முனைவர் இரா. மோகனா
மனதில் தோன்றும் கருத்துகளைக் காரண காரியத் தொடர்பில் அழகான மொழியில் அமைப்பது கட்டுரை. கட்டுரையைக் கோப்புரை என்றார் மறைமலை அடிகள். ஒரு பொருளைப் பற்றிப் பல கருத்துகளை இணைத்து எழுதப்படுவது கட்டுரை. பேச்சின் வாயிலாக வெளிப்படும் எண்ணங்கள் எழுத்து வடிவம் பெறாமல் நிலைத்த தன்மையைப் பெற இயலாது. இதன் காரணமாகவே எண்ணங்களை நிலைபெறச் செய்வதற்காகப் பல்வேறு கட்டுரை இலக்கியங்கள் தோன்றின.

சி.அரவிந்தன் எனும் இயற்பெயர் கொண்ட அழகிய பெரியவன் தொண்ணூறுகளின் இடைக்காலம் தொடங்கி இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லா வகைமைகளிலும் சிறந்து விளங்குகிறவர். தகப்பன்கொடி நாவலுக்காகவும் (2003), உனக்கும் எனக்குமான சொல் என்ற கவிதை நூலுக்காகவும் (2010) இருமுறை தமிழக அரசின் பரிசைப் பெற்றவர். சிற்பி கவிதை விருது, இந்தியா டுடே கலை இலக்கிய விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர். எழுதுகிறவராக மட்டுமின்றி களச்செயல்பாட்டாளராகவும் விளங்கும் இவருக்கு 2013ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தந்தை பெரியார் விருதை வழங்கிச் சிறப்பித்தது. தற்போது அழகியபெரியவன் திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார்.
பல்வேறு பொருண்மைகளைப் பேசும் நூலான அன்லிமிட்டெட் காலம் என்ற கட்டுரை நூலில் 27 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் முதல் கட்டுரையான ‘உனக்குத் தமிழ் தெரியுமா?’ என்ற கட்டுரையில் அம்பேத்கர் சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க விரும்பினார், இந்தியை வலியுறுத்தினார் என்ற செய்திகள் தப்புத் தப்பாக விவாதிக்கப்படுகின்றன. அம்பேத்கர் வலியுறுத்தியது ஆங்கிலத்தைத்தான். ஆங்கிலம் ஒரு வளமான மொழி. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அது பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்றார். இந்தக் கருத்து அவர் பெற்ற கல்வியால் வந்தது. சரிவிகித உணவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக வளரும். இதையே நம்முடைய மூளைக்கும் பொருத்திக் கொள்ளலாம். அறிவுத்திறன் மேம்பட வேண்டும் என்றால் சரிவிகித அறிவு தேவை. தமிழ் மொழியின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய தாட்களை இணைக்க வேண்டுமானால் அரசும், கல்வித் துறையும் ஒன்றிணைந்து இன்னும் முனைப்பாக வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஆசிரியர் தாக்கப்படும் காலம்! கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்கிறார்கள். கற்களால் தாக்கிக்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களின் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்திருக்கிறான். ஒரு பள்ளி மாணவன். ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கையில் அரபிக்குத்துப் பாடலுக்கு மாணவன் நடனமாடுகிறான். எந்தக் காணொலி ஊடகத்தைத் திறந்தாலும் மாணவர்கள் முறை தவறி நடந்துகொள்வதாகச் செய்திகள் பிரவகித்து வருகின்றன. மாணவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லும் ஊடகங்கள், அதே மாணவர்கள் சிறப்பாகச் செயலாற்றுகையில் அந்த நேர்மறைச் செய்திகளை அத்தனை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதில்லை. மௌனமாகக் கடந்து செல்கின்றனர்.
மனிதன் எந்த விலங்கைப் பலியாகக் கொடுக்கிறானோ அந்த விலங்கை உண்ணவும் செய்கிறான் என்பது நடைமுறையில் இருக்கின்ற உண்மை. அதன் அடிப்படையில் வேதகாலத்தில் பலியிடல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலை எடுத்தால் அதில் பசுவும் இருக்கிறது என்ற கருத்து எண்ணத்தக்கது. பெயரில் என்ன இருக்கிறது? கோனசீமா சுற்றுலாவுக்குப் பெயர்போன அளவுக்கு சாதியக் கலவரங்களுக்கும் பெயர்போனது என்று சொல்கிறார்கள். கோனசீமாவில் மட்டும்தான் அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதா என்றால் இல்லை. அவர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அவருடைய பெயரை வைத்தபோதும் கலவரங்கள் வெடித்தன. பலபேரைக் கொன்றொழித்த, சட்டத்துக்கும் வெகுமக்களுக்கும் எதிராகச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட சிலரின் படங்களைக்கூட தங்களின் அடையாளமாகப் பெருமையுடன் முன்னிறுத்த விரும்பிடும் நம் சமூகம் ஏன் அம்பேத்கரின் பெயரை வெறுக்கிறது? என்று வினா எழுப்புவது சிந்திக்கத்தக்கது.
