சந்திப்பு : தமிழ்மகன்
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உங்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன். உங்களுடைய படிப்படியான வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்து வந்துள்ளேன். கடந்த 2000ஆம் ஆண்டில் ஒரு கவிஞராக, ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் உங்களை அறிந்துகொண்டேன். தற்போது கடற்கரய் மத்தவிலாச அங்கதம் என்கிற இன்னொரு பெயரோடு உங்களைச் சந்திக்கிறேன். இந்த இரண்டு பெயர்களுக்கும் இடையேயே ஒரு மாற்றம் இருக்கிறதே? வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகவும் அதைப் பார்க்கிறேன். ஒரு கவிஞர் ஆய்வாளராக மாறியிருக்கிறீர்கள்; இதற்கு என்ன காரணம்? இது எப்படி நிகழ்ந்தது?
“என்னுடைய இளமைக் காலத்தில் கவிதை எழுதினேன் அல்லது கவிஞராக இருந்தேன் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நாவல், சிறுகதை சொற்களைக்கூட நான் அறியேன். இதுதான் என்னுடைய இளமைப் பருவம். கவிதை எழுதிய காலத்தில்கூட கவிதைகளைப் படித்தது கிடையாது. என்னுடைய இளமைக்காலக் கனவே, நான் அரசியல்வாதியாக வேண்டும் என்பதுதான். நான் ஒரு சிறந்த அரசியல்வாதியாக மாற வேண்டும். ஒரு பெரிய பேச்சாளராக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. என் இளமைக்காலத்தில் அன்றைய பேச்சாளர்கள் அனைவரின் பேச்சையும் தேடித் தேடிக் கேட்டேன். என் இளம் வயதில் என்னைக் கவர்ந்த வசீகரமான முதல் பேச்சாளர் கலைஞர் கருணாநிதிதான். இது, திமுக ஆட்சிக்காலம் என்பதால் இப்படிச் சொல்வதாக சிலர் நினைக்கக்கூடிய விபத்தொன்று இதற்குள் ஒளிந்துள்ளது. ஆனால், நான் எல்லாவற்றையும் பதிவாக எழுதியுள்ளேன். 2004லேயே என் சுயபுராணங்களைப் பதிவு செய்துள்ளேன். ஆகவே தயங்காமல் சொல்லலாம்.
எங்கள் வீட்டில் முதன்முதலாக தொலைக்காட்சி வந்ததற்குப் பிறகு, நான் அந்த டிவியை முழுநேரமும் அரசியல் விவாதங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். இரவு 10 மணிக்கு மேல் சன் டிவியில் வீரபாண்டியன் விவாதம் வரும். எங்கள் வீட்டில் எல்லாரும் ஹாலில்தான் தூங்குவார்கள். படுக்கறை என்று ஒன்று தனியாகக் கிடையாது. டிவியே ஹாலில்தான் இருக்கும். டிவி மீது போர்த்தியிருக்கும் துணியை என் தலை மீது முக்காடுபோல போட்டுக் கொள்வேன். ஏனென்றால் அந்த வெளிச்சம் முகத்தில் அடிக்கிறது என டிவியை அணைக்கச் சொல்வார்கள். எனவே இந்த ஏற்பாடு. செய்திகளில் கலைஞரின் பேச்சு வந்தால், அந்தச் சயமத்தில் வேறு சானல் மாற்ற விடமாட்டேன். ஒருவேளை யாரேனும் மாற்றினால் வீட்டில் கலவரமே நடக்கும். நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வலம்புரி ஜான், ஆடலரசன், கூத்தரசன், வைகோ, காளிமுத்து, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் இவர்களின் ரசம் ஒழுகும் உரைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். என் சிறுவயதில் எங்கள் ஊர் வானொலித் திடல் பொதுக்கூட்டத்தில் இரவு 12 மணிவரை உட்கார்ந்து கேட்டுள்ளேன். எனக்குள் இருந்த ஒரே உந்துதல் அரசியல்தான். அதன்மீது அதிக ஈடுபாடு வரும்போது பெரியார் அறிமுகமானார். யார் இவர் எனக் கேள்விப்பட்டு, அவரைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அதனால் நேரடி அரசியலைக் கடந்து தத்துவார்த்த அரசியல் மீது விருப்பம் திசை மாறியது.
‘வாசிக்கின்ற பழக்கம் அம்மா…’ வழியே உண்டானது. ராணி, குமுதம், ஜெமினி சினிமா ஆகிய வார இதழ்களை அம்மா விடாமல் படித்தார். அம்மா மாத சந்தா கட்டிப் படித்து வந்தார். அதனால் அந்த இதழ்கள் வீட்டுக்கே வந்துவிடும். வீட்டில் வேறு எவருமே படிக்க மாட்டார்கள். வீட்டு வேலைகள் ஒழிந்த பிற்பாடு இரவு 10 மணிக்குமேல் அம்மா மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தொடர்கதைகளைப் படிப்பார். அப்பாவுக்குப் படிக்கவே தெரியாது. ஆனாலும் அவர் என்னை செவ்வாய்தோறும் வீட்டுக்கு வரும் ராணியில் அச்சாகியுள்ள ராசி பலனை உரக்கப் படிக்கச் சொல்வார். தமிழை எவ்வளவு தப்பும் தவறாகப் படிக்க முடியுமோ, அந்தளவு பிழையுடன் படிப்பேன். வேறு வழியில்லை அவருக்கு, அதைக் கேட்டுக்கொள்வார். இப்படித்தான் எனக்கு தமிழ் வாசிப்பு அறிமுகமானது. எனக்கு ராசிபலன் மீது ஆர்வம் இல்லை. எனவே அண்ணா, கலைஞர் பற்றிய கட்டுரைகளை ராணியில் படிப்பேன். அன்புள்ள அல்லி கேள்வி- பதிகளைப் படிப்பேன். அதனால் அரசியல் ஆர்வம் அதிகமானது. என் அம்மாவுக்கு சினிமா மீது ஈர்ப்பு. வெறித்தனமான திரையுலக ரசிகர் அவர். அதில் அபார ஞானம் உள்ளவர். அந்தக்கால சினிமா பற்றி எந்தத் தகவலைக் கேட்டாலும் உடனே சொல்வார். விரல் நுனியில் விவரங்களை வைத்திருப்பார். அதற்குக் காரணம் ஜெமினி சினிமா, ராணிதான். ஆனால், நான் சினிமா குறித்து படிக்க மாட்டேன். அரசியல் கட்டுரைகள் மீதுதான் என் கண் போகும்”.
அப்படி என்றால், ஒரு பேச்சாளராக நினைத்த நீங்கள் எப்படி கவிஞராக மாறினீர்கள்?
“பத்திரிகைப் படிப்பு என்பது மாறி நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். மேடைப் பேச்சு என்பது வெறுமனே வராது என எனக்குத் தெரிந்தது. நமக்குள் ஒரு கருத்திருந்தால்தானே அதை மற்றொருவரிடம் எடுத்துச் சொல்ல முடியும். அப்படிச் சொன்னால்தான் மக்களைக் கவர முடியும். அதற்காக அரசியல் நூல்களைப் படித்து குறிப்பு எடுப்பேன். அதை நண்பர்களிடம் விளக்குவேன். என் பொது அறிவு பலரைக் கவர்ந்தது. பேச்சின் மீதும் கலைஞரின் மீதும் இருந்த ஆர்வத்தால் 14 வயதிலேயே திமுகவில் இணைந்தேன். பொதுச்செயலாளர் அன்பழகன் கையெத்திட்ட உறுப்பினர் அட்டை என்னிடம் உள்ளது.
