புவனா சந்திரசேகரன்
சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் நல்ல நல்ல சிறார் நூல்களை வெளியிடும் அன்புத் தோழி பிரேமா இரவிச்சந்திரனின் பணி உண்மையில் போற்றத்தக்கது. பூஞ்சிட்டு மின்னிதழில் தொடர்ந்து எழுதிவரும் இவர், பூஞ்சிட்டு ஆசிரியர் குழுவில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் நல்ல பரிச்சயமானவர்தான். அழகான தமிழில் தெளிவான நடையில் இவருடைய எழுத்து சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கக் கூடியது. இவருடைய முந்தைய நூலான மாமல்லபுரம் பற்றிய பயணக் கட்டுரைக்கு வாழ்த்துரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நல்லதொரு பயணக் கட்டுரையைக் கதைபோலவே விறுவிறுப்பாகப் படைத்து, மாமல்லபுரத்தைப் பற்றி நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத அனைத்துத் தகவல்களையும் தொகுத்து வழங்கியிருந்தார். மாமல்லபுத்திற்குப் பயணிக்க நினைக்கும் அனைவரும் கையேடாக எடுத்துச் செல்லவேண்டிய நூல் அது. அதையடுத்து வெளிவந்திருக்கும் இந்த நூலான, ‘கனவில் வந்த மண்குதிரை’ யை வாங்கி வாசிப்பதற்காக ஆவலுடன் எடுத்தேன். என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம்கூட வீண் போகவில்லை. சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்த முறை சென்னையில் நடைபெற்ற 47 ஆவது புத்தகக் கண்காட்சியில் ஆசிரியரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சியுடன் சின்னக் குழந்தை போலப் பங்கேற்கவும் முடிந்தது. முதன்முறை சந்தித்தவர் போல இல்லாமல் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகிய நண்பரைப் போல இனிமையாகப் பேசிப் பழகிய திருமதி. பிரேமா இரவிச்சந்திரனின் நற்பண்புகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. மனக் கருவூலத்தில் பொதிந்து வைக்க வேண்டிய அற்புதத் தருணங்கள் அவை. நூலுக்குள் செல்வோம் இனி. ‘கனவில் வந்த மண் குதிரை’ என்கிற தலைப்பே நமது ஆர்வத்தை பெருமளவு தூண்டிவிடுகிறது. படிக்க ஆரம்பித்தால் அந்த வாசிப்பு ஆர்வத்திற்கு நல்ல தீனி கிடைத்தது. நேரம் போனதே தெரியவில்லை. முழுவதுமாக முடித்து விட்டுத்தான் கீழே வைத்தேன்.
எழுத்து நடை நல்ல விறுவிறுப்பாக நம்மை நகர விடாமல் கட்டிப்போடும் அளவு அமைந்திருந்தது. அதற்கே தனித்திறமை வேண்டும். வாழ்த்துகள் பிரேமா! சிறார்களின் கவனத்தை வேற்று மொழிக் கதைகளில் இருந்து தமிழ்மொழியின் பக்கம் திருப்புவது என்பது மிகப் பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. இன்று அதற்கான விழிப்புணர்வு நிச்சயமாக உருவாகிக்கொண்டு வருகிறது என்று சொல்லித்தான் ஆகவேண்டும். திரு. விழியன், திரு. உதயசங்கர், திரு. பாலபாரதி, திரு. விஷ்ணுபுரம் சரவணன், திருமதி. ஞா. கலையரசி போன்ற எழுத்தாளர்கள் தங்களுடைய நேரத்தை சிறார் கதைகளுக்காகவே செலவழித்து வருகிறார்கள். நாங்கள் நடத்திவரும் பூஞ்சிட்டு மின்னிதழ் போன்ற முயற்சிகளும் ஆங்காங்கே தலையெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் போதவில்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி தருவது போலத்தான் இன்றைய முயற்சிகள் இருக்கின்றன. எவ்வளவு முயன்றாலும் போதவில்லை. இன்னும், இன்னும் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதைப் போன்ற சமயத்தில் திருமதி. பிரேமா இரவிச்சந்திரன் தனது எழுத்தின் மூலம் சிறார் இலக்கிய வளர்ச்சியில் சிறப்பான தொண்டாற்றி வருகிறார்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தினம் தினம் புதிதாக முளைக்கும் விளையாட்டுகள், முக்கியமாக, காணொளி விளையாட்டுகள் (video games), குழந்தைகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கின்றன. கணினியைக் கையாளும் திறமை சிறார்களிடம் அற்புதமான வரமாக அமைந்துவிட்டது. இவை மட்டுமல்லாமல் தங்களுடைய அலுவல்களின் பரபரப்பில் தங்களைத் தொலைத்துவிடும் பெற்றோர்களும் குழந்தைகளுக்காக, குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கத் தவறுகிறார்கள். பணம் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர், அதற்காகவே உழைப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் குழந்தையின் வளர்ச்சி என்பது வெறும் பணத்தால் விலைக்கு வாங்கும் வசதிகளால் இல்லை என்பதை உணரத் தவறுகிறார்கள். எல்லோரையும் நான் குற்றம் சாட்டவில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான குடும்பங்களின் நிலை இதுதான்.
ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பெற்றோர் காட்டும் அன்பு, உடனிருந்து அவர்கள் வழிகாட்டும் விதம், தங்களுடைய நேரத்தைக் குழந்தைகளுக்காகவே செலவிடுதல் இவற்றைத் தான் சார்ந்திருக்கிறது. குழந்தையின் மன ஏக்கத்தைப் பணத்தால் போக்க இயலாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் புத்தகங்கள் நல்ல நண்பர்களாகச் செயல்படுகின்றன. குழந்தைகளின் மனம் கவரும் வகையில் எழுதப்பட்டு, சிறந்த கருத்துகளையும், அறிவுரைகளையும் தனக்குள் அடக்கிக்கொண்டு நேசக்கரம் நீட்டும் புத்தகம், ஒரு குழந்தைக்கு மிகச் சரியாக வழிகாட்டும் நல்ல நண்பனாகச் செயலாற்றுகிறது. முதல் அத்தியாயத்திலேயே கதை நம்மைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நிலன் மிகவும் அழகான பெயர். நிலன் தன் நண்பர்களுடன் விளையாடும் காட்சியில் இயல்பாக ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர்.
குழந்தைகளின் வளர்ச்சியில் விளையாட்டு மிகவும் அவசியம். ஓடியாடும் விளையாட்டைப் பற்றிக் கூறுகிறேன். உட்கார்ந்த இடத்திலேயே விளையாடுவதைப் பற்றி அல்ல. தோட்டமும், தோட்டத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியும் ஆசிரியரின் அழகிய வர்ணனையால் தத்ரூபமாகக் கண்முன்னே காட்சிகளாக விரிந்தன. சிறகடிக்கும் பட்டாம்பூச்சியைக் குழந்தைபோலவே நானும் மனக்கண்ணில் கண்டு இரசித்தேன். பட்டாம்பூச்சியைப் பார்த்த மகிழ்ச்சியில் பாட்டியுடன் சிறுவர்கள் நடத்தும் உரையாடல் படுஇயல்பு. கேள்விகளும், கேள்விகளுக்கான பதில்களும் நிறையத் தகவல்களைச் சுமந்து வந்தன. கேள்வி கேட்பது குழந்தைக்கே உரித்தான உரிமை. விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அந்தக் கேள்விகளில் தொக்கி நிற்கிறது. குழந்தைகளின் கேள்விகளை அலட்சியம் செய்யாமல் பதில் தர வேண்டியது பெரியோரின் கடமை. அதற்கான பொறுமை, தாத்தா, பாட்டிகளிடம் கொட்டிக்கிடக்கிறது. இங்கும் நிலனின் பாட்டி, குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் கூறியபடி, பட்டு நூல் தயாரிப்பைப் பற்றித் தெள்ளத் தெளிவாக விளக்கி விடுகிறார். எத்தனை தகவல்கள்! பெரியவர்களும் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம். பட்டுப்பூச்சிகள் பட்டுக்காகக் கொல்லப்படுவதைக் கேட்டு, குழந்தைகள் மனம் வருந்துகிறார்கள். நாமும்தான். அஹிம்சைப் பட்டு ஏற்கெனவே இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதுவும் பிரபலமடைய வேண்டும். சிறுவர்கள் நினைத்தால், அவர்கள் வளர்ந்து புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்து பட்டுப்பூச்சிகளின் உயிரைக் காப்பாற்றலாம். அடுத்ததாக கிராமத்தை நோக்கிப் பயணம். சின்ன வயதிலேயே வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆசைப்படும் சிறுவன்.