இளையராஜா- உயிரில் ஊறும் இசையமுதம்
நமது மொழியே ஓர் இசைமொழி. இசை என்பது ஒரு புரிதல் முறைமை, வாழ்வின் இருப்பையும் அதிலிருந்து மீண்டெழும் மனவெழுச்சி வெளிகளையும் இசை வழியான புரிதல் முன்னெடுக்கின்றது. இசையென்றால் அது திரையிசைதான். மக்களுக்கு நன்கு அறிமுகமானது, இளையராஜாவின் திரையிசை மட்டுமே. காலத்துக்கும், மனோநிலைமைகளுக்கும் ஏற்ற ராகப்பகுப்புகள் அதில் உண்டு. இந்த வரையறைகளுக்குள்ளேயே புகுந்து பல பரிசோதனை முயற்சிகளைத் தன் பாடல்களில் செய்திருக்கிறார்.
இந்தியாவில் ஆசிரியராக விரும்பும் ஒருவருக்கு விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், ராதாகிருஷ்ணன் போன்றோரின் கல்விச்சிந்தனைகளே கற்பிக்கப்படுகின்றன. ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே, அம்பேத்கர், அபுல்கலாம் ஆசாத், பெரியார் போன்றோரின் கல்விச்சிந்தனைகள் கற்பிக்கப்படுவதில்லை. பிறகு எப்படி சிந்தனையைத் தூண்டும் ஆசிரியர் சமூகம் மலரும்? பள்ளி, ஆசிரியர்கள், சாதியம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. தொடர் கற்றல் என்பது கல்வியின் அடிப்படை. ஆனால் ஆசிரியராகப் பணிக்கு வரும் ஒருவர் தொடர்ந்து கற்கிறாரா? அன்றாடம் நாளேடுகளைக்கூடப் படிக்காத ஆசிரியர்களும் இருக்கவே இருக்கிறார்கள்! முதலில் ஆசிரியர்கள் தங்களைச் சமூக மாற்றத்தை நோக்கிய பணியில் ஈடுபடுத்திக்கொள்கிறவர்களாக உணரவேண்டும்.
பிளாஸ்டிக் அல்ல உலகம்:
சுற்றுச்சூழல் பாதிப்பு, மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உடல்நலப் பாதிப்பு என இரண்டு வகையான பாதிப்புகள் பிளாஸ்டிக்கால் உருவாகின்றன. ஒரு ஆண்டுக்குச் சுமார் 245 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளே அதிகம். இவை பிளாஸ்டிக் சிக்கலை உருவாக்கியிருக்கின்றன. இதனால் உலக வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற நடப்பியல் சார்ந்த கருத்தையும் ஆசிரியர் கூறியிருப்பது கவனத்திற்குரியது.பெண் படிப்பதற்கும் ஆண் படிப்பதற்கும் இடையில் இருக்கும் சமூக நிலைமைகளை மாணவி ஸ்ரீமதியின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இன்றும் பெண்கள் படிப்பது அவ்வளவு எளிதானதில்லை.
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி அம்மையார் படிக்கையில், அவர் வகுப்பறையின் நடுவில் திரை ஒன்று கட்டப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. மாணவர்களையும் மாணவிகளையும் பிரித்து வைப்பதற்கான திரை அது. இன்று திரைகள் வகுப்பறையில் இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல திரைகள் சமூகத்திலும், மக்களின் எண்ணங்களிலும் இருக்கின்றன. அவற்றை எந்தச் சுரணையும் இல்லாமல் விலக்கிக் கொண்டு நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மாணவர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
2016 இல் மாணவர் மரணங்கள் 9,748. 2020இல் இதுவே 12,526. கல்வி நிலையங்களில் சாதியக் கொடுமைகள் மற்றும் பாலியல் அத்துமீறல், ஆசிரியர்களின் வன்முறை, சமத்துவமின்மை, பாடச்சுமை, பாடங்கள் புரியாத நிலை, தேர்வில் தோல்வி மற்றும் தோல்வி பயம், திறனின்மை ஆகிய காரணங்களால் மாணவர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டால்கூட அது தேசியச் செய்தியாகிறது. ஆனால் மாணவர்களின் மரணங்களைச் சமூகம் மௌனமாகக் கடந்து செல்கிறது.