நான் திமுக உறுப்பினர் அட்டையைப் பெறுவதற்காக எத்தனை குற்றேவல் வேலைகளை செய்துள்ளேன் என்பதைப் பற்றி 10 பக்கங்கள் அளவில் கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன். அதைப் படித்துவிட்டு கவிஞர் யுகபாரதி சமீபத்தில்கூட பேசினார். அதை அப்படியே திரைப்படமாகவே எடுக்கலாம் என்றார். எனது ஊரில் எம்.செல்வராஜ் அந்நாளில் திமுக எம்.எல்.ஏவாக இருந்தார். திமுக தலைமைக்கழக அமைப்புச் செயலாளராக இருந்தவர். அண்ணா காலத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களில் அவரும் ஒருவர். அண்ணாவுக்கு கார் வாங்கிக் கொடுத்தவர் என அவரைப் பற்றி ஊரில் துணுக்குச் செய்தி சொல்வார்கள். அந்தளவுக்கு கட்சியில் சீனியர். 1957இல் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குப் போனவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
எனக்கு சகல கட்சிகளிலும் தெரிந்தவர்கள் இருந்தனர். அதிமுக இரண்டாக பிரிந்தபோது சேவல் சின்னம் ஒருபக்கம். இரட்டைப்புறா இன்னொரு பக்கம் எனப் பிரிந்து மோதிக் கொண்டது. அப்போது ஒரு திமுககாரனாக நின்று அதை நான் விமர்சித்திருக்கிறேன். சேவல் சின்னம் சார்பாக ஆர்.டி. அரங்கநாதன் போட்டியிட்டு வென்றார். சேவல் சின்னத்தில் சி. ராமநாதன் நின்றதாக நினைவு. இவர்களுடன் நேரடிப் பழக்கம் எனக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டது.
ஊரில் ஜனதா தள தலைவர் ஒருவர் இருந்தார். அவருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. இந்தக் காலகட்டத்தில் என்னை வீடு தேடி வந்து சந்திக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 50 வயது இருக்கும். இந்த சகவாசத்தை வீட்டிலுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தப் பொடியனைத் தேடி ஏன் இவர்கள் வருகிறார்கள் எனக் குழம்பினார்கள்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஜனதா கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்து இருக்கிறேன். ஏர் உழவன் சின்னத்துக்குத்தான் முதன்முதலில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டுள்ளேன். அதைப் பார்த்து தெருவிலுள்ள அக்காக்கள் சிரிப்பார்கள். இவர் ஓர் ஆளு. இவரு வந்து ஓட்டுக் கேட்கிறார் என நகைப்பார்கள். நான் கூச்சமே இல்லாமல்கூட நான்கு பிள்ளைகளைச் சேர்த்துக்கொண்டு, ‘போடுங்கம்மா ஓட்டு ஏர் உழவு சின்னத்தைப் பார்த்து’என வீதிகளில் கத்திக்கொண்டே போவேன். இளம் வயதிலேயே என் அரசியல் ஈடுபாடு வெறும் பேச்சாக இருந்ததில்லை. நான் ஒரு செயல் வீரன். களத்தில் நின்ற ஆள்.
இதனால் என் இளம்வயதுப் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் தனித்துத் தெரிந்தேன். கிடைத்த தரவுகளை வைத்து விவாதிப்பேன். கட்சியிலுள்ள பத்து பேரின் தரவுகள் குறித்து சொல்வதில் நான் முதல் ஆளாக திகழ்ந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு வயதில் மூத்தவர்களுக்கே வழி சொல்லும் ஆளாக மாறினேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். த.மா.கா. புதியதாகப் பிறந்தது இல்லையா? நரசிம்மராவை விட்டு ஜெயலலிதா வெளியேறுகிறார். அப்போது நரசிம்மராவ் கூட்டணி. காங்கிரஸ் உடைகிறது. அந்த நேரத்தில், நான் ரஜினி ரசிகர். அவரது ஆதரவு த.மா.காவுக்குக் கிடைத்தது. உடனே நான் தமாகா பக்கம் போய்விட்டேன்.
அப்துல் காதர் ஆணைமுத்து என்று ஊரில் காங்கிரஸ் தியாகி ஒருவர் இருந்தார். அவர் மிளகாய் மண்டிக் கடை வைத்திருந்தார். அவருக்கு அப்போதே 70 வயது இருக்கும். அவர், தினமும் காலை என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்துவிடுவார். சத்தியமூர்த்தி பவனில் அப்போது ஜெவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என சண்டை நடக்கிறது. நரசிம்ம ராவ் பேனரை ஒருவர் செருப்பால் அடித்தார். பத்திரிகைகளில் அது அட்டைப்படமாக வந்தது. அவர்தான் அப்துல் காதர் ஆணைமுத்து. அவருக்கு என் வீட்டுக்குப் பக்கம்தான் வீடு. அவரும் நானும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் கட்சிக்காக சேர்த்தோம். இந்த த.மா.கா. வருவதற்கு முன்பு, நான் பக்கா திமுகக்காரன். ரஜினி மீது இருந்த பற்றால் த.மா.கா போனேன். த.மா.கா.தொடங்கிய பின்னால் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினி பால்காரனாக சைக்கிளில் வருவார். அந்தச் சின்னத்தைப் போட்டு, த.மா.கா. ஓட்டுக் கேட்டது. நான், த.மா.காவில் முறைப்படி இணைய சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து வரப்பட்டேன். மூப்பனார் தலைமையில் த.மா.காவில் இணைந்தேன். அதில் இணைந்த பிறகு, எங்கள் ஏரியாவில் வார்டுத் தலைவராக நியமிக்கப்பட்டேன். அப்போது எனக்கு 18 வயது இருக்கலாம். நான் இரண்டு நாள் சத்தியமூர்த்தி பவனிலேயே தங்கி அங்கேயே குளித்து, உண்டு உறங்கியுள்ளேன். 2வது நாள் மூப்பனாரைச் சந்தித்தேன். கட்சியில் இணைந்தபிறகு எங்கள் மாவட்டத் தலைவர் (கடலூர்) பிஆர்எஸ் வெங்கடேசன் அவர் எனக்கு மாவட்ட
அளவில் பொறுப்புக் கொடுத்தார்.
