தோன்றிலும், கனத்த இதயத்துடனே வாசிக்க வேண்டியுள்ளது. கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளியான கணவனைப் பராமரிக்கும் பெண்கள், குழந்தைகளால் கைவிடப்பட்ட அம்மாக்கள், குடிகாரக் கணவன்களால் குடும்பத்தின் அனைத்துப் பாரங்களையும் சுமக்கும் பெண்கள் என்று அத்தனையும் எல்லா சமூகத்திற்கும் பொருந்துவதுபோல் மீனவ சமூகத்திற்கும் பொருந்தும் என்பது உண்மைதான் என்றாலும் மீன்காரி, நாற்றம் என்ற தொழில் தீண்டாமையும் சேர்வதால் கூடுதல் வலிநிறைந்த கதைகளாக மாறுகின்றன.
குழந்தைகளின் அம்மா, பாட்டி, உறவினர்கள், அண்டைவீட்டார்கள் மட்டுமே இக்கதைகளின் மாந்தர்களாக உலா வருகிறார்கள். ஆடு, மாடு, கோழி, முயல் போன்ற உயிரினங்களை மட்டுமே கதை மாந்தர்களாகக் கொண்ட மரபுச் சிறார் கதைகளை மறுகட்டமைப்புச் செய்கிறார்கள். உழைக்கும் பெண்களின் வலிகளை கேட்டது, பார்த்தது, அனுபவித்ததைக் கதைகளாக எழுதுகிறார்கள். அனைத்தும் கதைகள் என்றாலும் இதில் சமூகத்தில் நடக்காத எந்த கற்பனையும் மாந்தர்களும் இல்லை.
குடும்ப வறுமைச் சூழல், குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் படும் துன்பம், அவர்களின் முன்னெடுப்புகள் அனைத்தையும் குழந்தைகள் எப்படிப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு என்பதை பெரியவர்கள் உணர வேண்டும்.
குழந்தைகளுக்கான இலக்கியங்கள் அவர்களின் அன்றாட அனுபவங்களின் தொகுப்பாக அமைய வேண்டும். சமூகக் கற்றல் என்பது சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமானது. புராணக் கதைகள், மூட நம்பிக்கைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். சமய நம்பிக்கைகள், சாதியத் தற்பெருமைகள், இனத்தூய்மை வாதம் போன்ற கருத்துகளைத் தாங்கிய படைப்புகள் குழந்தை இலக்கியத்திற்குள் வரக்கூடாது. வாழும் மனிதர்களின் வாழ்வியலில் வர்க்கப் புரிதலோடு எழுதப்படும் கதைகள் மட்டுமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் வாசிக்கிறார்கள்
குழந்தைகளே எழுதிய கதைகளை குழுவாக இணைந்து குழந்தைகள் வாசிக்கிறார்கள். இது அவர்களின் வாசிப்பு அனுபவத்தைத் தூண்டுகிறது. குழந்தைகளை எழுதத் தூண்டும்போது அவர்கள் சமூகத்தைக் கூர்ந்து பார்க்க முற்படுகிறார்கள். தாங்கள் பார்த்ததை, அனுபவித்ததை வியந்ததைப் பதிவு செய்கிறார்கள். கேள்விகளையும், எதிர்க்கேள்விகளையும் உருவாக்குகிறார்கள். சமூகம் அவர்களை வாசிக்க அனுமதிப்பது இல்லை. குழந்தைகள் வாசிப்பதுதான் சமூக மாற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அடிப்படை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
பள்ளிப் பாடங்களை திணிக்காமல், இயல்பான முறையில் அவர்கள் குடும்பத்தில் சமூகத்தில், நண்பர்களிடம் கற்றதைக் கதைகளாகத் தொகுக்க வேண்டும். இதுவே பள்ளிப் பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும்.
பள்ளியில் நாள்தோறும் வாசிப்புக்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் இணைந்து வாசிக்க வேண்டும். வாசித்த நூல்களைத் திறனாய்வு செய்ய வேண்டும். ஒரு பக்கம் நூல் திறனாய்வு செய்து அந்தத் தாளைப் பள்ளியில் அறிவிப்புப் பலகையில் தொங்க விட வேண்டும்.
பள்ளியில் நூலகம் வேண்டும், அங்கு அவர்கள் அமர்ந்து வாசிக்கப் பயிற்சிப்படுத்த வேண்டும். இது சமத்துவச் சமூகம் மலரவும், அறிவுத் தெளிவு பெறவும் உதவும்.
குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றால் அவர்களே எழுதும் கதைகள் இன்னும் அதிகம் தொகுக்கப்பட வேண்டும். அந்த வகையில் மீனு மீனு சாளை மீனு குழந்தைகளுக்கான சிறந்த ஆவணமாகும். சிறார்களுக்குச் சமூகத்தைக் கூர்ந்து நோக்கப் பழக்கப்படுத்த வேண்டும். அத்தகைக்கும் கேள்வி கேட்டு சமூகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் சிறார்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட முடியும்.