அரசுப்பள்ளிகளுடனும் பெற்றோர் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக்கொள்வதில்லை. இந்தக் குறையைப் போக்குவதற்கே அரசு இப்போது நம்பள்ளி, நம் பெருமை; பள்ளி மேலாண்மைக் குழுக்களை உருவாக்கியுள்ளது என்ற கல்வி சார்ந்த கருத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
எல்லாம் மழை:
தண்ணீர் கிடைக்காமலும், வறட்சியிலும் சிக்கித்தான் பெரும்பாலான யானைகள் இறந்துள்ளன என்று தமிழக வனத்துறை தெரிவித்திருக்கிறது. இவற்றோடு மின்சாரம் தாக்கியும், இரயில் மோதியும். துப்பாக்கியால் சுடப்பட்டும் யானைகள் இறந்திருப்பதாகவும் அந்த வனத்துறை அறிக்கை சொல்கிறது. குறிப்பாக, யானைகளை நாம் ஏன் காப்பாற்றவேண்டும்? யானைகள் இறக்க இறக்க காடுகளின் அழிவு அதிகரிக்கும். தன் வாழ்நாளில் ஒரு யானைதான், தின்று செரித்து இடும் எச்சங்களின் வழியாகச் சுமார் பதினெட்டு லட்சம் மரங்களை உருவாக்குகின்றனவாம். அவ்வாறெனில் தற்போதைய காடுகளின் உருவாக்கத்தில் அதிகம் பங்கு வகிப்பவை யானைகளே. நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவது, வனங்களின் அளவை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
என்றார் வள்ளுவர். நாம் அறிவியல் மனப்பான்மையோடு விழிப்பு கொண்டு செயலாற்றவில்லை என்றால் பெய்யாமல் கெடுக்கும் மழை, பெய்தும் உலகைக் கெடுக்கும். ஷவர்மா எனப்படும் அசைவ உணவையும், பிரியாணியையும் சாப்பிட்டவர்கள் இறந்துபோன செய்தி முன்னர் பெரிய அளவில் பேசப்பட்டது. உணவகத்தில் பரிமாறப்பட்ட அசைவ உணவில் புழுக்கள் இருந்ததாக, விரும்பத்தகாத பொருட்கள் இருந்ததாகச் செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. மனதை இலகுவாக்கி, களிப்படையச் செய்து, உற்சாகமூட்டுபவை கொண்டாட்டங்கள்தாம்.
கொண்டாட்டங்கள் இல்லாத மனித வாழ்க்கை வெறுமையானது. திருமணம், வீட்டுவிழா, பிறந்தநாள் போன்ற தனி விழாக்களில் சிலர் மட்டுமே பங்கேற்க முடியும். எல்லா வரையறைகளையும் தாண்டி, எல்லாரும் ஒன்று சேர்வது பண்டிகைகளில்தான். திருவிழாக்களில் தாய்வீட்டுச்சீர் கொடுப்பது, முதல் சடங்கைச் செய்வது, முதல் மரியாதையைப் பெறுவது வழிவழியாகச் சில குடும்பங்கள்தாம். அந்தந்த ஊர்களின் பெருமிதத்தையும், சாதி ஆதிக்கத்தையும் காட்டுவதற்கான களமாக இத்திருவிழாக்கள் மாற்றப்பட்டன. திருவிழாக்களில் இருக்கும் கேளிக்கையைத் தொலைக்காட்சிகளும் பின்னர் கைப்பேசிகளும் சூறையாடின.
இன்று திருவிழாக்களில் இருந்த அந்த ஆதிக் கூட்டு மனநிலை முற்றிலுமாக மறைந்து விலகல் உணர்வு தோன்றிவிட்டது. அப்போது தண்ணீருக்கு அலைய வேண்டும். உணவுக்கு அலைய வேண்டும். விறகுக்கு அலைய வேண்டும். பொருளுக்கு அலைய வேண்டும். கல்விக்கு அலைய வேண்டும். அப்படி அலைந்து திரிந்து தேடிப்பெறுவதில் ஓர் இன்பம் இருந்தது. இன்று அவை விடைபெற்றுக் கொண்டன. கார்பைடு போட்டுப் பழுக்கவைத்த பழங்களைப்போல, கைபேசி போட்டுப் பழுக்கவைத்த வாழ்க்கையாகிவிட்டது இந்த நவீன வாழ்க்கை!
உள்ளிருந்து உடற்றும் பசி உலகில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வருகிற பசியைத்தான் பேசுகிறது படம். ஆனால் கிடைப்பதைத் தின்று பசியாற்றிக்கொள்ளும் எளியவரின் பசியல்ல இது. வகை வகையாகவும், வக்கணையாகவும், என்ன தின்னலாம் என்று அலைகிற வலியவரின் பசி. சாதி பேதம், மத பேதம், பால் பேதம் போன்று இது பசி பேதம்! மனிதர்கள் உயிர் வாழவேண்டும் என்பதற்காக தம் பசியை நிவர்த்தி செய்துகொள்ளவே உயிர் வாழ்கின்றனர். அதற்காகவே எல்லாவற்றையும் செய்கின்றனர். என்பதான பல கருத்துகளை இந்நூலில் ஆசிரியர் அழகிய பெரியவன் விரிவான விவரணைகளோடும் சான்றுகளோடும் முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