அந்த வயதில் என்னை வார்டுக்கு தலைவராகப் போட்டார்கள். ஆர்.டி. அரங்கநாதன் என்பவர் அப்போது அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த காலம். அவர் வார்டுக்கும் நான்தான் தலைவர். அவர் அதிமுக நகரச் செயலாளர். எதிர்க்கட்சியினர் ஓட்டுக் கேட்டு வீட்டுக்கு வந்தார்கள். அப்போது ‘த.மா.கா. வார்டுத் தலைவர் இருக்கிறாரா?’ எனக் கேட்டார் அரங்கநாதன். ‘தலைவரை வரச் சொல்லுங்கள்’ எனச் சொன்னார். டவுசர் போட்டுக்கொண்டு வெளியே வந்து நான் நிற்பதைக்கண்டு, ‘தலைவர் எங்கே?’ என்றனர். சுற்றி இருந்தவர்கள் என்னைக் காட்டினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.அரங்கநாதன் என்னைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியானார். ‘நான் கட்சியில் பல பொறுப்புகளிலே இருக்கிறேன். வயசான பிறகுதான் பொறுப்பே கொடுத்தார்கள். இவன் பொடிப்பயல். இந்த வயசுலயே தலைவராகிவிட்டான்’ எனக் கிண்டலடித்தார். உடனே நான், ‘நாங்க அ.தி.மு.க. கூட்டணி இல்லை. திமுக கூட்டணி’ எனச் சொன்னதுடன், அவர் ‘உன்னைப் பற்றி கிண்டலடிக்கிறோம்’ என்றார். அப்போது எனக்குச் சரியான கோபம். மீண்டும் அவர், ‘உன் அப்பாவைக் கூப்பிடு’ என்றார். என் அப்பா வந்து பார்த்துவிட்டு, நீ பிரச்னை பண்ணாதே; இங்கு திமுக, அதிமுகதான் பலமான கட்சி. அதனால் நீ தேசியக் கட்சியில் சேர்ந்துவிடு. அதில் சேர்ந்துவிட்டால் உனக்குப் பிரச்னை வராது’ என ஐடியா கொடுத்தார். நான் பக்கா திமுகக்காரன். ரஜினியால்தான் த.மா.காவுக்குப் போனேன். என்னிடம் வந்து தேசிய கட்சியில் சேர்ந்துவிடு என்று அவர் சொன்னது மேலும் கோபம் வந்தது. அன்றே எனக்குத் தெரிந்துவிட்டது. த.மா.கா. ஒரு டம்மியான கட்சி. அதனால் மாநில உரிமையை உறக்கப் பேச முடியாது என்று. அதனால் நான் மீண்டும் திமுகவிற்கே வந்துவிட்டேன் நான். எம்.செல்வராஜ் தலைமையில் என்னை திமுகவில் இணைவதற்காக அழைத்து வந்தார்கள். அப்போது நான் கலைஞரின் விசுவாசி. என் வீட்டில்கூட திமுக குறித்த தலைவர்களின் கதைகள் சொல்வேன். அவரைப்போல பேசிக்காட்டுவேன்.
இது மட்டுமல்ல; திமுகவுக்காக 2 கவுன்சிலர்களை வெற்றிபெற வைத்தேன். அவர்களுக்கு நான்தான் பிரச்சாரப் பீரங்கி. அதில் ஒருவர் வெற்றி பெற்ற பிறகு பொதுமக்கள் முன்னிலையில் என் காலில் விழுந்து வணங்கினார். ‘இவருடைய பேச்சாற்றலால்தான் வெற்றேன்’ என்றார். அவர் பெயர் பூண்டுக்கடை ராமலிங்கம். அவர்தான் என் வார்டு திமுக கவுன்சிலர். அதுபோல் பக்கத்து வார்டு உறுப்பினராக போட்டிபோட்ட டீக்கடை பாய் என்பவரை வெற்றிபெற வைத்தேன்.
இப்படியான பயணத்தில் எப்படி கவிதை எழுதத் தொடங்கினேன் என்பதே எனக்குத் தெரியாது. ஏதோ ஒன்றை நோட் புக்கில் எழுதி வந்தேன். அது எனக்கு என்னவென்று தெரியாது. இதைக் கொண்டுபோய் என் நண்பனிடம் கொடுத்தேன். அதை அவன் படித்துப் பார்த்துவிட்டு, இது கவிதை’ என்றான். ‘கவிதையா, அப்படியென்றால் என்ன?’ என நான் கேட்க, உடனே அவன், ‘நீ சுரதாவைப் படி; கண்ணதாசனைப் படி’ என்கிறான். தவிர, நூலகத்திற்குப் போகும் திசையைக் காட்டினான். அங்கேபோய் பத்திரிகைகளைப் படித்து தேர்தல் பிரசாரத்திற்கு குறிப்புகள் எடுப்பேன். நூலகம் போன பிறகு நிறைய புத்தங்களை எடுத்து படிக்கத் தொடங்கினேன். ஞானக்கூத்தன், ஆத்மாநாம், வண்ணநிலவன், பொன்னீலன், பிரபஞ்சன், கந்தர்வன், அஷ்வகோஷ், சா.கந்தசாமி, கி.ரா. என நிறைய பேரைப் படித்தேன். கூடவே கவிதைகள் எழுதி வந்தேன். ஆனால், இந்த எழுத்தாளர்கள் படிக்கத் தொடங்கிய பிறகு மொழிநடை மாறியது.
மணிமுத்தாற்றில் யாரோ ஒருவர் பிறந்த பச்சிளம் சிசுவை அநாதையாக பாலத்தின் அடியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அது என் மனதைப் பாதித்தது. அதைவைத்து ஒரு கவிதை எழுதினேன். அதுதான் என் முதல் கவிதை. தற்போது நினைவில் இல்லை. மனவலியோடு அதை எழுதினேன். எழுதும் போது அதுதான் கவிதையின் வடிவம் என்பதை நான் அறியவில்லை. படித்தவர்கள் அதைக் கவிதை என்றார்கள்.
இதே பருவத்தில் எங்கள் ஊரில் சேக்கிழார் மன்றம், வள்ளலார் மன்றம், வள்ளுவர் வட்டம், சைவ சித்தாந்தக் கழகம் என தமிழ் மொழி சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் என்னைப் பார்த்ததும் விசாரிப்பார்கள். எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர் என்ன? என்பார்கள். ஒருமுறை வழக்கறிஞர் மெய்கண்டநாதன் என்பவர் என்னை விசாரித்தார். இந்த ஆடு ஏதோ தப்பி இந்த மந்தைக்குள் புகுந்துவிட்டதோ என அவருக்குச் சந்தேகம். உன் பெயர் என்ன? என்றார்? நான் வான்மதிதாசன்! என்றேன். அதுவரை அப்படி ஒரு பெயர் என் மனதில் மறைந்து கிடந்தது எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னதும் அவர் மிரண்டுவிட்டார். உங்கள் அப்பா என்ன செய்கிறார்? தமிழாசிரியரா? எனக் கேட்டார். நான், அவர் ஒரு லேத் பட்டறை ‘மெக்கானிக்’ என்றேன். ‘நல்ல தமிழ்ப்பெயராக வைத்துள்ளார்’ எனச் சொல்லிவிட்டுப் போய் விட்டார். இதுபோல தமிழார்வம் என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றுள்ளது. அதில் கவிதைக்கும் இடம் உண்டு”.
உங்கள் அரசியல் பயணம் சுவையானது. அதிலிருந்து இலக்கியப் பக்கம் திரும்பியது எப்படி?
