மா. காளிதாஸ்
ஓர் ஊரில் ஒரு பாட்டி இருந்தாள்; ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று கதை கேட்டும், சொல்லியும், படித்தும் கிளர்ந்த நம் உணர்வுகள் ஒரு கூட்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டன. இப்போது நாம் கதை சொல்லத் தொடங்கினால், ‘அந்தக் கத தான, அது எனக்கு ஏற்கெனவே தெரியும். புதுசா ஏதாவது இருந்தா சொல்லு’ என்கிற மனநிலை இன்றைய தலைமுறையிடம் மேலோங்கி இருக்கிறது அல்லது அவர்கள் கேட்கும் அல்லது படிக்கும் சிந்தனைகளை மடைமாற்றப் பல விஷயங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. எனில் பிழை எங்கு இருக்கிறது என உற்று நோக்கினால், அது கதை சொல்லும் முறைமையில் என்பது தெளிவாகப் புலப்படும்.
அவ்வளவு தூரம் வறட்சியானதா தமிழ்ச்சூழல் என்றால் அதுதான் இல்லை. கதை சொல்லும் பாங்கு, தேர்ந்தெடுக்கும் கதைக்களம், கதாபாத்திரங்களிடையே ஊடாடும் மௌனம் போன்றவற்றால் இன்றும் பல கதைசொல்லிகள் தங்கள் பக்கம் கவனத்தை ஈர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

வட்டார வழக்கு, நேரடி அனுபவத்திற்குள் தன் கருத்தை ஏற்றுதல், தனக்கு அல்லது நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகள், இதுவரை சொல்லாதனவற்றைச் சொல்லாத முறைமையோடு வெளிக்கொணர்தல், வெறும் கதைசொல்லல் என்கிற பாணியிலிருந்து நகர்ந்து தரவுகளோடு கதை சொல்லல் என கதைசொல்லலின் கோணங்கள் மாறிக்கொண்டே இருப்பதால்தான் வாசிப்பு அனுபவம் என்பது அண்மைக்காலமாக மிக நெருக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது.
அந்தவகையில், புதுக்கோட்டையில் கந்தர்வனுக்கு அடுத்து மிக முக்கியமான கதைசொல்லியாக அண்டனூர் சுரா உருவெடுத்துள்ளார் என்றால் அதில் வியப்பில்லை. ஏற்கெனவே ஏழு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், மூன்று குறுநாவல்கள் எனத் தமிழ்ச்சூழலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் சுராவிடமிருந்து வெளிவந்திருக்கும் புதுவரவு ‘குரலி’.
இந்தத் தொகுப்பில் வரும் ‘ஊத்தாகுத்து’ சிறுகதை, அதன் களத்திற்காகவே கவனம் பெற்றுள்ளது. இப்போதும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் மீன்பிடி திருவிழாதான் கதையின் மையக்கரு. குடும்பத்தில் யாராவது ஒருவர்தான் மீன் பிடிக்க முடியும் என்ற நிலை வருகிறபோது, மீன் பிடிப்பதில் வல்லவனான தகப்பனுக்கும் கத்துக்குட்டியாக அறிமுகமாகும் மகனுக்கும் இடையே யார் மீன் பிடிப்பது என்கிற போராட்டமும் அதனைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும்தான் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது.

