நிகழ் அய்க்கண்
கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறையுள்ளவர்களோ விமர்சனப்பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிஸமும் கம்யூனிசம் பற்றி – குறிப்பாக சேன்-ஸிமோன், சார்லெஸ் ஃபூரியெ, இராபர்ட் ஓவன் ஆகியோரைப்பற்றி முதன்முதலாக அறிந்து கொள்வது மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்துதான். அதன்பிறகு அவர்களைப்பற்றிய விளக்கங்களை எங்கெல்ஸின் கற்பனாவாத சோசலிஸமும் விஞ்ஞான சோசலிஸமும், டூரிங்குக்கு மறுப்பு ஆகிய நூல்களிலிருந்து அறிந்திருப்பர். வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கற்பனாவாத சோசலிசவாதிகள் இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூன்றாம் பகுதியில் மார்க்ஸும் எங்கெல்ஸும் முதன்மைப்படுத்துவது மேற்சொன்ன மூவரைத்தான். ‘கற்பனாவாத சோசலிசம்’ என்பதன் மூலவர் 14-15 நூற்றாண்டில் வாழ்ந்த சர் தாமஸ் மூர் என்பவர்தான்.

இவர் எழுதிய ‘யூட்டோப்பியா’ என்ற நாவல்தான் கற்பனாவாத சோசலிசத்தின் மூலவேர் என்று கருதப்படுகிறது. இவர் வர்ணிக்கும் சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயந்தான் என்று மார்க்சிய அறிஞர் ஹால் ட்ரேப்பர் கூறுகிறார். அதன்பிறகு, 16-17 நூற்றாண்டுகளில் இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியார் தொமாஸ்கோ காம்பெனெல்லா தனிச்சொத்து ஏதுமில்லாத, எல்லோரும் சரிசமமாக வாழ்கின்ற கத்தோலிக்க மதம் சார்ந்த ஒரு கற்பனா சமுதாயத்தைப்பற்றிய ‘சூரியனின் நகரம்’ என்ற நாவலை எழுதினார். பின்னர் 18-19 நூற்றாண்டில், மார்க்ஸின் சமகாலத்தவருமான வில்லெஹ்ம் வெய்ட்லிங், எத்தியன் காபே ஆகிய இருவரும் அனைத்து மனிதர்களும் சரிசமமாக வாழ்கின்ற ஒரு சமுதாயம் பற்றிய கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினர். கற்பனா உலகு சார்ந்து, எத்தியன் காபெ எழுதிய ‘ஐகேரியாவுக்கான பயணம்’ என்ற நாவல் அக்காலத்தில் பரவலாக வாசிக்கப்பட்டது. அதில் அவர் தனது கருத்துக்களையும், திட்டங்களையும் விளக்கியிருந்தார்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ‘ஐகேரியக் கம்யூனிஸ்டுகள்’, ‘ஐகேரியன்கள்’ என்றழைக்கப்பட்டனர். காபெ 1840களில் சிறிதுகாலம் லண்டனிலிருந்த ‘நீதியாளர் கழகத்’தின்மீது செல்வாக்கு செலுத்திவந்தார் (இதுதான் பின்னர் ‘கம்யூனிஸ்ட் கழகம்’ ஆயிற்று.

இந்தக் கற்பனாவாத சோசலிஸ்டுகளை முற்றிலுமாகப் புறக்கணித்த மார்க்ஸும் எங்கெல்ஸும், சேன் – ஸிமோன், ஃபூரியெ, இராபர்ட் ஓவன் ஆகியோர் முதலாளிய சமுதாயத்திலிருந்த வர்க்க முரண்பாடுகள், பகைமைகளின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றனர். மேலும், இந்த மூன்று விமர்சனப் பகுப்பாய்வு- கற்பனா சோசலிஸ்டுகள் பிற சோசலிஸ்டுகளைப்போலல்லாது, பூர்ஷ்வா சமுதாயத்தின் வர்க்க அடிப்படையை மாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்ததையும், அதன் காரணமாகவே ‘விமர்சனப் பகுப்பாய்வு சோசலிசம்’ பிற சோசலிசங்களைவிட முக்கியமாக இருந்ததையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால், அவர்கள் நவீன பாட்டாளி வர்க்கம் வரலாற்றுரீதியாக வளர்ச்சியடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தோன்றியவர்களாதலால், பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான உள்ளுரையாற்றல்களைப்பற்றி சிந்திக்க இயலாதவர்களாக இருந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் புரட்சிகரமானதாக இல்லாத, கற்பனாவாத முறையில் சோசலிசத்தை உருவாக்க முனைந்தனர். முதலாளிய வளர்ச்சி துரிதமடைய அடைய, பாட்டாளி வர்க்கப்புரட்சிக்கான சாத்தியப்பாடு திட்டவட்டமான வடிவங்களை எடுத்துவருகையில், கற்பனாவாத சோசலிஸ்டுகளின் ஆலோசனைகளும் திட்டங்களும் மேன்மேலும் பொருத்தப்பாடு அற்றவையாக அமைந்தன என்று மார்க்ஸும், எங்கெல்ஸும் கருதினர். தற்போது, சேன் – ஸிமோன், ஃபூரியெ, இராபர்ட் ஓவன் ஆகியோரது கருத்துக்களைச்சற்று விரிவாகக்காண்போம்.