“எழுத்தாளனாக முறைப்படி கடற்கரய் என்ற பெயரில்தான் பத்திரிகைகளில் எழுத தொடங்கினேன். அரசியல் வட்டத்தில் கடற்கரய் என்றால்தான் தெரியும். அண்ணாதுரைக்கு கார் வாங்கிக் கொடுத்த எம்.செல்வராஜ் இறந்துபோது அதை மனதில் கொண்டுதான் திமுகவினர் என்னிடம், ‘நீ ஒரு கவிதை எழுது; அதை இரங்கல் கூட்டத்தில் கொடுக்கலாம்’ என்றனர். உடனே உட்கார்ந்து எழுதினேன். அவருக்குக் கட்சியில் அதிக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஒரு பேச்சு இருந்தது. அதை வைத்து ஒரு நெடிய கவிதை எழுதினேன். அதில் சில வரிகள் மட்டும் ஞாபகம் வருகிறது. ‘இந்த ஆட்சி நாற்காலியோ உன் எலும்புக்கூடுகளால் பின்னப்பட்டது. பிறகு உனது இறுதி நாட்களோ உன் கட்சிக்கார்களாலேயே எண்ணப்பட்டது’ என எழுதித் தந்தேன். அந்த வரிகளைப் பார்த்துவிட்டு எம். செல்வராஜின் ஆதரவாளர்கள் துள்ளிக் குதித்துவிட்டனர். இந்தக் கவிதையை மட்டும் ஆயிரக் கணக்கில் அச்சடித்து ஊர்வலத்தில் கொடுத்தார்கள். அதை ரொட்டிக்கடை ராசு என்பவர் படித்தார். பின்னாளில் இவர் மதிமுகவிற்குச் சென்றுவிட்டார். அப்போது அவர் திமுகவில் மூத்த கட்சிக்காரர்.
இந்தக் கவிதை வரிகள் அவரை மிகவும் பாதித்ததால், இதை எழுதியது யார் எனக் கேட்டார். அப்போது என்னை அழைத்துக் கொண்டுபோய் அவரிடம் அறிமுகம் செய்தார்கள். அவர் பார்த்துவிட்டு ஷாக் ஆகிவிட்டார். இதை நீதான் எழுதினாயா?’ எனக் கேட்கிறார். ‘ஆம்’ எனச் சொன்னபிறகு, அவருடன் பயணிக்கத் தொடங்கினேன். மல்லிகை கமிஷனை எதிர்த்து பெ.தமிழரசன் தலைமையில் ஊரில் ’நண்பர்கள் கழகம்’ சார்பில் ஒரு கூட்டம் போட்டார் ராசு. மல்லிகையிலிருந்து வந்து வீடியோ ஷூட் செய்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்க வந்தவர், இறுதியில் ஏனோ வரவில்லை. ஏதோ பின்வாங்கிவிட்டார். அவர் வராததால், என்னை ராசு தலைமை உரையில் போட்டார். அப்போது நான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேசினேன். புலிகளின் ஆதரவாளனாக இருந்து பேசினேன். இப்படி ஆர்வம் வளர வளர, இறுதியில் பெரியாரிடம் கொண்டுபோய் என்னைத் தள்ளியது. பெரியாரைப் பற்றி நான் படித்ததற்குப் பிறகு, எனக்கான இடம் அரசியலில் இல்லை என ஒரு மனநிலை உண்டானது. மேடையில் பேசுவதை மனம் ஏற்க மறுத்தது. இந்தக் காலகட்டத்தில் இலக்கிய ஆர்வலர்கள் என்னைத் தேடி வரத் தொடங்கினர். எந்தக் கட்சி சார்ந்து பங்களிப்பு செய்யாமல் இருந்தாலும் என்னைத் தேடி வீட்டுக்கு அரசியல் கட்சினர், தமிழ் தேசியம் பேசுபவர்கள், பெரியார் வட்டத்தினர் எனப் பல தரப்பினர் வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக இலங்கைப் பிரச்னையில் ஆர்வம் காட்டவில்லை. அந்த நேரத்தில்தான் மருத்துவர் ராமதாஸ் இலங்கை ஆதரவாளராகத் தோன்றினார்.
இதையடுத்து, அவர் கட்சி மீது எனக்கு ஒரு ஈடுபாடு வந்தது. இதற்கிடையே நான் தமிழ்த் தேசியவாதக் குழுக்களுடன் தோழமை கொண்டிருந்தேன். சுபவீ, தியாகு, புதுக்கோட்டை பாவாணன், பழ.நெடுமாறன் போன்றவர்களை அழைத்து கூட்டம் போட்டேன். இது தவிர புலவர் அருளி, புலவர் கலியபெருமாள், ஆணைமுத்து போன்றவர்கள் பேசும் கூட்டங்களிலும் பங்கேற்றேன். இதனால் எனக்கு சகல தரப்பு அறிமுகம் கிடைத்தது. கூடவே காவல்துறை நெருக்கடி அதிகமானது. சரி, வெளிப்படையாக இயங்கலாம் என பாமகவை தேர்வு செய்து போனேன். எங்கள் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான் ஒரு ஈழ ஆதரவாளராகத் தெரிந்தேன். நான் நல்ல பேச்சாளன். என்னால் பேசி நூறு பேரைத் திரட்ட முடிந்தது. அதற்கான வலு என்னிடம் இருந்தது. தமிழ்மொழிக் கல்வி வேண்டி ‘நந்தன்’ ஆசிரியர் ஆணா ரூணா தலைமையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் ஒரு கூட்டம் போட்டார்கள். கூட்டமே இல்லை. நான்தான் முதலில் பேசி கூட்டத்தை திரட்டினேன். தாய்வழிக் கல்விக்காக தமிழ்நாட்டில் பல ஊர்களில் பிரசாரம் செய்திருக்கிறேன். என்னை மேடையில் ஏற்றிவிட்டால் போதும், எந்தப் பகுதியில் இருக்கும் மக்களையும் பேசியே திரட்டி விடுவேன். ஈழ அரசியல், தமிழ் மொழி பிரசாரத்திற்காக தமிழகத்தில் பல ஊர்களுக்குப் போய் பேசி இருக்கிறேன்.
ஈழ ஆதரவாளராக இருந்தபோது கியூ பிராஞ்ச் போலீசார் தினமும் என் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள், ‘யாரைச் சந்திக்கப் போகிறீர்கள்?, என்ன பேசப் போகிறீர்கள்’ எனக் கேட்பார்கள். ரகசியக் கூட்டம் போடுகிறார்கள் என போலீஸ் கெடுபிடி இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ராமதாஸின் ஈழம் ஆதரவு பெரிதானது. அதனால்தான் அவரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது எங்கள் ஊரில் (விருத்தாசலம்) பா.ம.க. சார்பில் பெரிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சித் தலைவர்கள் யாருக்கும் பேச வாய்ப்புக் கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பேச வாய்ப்புத் தந்தார்கள்.
மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நான் அந்தக் கட்சியில் இணைந்தபோது எடுத்திருந்த படத்தை எல்லாம் வீட்டில் எரித்துவிட்டார்கள். அந்த மாநாட்டில் நான் பேசியதைக் கேட்டு ராமதாஸ் ரசித்தார். என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னார். அடுத்து, தைலாபுரம் தனிக் கூட்டத்தில் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பற்றியும் சாதி மறுப்பு பற்றியும் பேசினேன். அந்தக் கூட்டத்தில் பெரிய பேச்சாளர்கள் இருந்தபோதும், என் பேச்சைக் கேட்டுவிட்டு ராமதாஸ் பெருமையாகப் பேசினார். அதன்பிறகு, கிராம மாநாட்டிற்கு என்னைத் தலைவராகப் போட்டார். ஊர் ஊராகப்போய் பேசினேன். ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என முடிவு கட்டினேன். படிப்பது, எழுதுவது என 1999இல் முடிவுசெய்தேன்”.
எப்படி பத்திரிகை துறைக்குள் வந்தீர்கள்? அந்தப் பின்னணியைப் பற்றி சொல்லுங்கள்?