குழந்தை மனதில்தான் எவ்வளவு ஆசைகள்,ஆர்வம்! புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளச் சளைப்பதில்லை குழந்தைகள். குழந்தைகளின் ஆர்வத்தையும், திறனையும் சரியான நெறிமுறைகளில் திசைதிருப்பிப் பெரியவர்கள் வழிகாட்ட வேண்டும். திருவிழா என்பது ஓர் உன்னதமான விஷயம். திருவிழாவில் வெறும் தெய்வவழிபாடு மட்டும் அல்ல. பல்வேறு சிறு தொழில்களின் வளர்ச்சி, சிறு வியாபாரிகளின் வியாபாரப் பெருக்கம் என்று பல விதமான பலன்களைத் தருபவை திருவிழாக்கள். இவற்றைத் தவிர சொந்த, பந்தங்களை, நண்பர்களைக் குடும்பங்களோடு சந்தித்து அளவளாவி, நேரம் செலவிடும் வாய்ப்பும் திருவிழாக்களில் கிடைக்கிறது. ஊரே ஒன்று கூடி நிற்கும்போது மனித நேயமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்கின்றன.
திருவிழாவில் தேர் இழுக்கப்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஊர் கூடித்தேரிழுப்பது என்று அடிக்கடி நாமும் நமது உரையாடலில் பிரயோகிக்கிறோம். ஆனால் அதற்குமேல் அதைப் பற்றி யோசித்ததில்லை. ஊர் மக்களின் ஒற்றுமையைக் குறிப்பதற்காக அப்படிக் கூறுவதுண்டு. இந்தத் தேர் எப்படி அமைக்கப்படுகிறது, அதில் உள்ள தொழில்நுட்பம், கணிதம் என்னென்ன என்று அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்கியிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தேரின் சக்கரங்கள் எப்படி அமைய வேண்டும், தேரின் மேற்பகுதியில் அலங்காரத்திற்காக அமைக்கப்படும் பொம்மை, திரைச்சீலை போன்ற பொருட்களின் எடையைக் கூடத் துல்லியமாகக் கணக்கிலெடுத்துத் தேரை அமைக்கிறார்கள் என்கிற உண்மை, நமது முன்னோரின் அறிவுத்திறனை உலகிற்குப் பறைசாற்றுகிறது. தேர் எப்படித் திரும்புகிறது என்பதைக்கூட நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்ததாகத் தோட்டத்திற்குச் செல்லும் நிலன், தாத்தாவுடன் நாமும் செல்கிறோம். ஆர்வத்துடன் விவசாயம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காகவே நாமும் பயணிக்கிறோம். மண்வளம் பற்றிய பல விவரங்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.
மண்புழுக்கள் நிலத்திற்கு ஆற்றும் பணி எவ்வளவு முக்கியமானது என்கிற தகவலை அறிந்துகொள்ளும்போது நிலனோடு சேர்ந்து வாசகர்களாகிய நாமும் வியந்து நிற்கிறோம். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இவற்றைத் தவிர்க்க வேண்டியதன் பின்னணியில் உள்ள காரணம் மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றில் மிக முக்கியமான கருத்து நெகிழி உபயோகத்தைத் தவிர்ப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இலைகளை உணவு உண்பதற்கும், கட்டிக்கொடுப்பதற்கும் பயன்படுத்தியது எவ்வளவு நல்ல விஷயம்! உபயோகிக்க எளிதாக இருக்கிறது என்கிற காரணத்தால் மட்டுமே நெகிழியை, நமது தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாற்றிக் கொண்டு விட்டோம். இனியாவது நமது முன்னோர் வழியில் சென்று மண்பாத்திரங்கள், இலைகள் போன்றவற்றை உபயோகித்து நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறைக்க வேண்டும். மக்கிப்போகும் பொருட்களையோ, மீள் சுழற்சிக்கு ஏற்றவையான பொருட்களையோ தேர்ந்தெடுத்து அவற்றை மட்டுமே உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகள் மனங்களில் இந்த விஷயம் பதிந்து விட்டால் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். சுற்றுச்சூழலை அவர்களே பாதுகாக்க முனைவார்கள்.
