மதுராந்தகன்

சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரை நூல்களில் திரைப்பட ரசிகனுக்கு, இலக்கிய வாசகனுக்கு நல்ல திரைப்படம் பற்றிய வழிகாட்டியாக இருக்கும் (காவ்யா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள “திரைப்படம் என்னும் சுவாசம்” என்ற 400 பக்க நூல் இதற்குச் சாட்சியம்). திரைவெளி போன்ற நூல்களும் இதற்கு சாட்சி (உயிர்மை, நிவேதிதா பதிப்பக வெளியீடு).
தற்போது அவரின் திரைக்கதை நூல்கள் ஏழு வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் நாவல்களையும் சிறுகதைகளையும் எடுத்து திரைக்கதைகளாக்கும் முயற்சியில் மூன்று நூல்களை வெளியிட்டு இருக்கிறார்..சுமார் 30 திரைக்கதைகள் இதில் உள்ளன.
இந்த முயற்சியில் அவரின் படைப்புகளைத்தாண்டி தொடர்ந்து ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் கதைக்காக அலைய வேண்டியதில்லை. ஏழு பாகங்களாக வந்துள்ள அவர்களின் நூல்களை படித்தால் திரைப்படத்திற்காக கதை இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. இவரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட பல தயாரிப்பாளர்களால் திருட்டுத்தனமாக கையாளப்பட்டுள்ளது.

ஒரு படைப்பாளியின் மூலப்படைப்பை எடுத்து திரைக்கதையாக்கம் செய்யும்போது பல சிதைவுகள் ஏற்படும். நாவலின் மையம் சிதைந்து போகும் அல்லது பல முக்கியமான, நுணுக்கமான கதாபாத்திரங்களும் விடுபட்டுப் போகும். இந்த இந்த நிலையில் எழுத்தாளனே அவனின் படைப்புக்கு திரைக்கதை எழுதும்போது இந்த சிதைவு இருக்காது. ஓரளவு படைப்பாளிக்கும் திருப்தி ஏற்படும். திரைக்கதையில் வேறு ஒரு கோணமும் கிடைக்கும். இந்த வகையில் சுப்ரபாரதிமணியன் அவரின் எல்லா நாவல்களையும் திரைக்கதைகளாக்கி விட்டார். இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம்.
அதைத்தவிர பல புதிய களன்களில் திரைக்கதைகள் என்று மொத்தமாய்
62 திரைக்கதைகள் இந்த ஏழு நூல்களில் இடம் பெற்றுள்ளன.
படைப்பாளிகள் திரைக்கதை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தங்கள் படைப்புகளை எடுத்துக்கொண்டு திரைக்கதையாக்கும் முயற்சி குறைவுதான். காரணம் தயாரிப்பாளரும் இயக்குனரும் கேட்கும் விசயத்தைதான் அவர்கள் திரைக்கதையாக்குகிறார்கள். வியாபாரரீதியாக அதுதான் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களின் படைப்புகளை திரைக்கதைகளாக்கும் போதுகூட வணிகரீதியாக பல விசயங்களைச் சேர்த்துக்கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படித்தான் படைப்பாளிகளின் திரைக்கதையாக்க முயற்சிகள் உள்ளன. ஆனால் சுப்ரபாரதிமணியன் அவரின் படைப்புகளை எடுத்துக்கொண்டு படைப்பின் மையம் அதிகம் சிதறாமலும், வணிக அம்சங்களை அளவோடு எடுத்துக்கொண்டும் செய்திருக்கிறார். அவரின் நாவல்களைப் படிக்கிற வாசகன் திரைப்பட வடிவத்திற்காக அவற்றை யூகித்துக் கொள்வது சாதாரணம். அந்த யூகிப்பின் வடிவமாக இந்த திரைக்கதைகள் உள்ளன. இந்த ஏழு தொகுப்புகளில் அவரின் வெளிவந்த படைப்புகள் தவிர வெளிவராத சில படைப்புகளையும், புது மையங்களையும் திரைக்கதை வடிவத்தில் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைக்கதாசிரியர்கள், இயக்குனர்கள், திரைக்கதைகளில் ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கும் ஒருமித்த வகையில் பயனளிக்கும் இந்த முயற்சிகளை பிற படைப்பாளிகளும் தொடர வேண்டும்.