“என் நண்பர் ஒருவர், ‘நீ சென்னைக்குப்போ; பத்திரிகையில் வேலை பார்’ எனச் சொன்னார். அதைக் கேட்டு நானும் சென்னை வந்தேன். குங்குமம் பத்திரிகை நிறுவனம் வேலைக்காக நேர்முகத் தேர்வு நடத்தியது. ஆனால், எனக்கு நேர்முகத் தேர்வு என்றால் என்னவென்று தெரியாது. அப்போது நான் தூய தமிழிலேயே பேசுவேன். நீங்கள் ‘குங்குமம் படிப்பீர்களா? என அதன் ஆசிரியர்’ கேட்டார். நான், அதைத் தவிர வேறு சஞ்சிகைகளின் பெயர்களைச் சொன்னேன். நான் சஞ்சிகை எனச் சொன்ன சொல் என் தனித்தன்மைக்கு அடையாளமானது. ஆசிரியர் அதைச் சுட்டிக்காட்டினார். ‘இந்த இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு, ‘இந்த இதழை நான் படிப்பதே இல்லை. என்னால் என்ன சொல்ல முடியும்?’ எனப் பதிலளித்தேன். அதற்கு ஆசிரியர், ‘இந்த ஃபைல் காப்பியை வாங்கி ஒரு மணிநேரம் படித்துவிட்டு வந்து உங்கள் விமர்சனத்தைச் சொல்லுங்கள்’ என்றார்.
நான் வெளியில் அமர்ந்து ஒரு மணிநேரம் படித்தேன். பிறகு, ‘என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்டார். அவரிடம் நான், ‘இதில் நிறைய சினிமா செய்திகள் உள்ளன’ என்றேன். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என மீண்டும் கேட்டார். ‘சமூகத்தை மாற்றும்படியான செய்திகளை எழுத வேண்டும்’என்றேன். அதற்கு அவர், ‘நானும் 25 வருடங்களுக்கு முன்பு, இதேபோன்று சமூகத்தை மாற்றுவதற்காக வந்தவன்தான். அப்படி, எந்தப் பத்திரிகையும் இல்லை. நம்முடைய கருத்துகளை மறைமுகமாகத்தான் சொல்ல முடியும். முழுமையாகச் சொல்ல முடியாது. அது சோற்றுக்கு வழி தராது. நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். இதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்குமே வேலைக்குச் செல்ல முடியாது. இங்கிருந்து கற்றுக் கொள்ளுங்கள். சரியா? தவறா? எனப் பின்பு முடிவெடுங்கள்’ என்றார். அதைக் கேட்டு நானும் ‘சரி’ என்றேன். ‘எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றார். நான், ‘தெரியவில்லை’ என்றேன். உடனே அவர், ‘நீங்கள் ஊரில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?’ என்றார். நான், ‘ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்’ என்றேன். அவர், உடனே சென்னையில் தங்குவதை எல்லாம் சேர்த்துப் பார்த்து 2 ஆயிரம் தருவதாகச் சொன்னார். நானும் சரி எனச் சொல்லி வேலைக்குச் சேர்ந்தேன்.
எங்களை வேலைக்கு எடுத்த நபர், எங்களைப் பற்றிய விவரங்களை நிர்வாகத்தினரிடம் கொடுக்கவே இல்லை. அந்தக் காலத்தில் ஹெச்.ஆர். என்ற துறை என்று யாரும் இல்லை. யாரோ பொறுப்பற்றவரின் செயலால், 6 மாதமாக சம்பளமே கிடைக்கவில்லை. நான் வெறும் ஆயிரம் ரூபாயுடன்தான் சென்னைக்கு வந்தேன். அது ஒரு மாதத்திற்குள் காலியாகிவிட்டது. எனவே, தினமும் டிக்கெட் எடுக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய நிலை. பலமுறை பிடிபட்டுள்ளேன். அப்படி பிடிபடும்போது ‘எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டு 2 மணிநேரம் உட்கார வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். இதே பிழைப்புதான். அதன்பிறகு நான் முடிவு செய்தேன். நாம் நினைத்துக்கொண்டிருக்கும் உலகம் வேறு; நாம் நம்பும் உலகம் வேறு; நாம் வைத்திருக்கும் தமிழ் அறிவே வேறு என முடிவு செய்தேன். வெகுஜனப் பத்திரிகைகளைப் படித்துதான் எனக்கென ஒரு தமிழ் அறிவே வளர்த்துக் கொண்டேன். நான் ஒரு தமிழை வைத்திருந்தேன். ஆனால், அது சரியில்லை என்பதை பத்திரிகை பணிக்காலத்தில் உணர்ந்தேன். வெகுஜனப் பத்திரிகைதான் எனக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. நான் என் சிறுவயது முதலே ஒருபக்கச் சார்பு என்ற மனநிலையில் வளரவே இல்லை. அரசியல், சமூக நீதி, விளிம்புநிலை மக்கள், பின்நவீனம் எனப் பலதரப்பட்ட நூல்களையும் படித்தேன். ஓஷோ, பெரியார், ஜி.கிருஷ்ணமூர்த்தி இவர்களைக் கலந்துக்கட்டி படித்தபோது உலகம் என்பது ஒரு கருத்தியலில் இல்லை எனப் புரியவந்தது. பல்வேறு கருத்தியல்கள் நிறைந்ததுதான் உலகம். ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வார், உண்மையை அடைய ஒரே ஒரு பாதை கிடையாது என்று. அது என்னைக் கவர்ந்தது”.
கடற்கரய் என்ற புனைபெயரை தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?–
“கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தபோது, ஜாதி, மத அடையாளம் இல்லாமல் ஒரு பொதுவான பெயராக இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்தப் பெயர் எந்தச் சாயலிலும் இருக்கக்கூடாது என மனம் சொன்னது. இயற்கையை நேசிப்பவனாக கடற்கரையை புனைபெயராக சூட்டிக் கொண்டேன். பெரியார் ஈடுபாட்டால் அதில் மொழி சீர்திருத்தைக் கடைப்பிடித்தேன். கடற்கரை என்பதை கடற்கரய் என மாற்றி எழுதினேன். அப்போது பழமலய் என்பவர் அப்படி தன் பெயரை எழுதிவருகிறர் என நான் அறியவில்லை. தனித்தமிழ் ஆர்வலராக நான் பத்திரிகைகளுக்கு அஞ்சலட்டை எழுதும்போதுகூட ஊர்பேரை விருத்தாசலம் என எழுத மாட்டேன். திருமுதுகுன்றம் என்றுதான் எழுதுவேன். ஊர்ப் பெயரை தூய தமிழில் மாற்ற கையெழுத்து இயக்கம், போராட்டங்களை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியுள்ளேன்.
நான் இளம் வயதிலேயே தமிழ் தேசியம், திராவிட அரசியலைப் படித்து விட்டேன். நான் முதன்முதலில் படித்த கவிதை நூல் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புதான். அதன் பிறகுதான் நவீன இலக்கிய அறிமுகம். வாசித்துள்ளேன். நான் விரும்பிப் படித்தது பாரதிதாசன் கவிதைகள்தான். பாரதிதாசன் என்னை பாரதி பக்கம் அனுப்பிவைத்தார். அப்படித்தான் நான் எழுதிய அநாதைக் குழந்தை பற்றிய கவிதைக்குப் பரிசு கிடைத்தது. வாணியம்பாடி அப்துல்காதர் கொடுத்தார். அந்தக் கவிதை கடற்கரய் என்ற பெயரில்தான் பரிசு பெற்றது. இதைச் சொன்னால் இன்னும் வியப்பாக இருக்கும். என் புனைபெயருக்கு வந்த முதல் கடிதம் என் அம்மா எழுதியது”.