இவற்றை அடுத்து, களிமண்ணால் பொம்மைகள் செய்து தண்ணீரில் கரைப்பது பற்றிய விளக்கம், மரப்பாச்சி பொம்மைகள் பற்றிய தகவல்கள், தற்காப்புக் கலைகளின் அவசியம், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள், உறவுமுறைகளின் பட்டியல், சென்னையின் பல பகுதிகளுக்குப் பின்னால் இருக்கும் அரிய தகவல்கள் எல்லாவற்றையும் தெளிவான முறையில் விளக்கியுள்ளார் ஆசிரியர். அதுவும் உறவுமுறைகளை விளக்கியது போதாது என்று அழகாகப் பட்டியலிட்டுத் தந்தது எனக்கு மிகவும் பிடித்தது. நிலன் என்ற சிறுவனுக்கு விடுமுறை நாட்களில் பொழுதைப் பிடித்துத் தள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய தாத்தாவும், பாட்டியுமே அவனுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் தருவதோடு மட்டுமல்லாமல் அவனுடைய பொது அறிவையும் சேர்த்து வளர்க்கிறார்கள்.
குழந்தை வளர்ப்பில் தாத்தா, பாட்டியின் பங்கு முக்கியமானது. இன்றைய சிறு குடும்பங்கள், அம்மா, அப்பா, இவர்களுடன் ஒரே ஒரு குழந்தை என்று குறுகி விட்டன. இந்தச் சூழ்நிலையில் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகள் விரைவில் அழிந்துதான் போய்விடும். அதிலும் அன்னை, தந்தை இருவரும் வேலைக்குப் போகும் நிலையில் அவரவர் அலுவலகப்பணி, அதன் சுமை, மேலே மேலே முன்னேறுவதற்கான தீராத தாகம் இவை சவாலான விஷயங்களாக இருப்பதால் குழந்தை வளர்ப்பில் அவர்களால் அதிகம் கவனம் செலுத்த முடிவதில்லை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. இன்றைய சமுதாயத்தின் தேவை அப்படி இருக்கிறது. மதிப்பு, மரியாதை, பணம், அந்தஸ்து ஆகியவை இன்று அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தைக்காக செலவழிக்கும் நேரத்தைப் பணத்தால் ஈடுசெய்ய முடியாது. வேறு வழியின்றி சிறார்களும் கணினித் திரையில் மூழ்கி விடுகிறார்கள். இப்படிப்பட்ட இன்றைய வாழ்க்கையில்தான் தாத்தா, பாட்டியின் உதவி குடும்பங்களுக்குத் தேவை. தாத்தா, பாட்டி இல்லாத குடும்பங்கள் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோரின் உதவியையாவது பெற்று மகிழலாம். மொத்தத்தில் அற்புதமான கருத்துகளையும், உன்னதமான நோக்கத்தையும், பல்வேறு பொது அறிவுத் தகவல்களையும் உள்ளடக்கிய இந்த நூலைச் சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் படித்து மகிழலாம்.
இதுபோன்ற பல்வேறு நூல்களை மேன்மேலும் எழுதி இலக்கியப்பணி ஆற்ற ஆசிரியருக்கு அன்புக் கட்டளை இடுகிறேன். ஏற்கெனவே நிறைய விருதுகளைப் பெற்றிருந்தாலும் எளிமையாகவும், அடக்கத்துடனும், நற்பண்புகளோடும் திகழும் திருமதி. பிரேமா இரவிச்சந்திரன், எழுத்துலகில் நீண்ட நாட்கள் வெற்றி நடைபோட மனதார வாழ்த்துகிறேன்.