சேன் – ஸிமோன் (1760-1825):
சேன் –ஸிமோனிசத்தை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். 1. 1814-1815 ஆண்டுகளில் இவர் எழுதிய கட்டுரைகளில் விஞ்ஞானம், பகுத்தறிவு, அறிவாளிகள் மற்றும் அருவமான மனிதநேயக்கோட்பாடுகளும் இடம்பெற்றிருந்தன. 2. தனது வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளில் அவர் எழுதியவைகளில், முதலாளித்துவம் என்கிற பகைமையும், போட்டியும் நிலவுகிற அமைப்புக்குப்பதிலாக, மக்களிடையே ஒத்துழைப்பும் கூட்டுறவும் நிலவுகிற சமுதாய அமைப்பினை, அதாவது நிலப்பிரபுக்கள், பூர்ஷ்வா சொத்துடைமையாளர்கள் ஆகியோரின் பொருளாதார, அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு தொழிலுற்பத்தியாளர்களின் சமுதாயம் உருவாகும் என்கிறார்.
தொழிலுற்பத்தியாளர்களும் (முதலாளி), தொழிலாளர்களும் தொழிலுற்பத்தியில் பங்கேற்பதால் இவ்விரு சாராருமே ஒரேவர்க்கமாக அமைகிறார்கள். அதாவது, முதலாளிகள் என்பவர்கள் உற்பத்தி இயக்கத்தின் தலைவர்கள். தொழிலாளர்களோ உற்பத்தியை செயல்படுத்துபவர்கள் என்கிறார். இதனால்தான் சேன் – ஸிமோனிடம் ஒரு பாட்டாளி வர்க்கப்போக்கு, ஒருவகை பூர்ஷ்வா போக்கு இரண்டுமே இருப்பதாக எங்கெல்ஸ் ஒருமுறை கூறினார். சேன் – ஸிமோனின் கடைசி நாவலான ‘புதிய கிறிஸ்தவம்’ என்ற நூலில், அவர் முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கச்சார்பாளாராகவே இருப்பதை மார்க்ஸ் மூலதனத்தின் மூன்றாம் பாகத்தில் பாராட்டியுள்ளார். எனினும் பாட்டாளி வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்திற்குமிடையேயான முரண்பாட்டினை சேன் – ஸிமோன் பார்க்கவில்லை எனவும் கூறுகிறார். 3. 1837இல் சேன் – ஸிமோனின் மறைவிற்குப்பிறகு, அவர் எழுதியவைகள், பேச்சுக்கள் ஆகியவற்றினை அவரது சீடர்கள் தொகுத்தனர்.