சினிமா நிருபராக நீண்டகாலம் பணியாற்றி உள்ளீர்கள். அந்த அனுபவம்?
“ஒருசில நாள் கோர்ட் நியூஸ் எடுக்க அனுப்பினார்கள். பின்னர், அதில் ஆர்வமில்லை எனச் சொன்னேன். மாற்றி சினிமா பக்கம் அனுப்பினார்கள். நான் எந்த வேலையையும் கீழ்த்தரமானது என நினைத்ததில்லை. உயர்ந்தது, தாழ்ந்தது எனப் பேதம் பார்த்ததில்லை. நானொரு குழந்தைத் தொழிலாளி. என்னுடைய 13 வயதில் பள்ளி முழு ஆண்டு விடுமுறையில் வேலைக்குப் போனேன். எனக்கு 2 ரூபாய் சம்பளம். லேத் பட்டறையில் வேலை பார்த்தேன். காலை 8:30 மணிக்கு கடையை திறந்தது முதல் இரவு 9.30 மணி வரை ஆழ்துளை கிணறுக்குள் இறக்கப்படும் இரும்பு பைப்புகளை வண்டியிலிருந்து ஏற்றி இறக்க வேண்டும். இதற்கு ஒருநாளைக்கு 2 டீயுடன் 2 ரூபாய் சம்பளம். இந்த வேலை நான் 8 ஆம் வகுப்பு படித்தபோது செய்தது. காலையில் இரவு 9 மணிக்கு மேல் வேலை தொடர்ந்தால் கூடுதலாக ஒரு டீ குடிக்கலாம். பலநேரம் 9 மணிக்கு மேல் டீக்கடையை மூடிவிடுவார்கள் என்பதால், அந்த டீக்கும் உத்தரவாதம் கிடையாது. வீட்டில் என் அம்மா மாடு வளர்த்தார். காலை, மாலை இருவேளை அம்மா, பால் கறப்பார். அதைப் பல வீடுகளுக்கு விநியோகித்ததுதான் நான் பார்த்த முதல் வேலை. பால் கறக்கும்போது மாட்டைச் சொறிந்துகொடுக்க வேண்டும். அப்போதுதான் பால் தரும். அதைச் சொறிவதும் என் வேலை. அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு விற்பனை, கூரியர் பாய், சோப் விற்பனை, எலெக்ட்ரீஷியன் வேலைக்காக சுவர் உடைப்பது, மெக்கானிக் வேலை, மோல்டிங் பட்டறையில் வேலை எனச் சிறுவயது முதல் நான் பார்த்த வேலைகளின் பட்டியல் நீளம். ஆகவே, எந்தத் தொழிலையும் நான் இழிவாகப் பார்க்க மாட்டேன். அதன் மூலம் எப்படி தனித்து தெரிய வேண்டும் என்பது பற்றியே யோசிப்பேன். எனவே சினிமா நிருபர் வேலையைக் கொடுத்தபோது எனக்கு வருத்தம் இல்லை. என்னுடன் வேலைக்குச் சேர்ந்த ஒருவர், சினிமா துறையைக் கொடுத்தார்கள் என்பதற்காக வேலையை உதறித் தள்ளிவிட்டுப் போனார். நான் விடாப்பிடியாக வேலையை தொடர்ந்து பார்த்தேன்.
சினிமா நிருபராக நான் இருந்தபோதும் என்னுடைய வாசிப்புப் பழக்கத்தை விடவே இல்லை. அறைக்குத் திரும்பிவிட்டால் என் உலகம் வேறு; அலுவலகம் சென்றால் அங்கு வேறொரு ஆளாக இருப்பேன். இவை இரண்டையும் நான் குழப்பிக்கொள்ளவே மாட்டேன். அந்தப் பணியில் என்னைத் தரம் தாழ்ந்துகூட திட்டியுள்ளனர். நான் வருந்தியதில்லை. ஏனெனில், இதைவிட கஷ்டமான வேலைகளை செய்தவன் நான். எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் இருந்ததே தவிர, எதையும் இழிவாகப் பார்க்கும் குணம் இருந்ததில்லை. சினிமா நிருபராக இருந்ததற்காக பெருமை கொள்கிறேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. இன்று ஆய்வாளராக மாறியுள்ளேன். எனக்கு இந்த இரண்டுமே ஒன்றுதான். சாக்கடை அள்ளும் வேலை கிடைத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைப்பேன். இதை ஒரு பேச்சுக்காக நான் சொல்லவில்லை. என் மூளையே அப்படித்தான். அதை உயர்வாகவும், தூய்மையாகவும் எப்படி செய்யப் போகிறோம் என்கிற உணர்வு மட்டும்தான் என்னிடம் மேலோங்கி இருக்கும்.
சினிமா நிருபர் வேலையை ரசித்து செய்தேன். நான் சென்னைக்கு வரும்போது எனக்கு யாரையுமே தெரியாது. ஒரு பிரபலத்தின் போன் நம்பரும் கிடையாது. என் ஆபீஸ் போன் நம்பர்கூடத் தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமா துறையில் யாரையுமே தெரியாது. என்னுடைய சொந்த முயற்சியினால் நானே கர்ணம் போட்டு பல விசயங்களைக் கற்றேன். உச்சநட்சத்திரங்கள் பலரை பேட்டி எடுத்துள்ளேன். நான் பேட்டி எடுக்காத நபரே கிடையாது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என யாரைச் சொன்னாலும் அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். கடைசியாக நான், ஷாருக்கான் வரை பேட்டி எடுத்துவிட்டேன். யாருடைய உதவியும் பெற்றது இல்லை. நான் மிக மிக நம்பிக்கை கொண்ட மனிதன். காட்டுச் செடி. கரடுமுரடான பாதையில் நடை பழகியவன். நான் ஒரு தீராநதி. எனக்கு இலகுவான பாதைகளில் விருப்பம் இருந்ததில்லை. ஒரு பஸ் டிக்கெட்டைக்கூட போராடித்தான் பெற்றுள்ளேன். அது என் ஊழ்.
வைராக்கியம் நிறைய உள்ளவன். ஷூட்டிங் ஸ்பாட்டில் திரை நட்சத்திரங்களைப் பேட்டி எடுக்கச் சென்றால் சாப்பாடு போட்டாலும் அதைச் சாப்பிடமாட்டேன். இரவு எந்நேரமானாலும் பேட்டி எடுத்துவிட்டு வெளியில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுவேன்.