விட்டுக்கொடுத்தலும் முரண்டு பிடித்தலும் கதையின் சாரமாக இருந்தபோதிலும், புதிய தலைமுறைக்குப் பொறுப்பை ஒப்படைப்பதில் எப்போதுமே முன்வைக்கப்படும் ஒரு தட்டையான தயக்கம் கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. வாரிசு அரசியல்கூடத் தன் இறப்புக்குப் பின்னால்தான் நிகழ வேண்டும் என்ற கடைசி வரையிலான பிடிவாத மனநிலை ஒருபக்கமும், காலம்காலமாகத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மட்டுமே துதி பாடுபவர்களாக இந்த சமூகத்தைக் கட்டமைப்பதில் மேற்கொள்ளப்படும் அதிதீவிர கவனம் ஒருபக்கமும் எனக் கதை சொல்லும் இன்னொரு கதை, மனசாட்சியை விற்றுப் பிழைப்பு நடத்துவோருக்கு இன்னொரு எளிய துடைத்துப் போடுதல் அவ்வளவுதான்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற சிந்தனை எப்படி மறுதலிக்கக் கூடியதாக உள்ளதோ, அதேதானே ‘ஒரு குடும்பம், ஒரு கட்சி, ஒரு ஆட்சி’ என்கிற கருத்தாக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எவ்வளவோ நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, எதிர்பார்ப்புக்கும் மேலான சமூக விழிப்புணர்வுகள் தோன்றியுள்ளன, வேலைவாய்ப்புகளில் மற்றும் சமூக நடத்தைகளில் ஒரு பெரிய புரட்சியே நடந்துள்ளது. எல்லாம் சரி, இதைத் தன்னாலும் தன் குடும்பத்தாலும் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும் என்கிற சிந்தனையின் மீதுதான் மாற்றுக்கருத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
தோன்றும் புதிய காட்சிகளால் ஏற்படும் ஒருவகைப் பதட்டம் மற்றும் அதை எதிர்கொள்வதில் மேற்கொள்ளப்படும் தந்திர வியூகங்கள் என ஒரு சாதாரண மீன்பிடி திருவிழாக் கதைக்குள், இப்படியொரு கருத்தாக்கத்தையும் விளைவிக்க முனைந்ததில் தான், சுரா தனக்கான எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார் என்பது புலப்படும்.
‘அம்மைப்பூக்கள்’ கதையும் அரசியலைத் தான் முன்வைக்கிறது. சாதாரணன் மற்றும் பெரும்புள்ளிக்கு வரும் தொற்றுநோய் எவ்விதமாக அணுகப்படுகிறது, அக்கறைகள் எவ்விதமாக உருமாறுகின்றன என்பதைக் ‘கொரானா’ காலத்திற்கு நம்மை முன்நகர்த்துவதன் வாயிலாகப் பரந்த சிந்தனை மாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
‘அம்மை மேற்கத்திய நாடுகளிலிருந்து நமக்குப் பரவியதால், மேற்கு நோக்கிப் பார்க்காமல் கிழக்குத் திசையை நோக்கி அமர வைத்து, மூன்று குடம் தண்ணீர் ஊற்றுகிறார்கள்’ என்ற செய்தியும், ‘மூன்று குடம் தண்ணீர் என்பது, ஒன்று நோயின் வீரியத்தைத் தணிக்க, மற்றொன்று நோயைப் போக்க, மற்றொன்று அந்நோயைத் தலை முழுக’ என்ற செய்தியும் ‘அம்மை’ குறித்தும், அவரே சொல்வதுபோல, ‘ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த தொற்று’க்கு மருந்து கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னருக்கு காலத்துக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக இந்த உலகு இருக்கவேண்டியதன் அவசியத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். ‘அலுக்கை வாசனை’ கதை, படிப்பைப் பாதியில் கைவிட்டவர்களின் அவலத்தை வேறொரு வகையில் முன்வைக்கிறது. அதே சமயம் மொழியைப் பயன்படுத்துவதில் இளைய தலைமுறையிடம் உள்ள ஒரு விட்டேத்தி மனப்பான்மையையும் சுப்பன் என்கிற ஊமையன் கதாபாத்திரம் வழியாக நையாண்டி செய்கிறது. வல்லினம், மெல்லினம், இடையினத்தை காட்சி மற்றும் வழி ஊடகங்களில் இன்றைய தலைமுறை எவ்வாறு கொன்று குவிக்கிறது என்பதைக் கவனப்படுத்துகிறது.
இதைச் சொல்கையில், அரசுப் பொதுத்தேர்வில் எழுதாத கடைசிப் பக்கங்களை அடித்துவிட்டு, அதன் கீழ் ஒரு மெட்ரிக் பள்ளி மாணவன் எழுதிய ‘இது என் நாள் அடிக்கப்பட்டது’ என்ற வாசகம் கண்முன் வந்தது.
கதையின் ஊடே வரும், ‘வளர்ப்பவனுக்கும் அடங்காத கோண்டிக் கன்றுக்குட்டியைப் போலத்தான் இளமையில் அப்பா இருந்திருக்க வேணும்’, ‘அவர் பனைமரம் ஏறுவது, தரையில் கங்காரு நடப்பதைப்போலிருக்கும்’ போன்ற வாசகங்கள், ஒரு பாட்டம் நம்மை ஒரு கிராமத்துக்குள் இழுத்துச் சென்று பழைய நினைவுகளை மீட்டெடுக்கின்றன.
