சுஜாதா (மாயாபஜார்)
குழந்தைகளுக்கு எந்தக் கவலையும் இருக்காது. உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள் குழந்தைகள்தாம், நாமும் குழந்தைப் பருவத்துக்கே சென்றுவிட வேண்டும் என்று ஒருகாலத்தில் எல்லாரும் சொல்லிக்கொண்டிருந்தோம். இன்றோ சிறார்களுக்கும் ஓராயிரம் கவலைகள், வருத்தங்கள் வீட்டிலும் நாட்டிலும் பள்ளியிலும் இருக்கின்றன. பாடச் சுமை ஒருபக்கம் என்றால், கிடைக்கும் நேரத்தை எல்லாம் கேட்ஜெட்கள் பறித்துக்கொள்கின்றன. இவற்றையெல்லாம் மீறி ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்றால், கதை படிப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். அல்லது அந்தக் கதை இனிமையான வாசிப்பு அனுபவத்தைத் தர வேண்டும். சிறார்களுக்கு இருக்கும் நெருக்கடி போன்றே சிறார்களுக்கு எழுதும் எழுத்தாளர்களுக்கும் நெருக்கடி இன்று இருக்கிறது. எழுதுவதிலேயே சிறார்களுக்கு எழுதுவதுதான் மிகவும் கடினமானது. பொறுப்புணர்வு மிக்கது.

‘கழுதை வண்டி’ நாவலா என்றால், நாவல். 12 சிறுகதைகளின் தொகுப்பா என்றால், தொகுப்பு.தனியனுக்கு கழுதை வண்டி மூலம் ஓர் அதிசய அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்குள்ள பழைய பொருள்களை, கழுதை வண்டி மூலம் ஊர் ஊராக எடுத்துச் சென்று, பொருள்களைப் பண்டமாற்றிக்கொள்கிறான். அப்படி அவன் செல்லும் ஊர்களில் பண்டத்தை மாற்றுவதற்காக ஒரு கதையைச் சுவாரசியமாகச் சொல்கிறான்.
கதையில் அலெக்சாண்டரும் புருஷோத்தமும் வருகிறார்கள். சிறுதானிய உணவின் மகத்துவமும் சொல்லப்படுகிறது. பறவைகளுக்குச் சுதந்திரமும் கிடைக்கிறது. மன்னர் திருந்துகிறார். இறுதியில் தனியனின் கதையும் இதில் இணைந்துவிடுகிறது. கதைகளில் வரும் வழக்கமான கழுதையாக இதில் காட்டாமல், கழுதைக்கு வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருக்கும், சிறார்களுடன் நெருங்கி உறவாடும் தோழர் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளைகொண்ட ‘ஆயிஷா’வைப் போல ‘கழுதை வண்டி’யும் வாசகர்களின் அன்பைப் பெறும்.