அப்போது நான் நினைத்துப் பார்ப்பேன். அவர் உச்ச நட்சத்திரம்; ஆனால் நான் கையேந்தி பவனில் சாப்பிடும் நபர். அதுதான் உன் வாழ்க்கை. எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதே என உள்மனசு சொல்லும். எனவே புகழ்போதையில் ஒருநாளும் நான் உழன்றதில்லை. நான் சிறுவயதிலேயே கலைஞர், மூப்பனார், ராமதாஸ் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றி இருந்தாலும் எனக்கு என்னமாதிரி இடம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் இருந்தது. என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் என்ன வேலை பார்க்கிறேன்? யாருடன் பேசுகிறேன் என்பது எதுவும் தெரியாது. நான் பெரிய நபர்களுடன் வேலை பார்க்கிறேன் என்று வீட்டில் சொல்லிக்கொண்டதில்லை. என்னிடம் ஒருவிதப் பண்பு, ஒழுக்கம் இருந்தது. நேரம் தவறமாட்டேன். திரை நட்சத்திரங்கள் ஒதுக்கிய நேரத்திற்கு முன்பே போய் நிற்பேன். என் வாழ்நாள் முழுதும் இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு வேலையை செய்து முடிக்கும்வரை, அது குறித்து வெளியே சொல்லமாட்டேன். ஏனெனில், அது எந்த நேரத்திலும் சிதைந்து போகலாம். இதனால், அதை நான் செய்யப் போகிறேன் என்று சொல்ல மாட்டேன்.”
ஆய்வாளராக மாற்றம் எப்படி நடந்தது? நீங்கள் அதற்கு முன் ஒரு கவிஞர்தானே? திடீரென்று ஆய்வுப் பக்கம் போனது எப்படி?
“நான் எந்த வேலை செய்தாலும் எனக்குள் ஒரு போதாமை இருந்துகொண்டே இருக்கும். நான் இப்போதுகூட ஓர் ஆய்வாளர் எனச் சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால், மிகச்சிறந்த ஊழியத்தை சமூகத்திற்காகச் செய்துள்ளேன். அதில் எனக்கு முழு நிறைவு உண்டு. நான் செய்தது மிகப்பெரிய ஆய்வு எனச் சொல்ல மாட்டேன். ஆனால் ஊதியத்திற்காக மட்டும் ஒரு மனிதன் வேலை செய்யக்கூடாது. சமுதாயத்திற்கு ஊழியமும் செய்ய வேண்டும். ஒரு விசயத்தைச் செய்கிறேன். வெறுமனே ஊதியம் பெறுவது என்பது மனித இனத்திற்கு எதிரானது. ஏனெனில் தொழில் என்பது நீ ஊதியம் பெறுவது மட்டுமே அல்ல. நீ ஊதியம் பெறுவதைப்போலவே, சமூகத்திற்கு ஊழியமும் செய்ய வேண்டும். இந்த இரண்டும்தான் மனித வாழ்க்கை. பாரதி அதை ‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்பார்.
ஊழியம் என்பது அரசியல் பின்புலத்திலிருந்து வந்ததால்தான் என்னுள் ஊறிய ஊற்று. நான் படிக்கும் காலத்திலிருந்தே எனக்குள் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என உணர்கிறேன். ஒரே வேலையை செய்ய மாட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்வேன். ஆய்வாளராக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செய்யவில்லை. நான் பத்திரிகையாளனாக ஆவேன் என்று நினைக்கவே இல்லை. ஆசைப்பட்டதும் கிடையாது. நான் எனது வாழ்நாளில் இரண்டு விஷயத்திற்காக ஆசைப்பட்டுள்ளேன். ஒன்று மேடைப் பேச்சாளர். மற்றொன்று துறவறம். ஆனால், துறவறம் மிக மிக மட்டமான வாழ்வு என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் அரசியலைத் தேர்ந்தெடுத்தேன். அரசியலுக்குள் வந்தபின்னர், ஊழியம் என்ற ஒன்று வருகிறது. போதாமைகள் வரும்போது என்னால் ஒரே வேலையைச் செய்ய முடியவில்லை. பத்திரிகை வேலையை நான் லயித்துச் செய்கிறேன். ஆனால், எனக்குப் போதவில்லை. ஒருகட்டத்தில் போதாமையை உணர்கிறேன். இளமையில் கவிதை எழுத ஆரம்பிக்கிறேன். அதை எழுதும்போது ஒரு போதாமை வருகிறது. இடையில் 12 ஆண்டுகள் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டேன். அதன் பின்னர் சில நூறு கவிதைகளை கொரோனா ஊரடங்கின்போது இடைவெளியே தராமல் எழுதினேன்.
திடீரென ஓர் ஆய்வுப் பணியை செய்யத் தொடங்கினேன். எனக்கு யாருமே ஒரு முன்மாதிரி கிடையாது. எனக்கு ஆய்வுப் பணியை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆவணக்காப்பகத்திற்கு எப்படிச் செல்வதும் என்பதும், ஒரு ஆய்வு முறைமையை எப்படித் தேர்வு செய்வது என்பதும், அரசு ஆவணங்களை எப்படித் தேடுவது என்பதும் எனக்குத் தெரியாது. இவை எதுவுமே தெரியாத நான், திடீரென ஓர் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். வேலையே என்னை வழிநடத்துகிறது. இதற்கு கடவுள்தான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். 2011இல் ஏ.கே.செட்டியார் நூற்றாண்டு வந்தது. அவரை முழுமையாகப் படிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அவர் எழுதிய குடகு, உலகம் சுற்றும் தமிழன் நூல்களை சென்னை வந்த சில ஆண்டுகளில் படித்திருந்தேன். அவரைப்பற்றிய நூல்களைத் தேட ஆரம்பித்தேன். அதில் போதாமை இருந்தது. அவர் நூல்கள் அச்சில் இல்லை. நாம் எதைத் தேடுகிறோமோ அது ஒருநாள் நம் கையில் கிடைக்கும். அது, இயற்கையின் நீதி. நீங்கள் முழுமனதுடன் அதைத் தேடினால், அது உங்கள் மேஜையில் வந்து உட்காரும். இது என் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பாடம். அது, உங்களுக்கு அருகில்தான் இருக்கும். அதைத் தேட ஆரம்பிக்கும்போகுதான் அது உங்கள் அருகில் உள்ளதை உள்ளம் உணரும். அது, ஒன்றும் உலகத்தில் இல்லாத பொருள் அல்ல. இப்படித்தான் நான் தேடித் தேடிப் படித்ததன் மூலம் ஆய்வுத்துறைக்குள் அடி எடுத்து வைத்தேன்.
அடிக்கடி பெயரை மாற்றுகிறீர்கள்… ஏன்?
“ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கிய பிறகு அதில் நான் மாதம் ஒரு பெயர் சூடிக் கொண்டேன். என் பெயர்களின் மீதே எனக்கு ஓர் ஈர்ப்பு இல்லாமல் போகிறது. ஒருநாள் கடற்கரய் டேனியல் கந்தசாமி எனப் பெயரை வைத்துக்கொண்டேன். தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மத்தவிலாச அங்கதம் என மாற்றினேன். அங்கதம் என்றால் பகடி. அதுதான் அடிநாதம். பல்லவ அரசன் மகேந்திர வர்மன் எழுதிய நாடகத்தின் பெயர் மத்தவிலாச பிரகசனம். இது அன்றைய அரசியலைக் கிண்டலடித்து எழுதப்பட்டது. அங்கதமே நாடகத்தின் உயிர்நாடி. நான் பெரும்பாலும் அங்கதமாகத்தான் பேசுவேன். அதனால் அங்கதத்தை எடுத்து எனக்குள் வைத்துக்கொண்டேன். அடுத்து பதிப்புத் துறைக்கு வரும்போது கடற்கரய் என்ற பெயரை மாற்றினேன். சிலர் ஒரே பெயரிலேயே இயங்குங்கள் என்றனர். எப்படி ஒரு வேலையைச் செய்யும்போது சுவாரஸ்யம் இருக்காதோ, அதுபோல் ஒரே பெயரிலும் சுவாரஸ்யம் இருக்காது. சாகும் வரை எப்படி ஒரே பெயருடன் வாழ்வது? அதனால்தான் பெயரை மாற்றிக்கொண்டே இருந்தேன்.