‘அலுக்கைத்தூள் கதையை யாரேனும் சொல்கையில், அந்தச் சம்பவத்தை நிகழ்த்திய அப்பாவின் முதுகில் நான்கடி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அப்பாயி’ என்ற வரிகளைப் படிக்கையில், வீட்டிலோ, பொது இடத்திலோ வைத்து அம்மாவோ, அப்பாவோ அடிக்கும்போது, அதை அவர்களுக்கான உரிமையாகக் கொடுப்பதும், அதற்காக யாதொரு வருத்தத்தையோ, சங்கடத்தையோ வெளிப்படுத்தாத அந்தக்கால மாந்தர்களையும், அடுத்தவர் முன்னிலையில் லேசாகத் திட்டினால் கூட, விபரீதமான முடிவுகளை எடுக்கும் இக்கால இளைஞர் சமூகத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. இக்கதையில் ஊடாடும் இன்னொரு விஷயம், அதுநாள்வரை வீட்டைவிட்டு வெளியே வராத பெண்மக்கள், வெளியே வரும்போது சந்திக்கும் பிரச்சினைகள்.
இன்றைய காலகட்டத்துக்கு அதுவொரு சாதாரண விசயமாகப் படலாம். கதை நிகழும் காலத்தில் அதுவொரு கலகக் குரல்தான். ஏமாற்றுதல் என்பது வணிகத்தின் ஒரு மையப்பொருளாக மாறிப்போனதன் சூட்சுமத்தை விளக்குகிறது ‘கற்பூரவள்ளி’ சிறுகதை. கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட ஏமாற்று உத்தி, இன்று எளிய மனிதர்களையும் எவ்வாறு நோய்போல தொற்றிக்கொண்டது என்பதைத் தள்ளுவண்டிப் பழக்கடைக்காரர் வழியாகக் காட்டியிருக்கும் விதாததைப் படிக்கிறபோது, பழம் சிவப்பாக இருக்கவேண்டுமென்பதற்காக, தர்பூசணிகளில் ஏற்றப்படும் ரசாயன ஊசிகளின் நினைவுகளையும் விளைவுகளையும் தவிர்க்க முடியவில்லை.
ஆண்கள் அணியும் ‘ஜட்டி’ பற்றிப் பேசும் ‘எறும்புக் குஞ்சு’ சிறுகதையும், பெண்கள் அணியும் ‘நைட்டி’ பற்றிப் பேசும் ‘துயிலி’ சிறுகதையும் வேறே மாதிரித் தோன்றினாலும், ஜட்டி அணியாமல் வெறும் கைலியோடே எங்கு வேண்டுமானாலும் உலாத்துவதற்கு ஆண்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம், உள்ளாடைகளோடே நைட்டி அணிந்து வெளியில் சுற்றும் அந்த சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும், அகதி முகாம்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் இருக்கும் பெண்களுக்கு நைட்டி அணிவதற்கும் குடும்பப் பெண்கள் மேலே ஒரு துப்பட்டாகூட அணியாமல் நைட்டியோடே சந்தைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ வரும்போது எதிர்கொள்ள வேண்டிய பார்வை மற்றும் சொல் பலவீனங்களை எடுத்து இயம்புவதாக உள்ளது ‘துயிலி’ சிறுகதை.
இந்தத் தொகுப்பின் அதி உன்னதமும் கொண்டாடத்தக்க மேற்கோளுமாகக் கருதுவது, வட்டார வழக்கைத் துருத்தலாக அன்றி, கதையின் நகர்வுக்குத் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தி இருப்பதும் (‘கொடும்பு’க்குள் சிரித்தாள் கனகா போன்று), தான் அனுபவங்களை எவ்வித சொல் அலங்காரங்களுமற்று இயல்பான மொழிநடையில் வாசகனாய் எந்தவொரு குழப்பத்துக்கும் ஆள்படுத்தாமல் கதைகளின் மையக் கருவும் சிதையாமல் ஒரு வேனிற்காலத்தில் முழுக்க வேர்வையால் நனைந்த உடம்பைத் தழுவும் இதமான தென்றலைப்போல மனதை வருடுகின்றது அண்டனூர் சுராவின் ‘குரலி’.