அவைகளாவன, உற்பத்திச்சாதனங்களின் தனியுடைமையை ஒழித்தல்; உழைப்பிற்கும், திறமைக்கும் ஏற்ப பொருட்களைப் பகிர்ந்தளித்தல்; உற்பத்தியை சமூகரீதியில் திட்டமிட்டு அமைத்தல்; தனியுடைமையும் சுரண்டலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை; தனியுடைமையை வரம்புக்குட்படுத்த சொத்து வாரிசு உரிமை ஒழிக்கப்படவேண்டும் என்பன போன்ற கருத்துக்கள் சோசலிசக் கோட்பாட்டுடன் அமைந்தது. 4. 1830 களில் பிரான்சில், புரட்சிகர கொந்தளிப்பு ஏற்பட்டபோது, சேன் –ஸிமோனியம் நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தது.. அப்போது பஸார்க்கும், ஆன்ஃபந்தெனும் இவ்வியக்கத்தின் தலைவர்களாக இருந்தனர். 1832க்குப்பிறகு, அமைப்புவடிவமும், அவ்வியக்கமும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
சார்லெஸ் ஃபூரியெ (1772-1837)
சோசலிச முன்னோடிகளிலொருவரான ஃபூரியெவும் முதலாளிய சமுதாயத்தின் பொருளாதார, அறவியல் சீரழிவை அம்பலப்படுத்தினார். அச்சமுதாயத்தில் நிலவிய பாலுறவு வடிவங்களையும், அங்கு பெண்களுக்கிருந்த நிலைமையையும் கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமின்றி, மனிதகுல வரலாறானது, தொன்மைநிலை (ஏடன்), காட்டுமிராண்டி நிலை (தேக்க நிலை), கட்டுப்பாடு உறவுகள் கொண்ட சமுதாயம்(சிறுதொழில்), அநாகரிக நிலை, நாகரிக நிலை (பெரிய அளவுத்தொழில்) என்ற கட்டங்களினூடாக வளர்ந்துள்ளது என்றும், நாகரிக நிலை என்பது குடிமைச் சமுதாயம் அல்லது முதலாளியச் சமூகம் என்றும் கூறினார். நாகரிகம், தான் சாதிக்க விரும்புவதற்கு நேர்முரணான ஒன்றையே வந்தடைகிறது என்றும், நாகரிக வாழ்வின் மிகையான செல்வத்திலிருந்தே வறுமை உதித்தெழுகிறது என்றும் கூறினார்.
சேன் –ஸிமேனிய இயக்கம், தான் உருவாக்க விரும்பிய எதிர்காலச் சமுதாயம் (உலக சமுதாயம்) மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் செயல்படும் என்று கூறியது. அரசு அமைப்பே அதன் தொடக்க முனையாக இருந்தது. ஆனால், ஃபூரியெ, அதிகாரப்பரவலை முதன்மைப்படுத்தினார். அவர் உருவாக்க விரும்பிய எதிர்காலச் சமுதாயத்தின் தொடக்கமுனை கூட்டுவாழ்வுக்குழாம் என்பதாகும். தான் உருவாக்க விரும்பிய எதிர்கால சமுதாயத்தை ‘முழுமையான ஒத்திசைவு’ அல்லது முழுமையான சங்கம் என்று ஃபூரியெ அழைத்தார். அந்த இறுதி இலக்கை அடைவதற்குமுன், இரண்டு மாறுதல் காலகட்டங்களை, இடைநிலைக் கட்டங்களை மனிதகுலம் தாண்டிச் செல்லவேண்டும்.
முதல் இடைநிலைக் கட்டத்தில் சமுதாய அலகாக இருப்பதுதான் கூட்டுவாழ்வுக்குழாம். இந்தக்கூட்டு வாழ்வுக்குழாம், பங்கு மூலதன நிறுவனங்களின் அம்சங்கள் சிலவற்றையும் கொண்டிருக்கும்; கூட்டுவாழ்வுக்குழாமை நிர்வகிக்கும் அலுவலர்கள் குழாம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்; கூட்டுவாழ்வுக்குழாமில் ஆண்-பெண் உறவுகளுக்கும் கட்டுப்பாடு இராது. ஆணும் பெண்ணும் சுதந்திரமாகச் சேர்ந்து வாழலாம். ஐக்கியத்தை விருப்பப்பட்டால் கலைத்துவிடலாம் அல்லது நிரந்தரமாக திருமண உறவாக மாற்றிக்கொள்ளலாம்; மக்களின் தேவைகள், திறமைகள், பயனுள்ள விளைவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பல்வேறு வகையான உழைப்புச் செயல்கள் கூட்டுவாழ்வில் மேற்கொள்ளப்படும் எனக்கூறுகிறார்.
ஃபூரியெயின் பொருளாதாரக்கொள்கைபற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறும்போது, “வர்க்கப்பகைமைகளை மிகவும் தொடக்க காலத்திலிருந்த தெளிவற்ற, சரிவர வரையறுக்கப்படாத வடிவத்தில் மட்டுமே அறிந்துள்ளன. ஆகவே அவை இன்னமும் முற்றிலும் கற்பனாவாதத் தன்மையுடையனவாகவே இருக்கின்றன. ஃபூரியெ தனியுடைமைமை ஒழிக்க விரும்பவில்லை; மாறாக, சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களையும் உடைமையாளர்களாக மாற்றி, தனியுடைமையின் சுரண்டல் தன்மையையும் அதன் அழிவுமிக்க பின்விளைவுகளையும் ஒழிக்க விரும்பினார்”. கூட்டுவாழ்வுக்குழாம் பற்றியும், பல கூட்டுவாழ்வுக்குழாம்களை ஒன்றிணைக்கும் சங்க இயக்கம் பற்றியும் நிறைய எழுதிய ஃபூரியெ, அரசின் வர்க்கத்தன்மை; மூலதனத்திரட்டல் பற்றியும் அதன் சமூகக்கூறுகள்; சரக்கு, பணம் ஆகியவற்றின் தன்மை ஆகியவற்றினைப்பற்றி எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
இராபர்ட் ஓவன் (1771-1858):
இங்கிலாந்தைச்சேர்ந்த இராபர்ட் ஓவன் உள்நாட்டுக் குடியேற்றங்கள் என்ற பெயரில் கூட்டுவாழ்வுக்குழாம்களை அமைத்து தனது கற்பனாவாத சோசலிசக் கருத்துக்களை நடைமுறைப்படுத்த முயன்றார். ஓவன் செயல்பட்ட காலகட்டம் குறித்து எங்கெல்ஸ் ‘டூரிங்குக்கு மறுப்பு’ நூலில் குறிப்பிடும்போது, நீராவியின் ஆற்றலும் புதிய கருவியை உற்பத்திசெய்யும் இயந்திரங்களும் பட்டறைத்தொழிலை (Manufacture) நவீனத்தொழிலாக மாற்றியமைத்துக்கொண்டிருந்தன. இவ்வாறு முதலாளிய சமுதாயத்தின் அடித்தளம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. இடைவிடாது அதிகரித்துவரும் வேகத்துடன் சமுதாயம் பெரிய முதலாளிகள் என்னும் பிரிவாகவும், உடைமை ஏதும் இல்லாத பாட்டாளிகள் என்னும் பிரிவாகவும் தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு வந்தது.
இத்தகைய சூழலில்தான் பட்டறை உற்பத்தியாளரிலொருவர் சீர்திருத்தம் செய்ய முன்வந்தார். தொழிற்புரட்சியின்போது அவரது வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் நிலவிவந்த குழப்பத்தினைப் பயன்படுத்தி செல்வத்தை ஈட்டினர். ஓவனோ தமக்கு மிகவும் பிடித்தமான தத்துவத்தினை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதினார். தொழிலளர்களுக்கான வாழ்க்கை நிலைமை போதிய தகுதியுடையது அல்ல எனக் கருதினார். ஓவன், இந்த நிலையை மாற்றுவதற்காக கம்யூனிசக்குடியிருப்புக்களை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் கம்யூனிசத் தத்துவங்களுடன் முன்வந்தபோது, தனிச்சொத்து, சமயம், திருமணமுறை ஆகியன சமூகச்சீர்திருத்தத்திற்கு எதிராக முட்டுக்கட்டையாகிவிட்டன. எனினும் இராபர்ட் ஓவன் போன்றவர்கள் கற்பனாவாதிகளாகவே இருந்தனர் என்பதை எங்கெல்ஸ் வலியுறுத்துகிறார்.
இராபர்ட் ஓவன், சேன் – ஸிமோன், ஃபூரியெ ஆகிய விமர்சன பகுப்பாய்வு- கற்பனாவாத சோசலிஸ்டுகளின் நிறைகுறைகள் பற்றிய மதிப்பீட்டையும் அவர்களது சீடர்கள் பற்றிய எதிர்மறையான விமர்சனத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் காணலாம். மேற்சொன்ன மூவரைப்போன்ற கற்பனாவாத சோசலிஸ்டுகள் எல்லோரும் பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்தனர். அதற்கான காரணத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் விளக்கினர்.
“பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு போர்க்குணமிக்க வர்க்கமாக அமைத்துக்கொள்வதை அனுமதிக்கின்ற சமூக நிலைமைகள் போதுமான அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. அதன் காரணமாக, ஃபூரியே, ஓவன், சேன் –ஸிமோன் முதலானோர் பாட்டாளிகள் தமது வாழ்க்கை நிலைமைகளால் சில மேம்பாடுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட வேலைநிறுத்தங்கள், அவர்கள் அமைத்துக்கொண்ட அமைப்புக்கள், அரசியல் இயக்கங்கள் போன்ற முயற்சிகள் அனைத்தையும் கண்டனம் செய்து, எதிர்கால முன்மாதிரி சமுதாயங்கள் பற்றிய கனவு காண்பதுடன் தங்களை மட்டுப்படுத்திக்கொண்டனர்”.