இறுதியில் இப்போதைக்கு இந்தப் பெயர் நிலைத்தன்மை அடைந்துவிட்டது. ந.மு.வேங்கடசாமி நாட்டார், கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் என ஆய்வாளர்களின் பெயர்கள் நீள நீளமாக இருந்தன. நாமும் அப்படி ஒரு பெயரை நீளமாக சூட்டிக் கொள்வோமே என கிண்டலாகத் தோன்றச் செய்தது. இளமைப்பருவத்தில் பல மரம் கண்ட தச்சன் நான். ஒரே பக்கம் மட்டுமே சார்ந்து படிக்க மாட்டேன். இருதுருவ கருத்தியலையும் படிப்பேன். எனக்குள் எப்போதும் இரண்டு மனிதன் இருக்கிறான். ஒரு பருவத்தில் பெருஞ்சித்திரனார் பாடல்களை நான் மனப்பாடமாகப் பாடுவேன். பாரதிதாசன் பாடல்களை ரசித்துப் படிப்பேன். அதன் கருத்து என்னை இழுத்தது. நான் திமுகவைப் பின்பற்ற வேண்டும் எனப் பிறக்கவில்லை. இந்தச் சமூகத்தின் அழுத்தத்தால் ஈர்க்கப்படுகிறேன். நான் படிக்கும்போது போதாமை குறித்து அனுபவிக்கிறேன். பொதுவாக, நான் வாசிக்கும்போது ஒரு வெற்றிடம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்”.
இளம் வயதிலேயே திமுகவில் இணைந்து பணியாற்றிய நீங்கள், அந்த இயக்கம் பற்றிய ஆய்வு எதையும் செய்யவில்லை. தேசிய நீரோட்டக் கருத்தியியல் கொண்ட காந்தி, ஏ.கே.செட்டியார், பாரதி என ஆய்வுகளை செய்துள்ளீர்கள்? இது முரண்பாடாக இல்லையா?
“இல்லை. ஓர் ஆய்வாளனாக அல்ல, முதலில் வாசகனாகத்தான் ஒரு ஆய்வைத் தொடங்குகிறேன். ஒரு மனிதனாக ஒரு துண்டுக் காகிதத்தில் உள்ள சில வரிகள்கூட நம், எண்ணத்தை மாற்றும். அதை, நான் பரிபூரணமாக நம்புகிறேன். எந்தக் கட்சியின் மீதும் எனக்கு வெறுப்பே கிடையாது. வலதுசாரி அமைப்பை மட்டும்தான் நான் தீவிரமாக எதிர்க்கிறேன். மற்றவை மீது அரசியல்ரீதியாக முரண்பாடுகள் மட்டும்தான் உள்ளன. எந்தத் தத்துவத்தின் மீதும் வெறுப்பு காண்பதில்லை. அதை முழுமையாகக் கற்க முயற்சி செய்யப் பாடுபடுகிறேனே ஒழிய, அதைப் புறந்தள்ள மாட்டேன். இது 2000இல் எடுத்த முடிவு. நான் அரசியல்வாதி அல்ல, பத்திரிகையாளன். அப்படி உள்ளபோது எந்த அமைப்பு சார்ந்தும் இருக்கக்கூடாது. நீதியின்பால் ஒடுக்கப்படுபவர் பக்கம்தான் நிற்க முடியும். ஒருவேளை, கட்சி சார்ந்து இயங்கினால் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாம். நான் அனைத்துக் கட்சிகளைக்கூட விமர்சனம் செய்துள்ளேன். என்னை ஒரு காந்தி ஆய்வாளர் என்கிறார்கள். ஆனால், நான் காந்தியையே விமர்சனம் செய்துள்ளேன். காந்தியின் போதாமைகள் குறித்து பேசியுள்ளேன். இது காந்தி இந்தியா இல்லை; அம்பேத்கர், நேரு இந்தியா. 1948 வரைதான் இது காந்தி இந்தியா. அதற்குப் பிறகு, நேருவின் பார்வையில் அம்பேத்கரின் சட்டத்தால் கட்டி எழுப்பப்பட்ட இந்தியா.
சட்டத்தின் பார்வையில் பார்த்தால் இது அம்பேத்கரின் இந்தியா. காந்திக்கு நாட்டில் இடம் இல்லையா என நீங்கள் கேட்கலாம். நம்மிடம் சட்டம் உள்ளது. ஆனால், அது தனித்து செயல்படாது. அதற்கு ஒரு விசை தேவை. எங்கெல்லாம் சட்டம் மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் காந்தியின் அறநெறிக் கொள்கை தலைதூக்கும். அவர் தேவைப்படுவார். சட்டத்தை மீறியவர்களை தண்டிப்பதற்கு சட்டம் மட்டுமே பத்தாது. குற்றவாளியைத் தண்டி எனச் சொல்வதற்கு ஒரு காந்தி வழி வேண்டும். பிரிட்டிஷ் மற்றும் இந்தியச் சட்டம் என எதுவாக இருந்தாலும் சட்டம் சட்டம்தான். போராடும் வழி என்பது வேறு. சட்டம் இருக்கிறது என்பதற்காக தண்டனை உடனே அளிக்கப்படுவதில்லை. நீதி தாமதிக்கப்படுகிறது. அதை உந்தித்தள்ள ஒரு அற உணர்வு தேவை. அந்த அறநிழல்தான் காந்தி. ஜேஎன்யுவில் வன்முறை நடந்தபோது சட்டப்படி போய் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் ஏன், மாணவர்கள் காந்தி படத்தைக் காட்டிப் போராட்டம் நடத்தினார்கள்? ஏனெனில், காந்தி என்பது ஒரு நீதியின் வடிவம். அது ஒரு அறவழிப் போர். அவரைக் காண்பித்தாலே நீங்கள் சட்டரீதியாகப் போராடப் போகிறீர்கள் என அர்த்தம். காந்தி, அண்ணா, பெரியார் என யாராக இருக்கட்டும். நான் யாரையும் எதிர்க்க மாட்டேன். எதிர்ப்பது என் வேலை கிடையாது. என் வேலை என்பது ஒருவரைப் புரிந்துகொள்வது. அவர்களுடைய நியாயத்தைக் கேட்பது. அந்த நியாயத்தின்பால் நான் ஒரு முடிவு எடுப்பது. ஒருவரின் நூல்களை முழுமையாகப் படிக்கிறேன். அதில் எனக்கு போதாமை ஏற்படுகிறது.
இந்தியாவில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் காந்தி இறப்பு முக்கியமானது. அது பற்றி எந்தத் தகவல்களுமே தமிழில் இல்லை. ஆனால், இது குறித்துப் பல செய்திகள் அந்தக் காலப் பத்திரிகைகளில் வந்தன. அவர் கொலை பற்றி முழு ஆய்வு சம்பந்தமாக ஏதாவது தமிழில் நூல் வந்ததா? காந்தி சுடப்பட்ட சம்பவங்கள் பற்றி தமிழில் ஆவணங்கள் இருக்கிறதா? காந்தி சுடப்பட்ட பின்னர், காந்தியவாதிகள் அதை எவ்வாறு பார்த்தனர் என ஏதாவது தரவுகள் உள்ளனவா? பழைய பத்திரிகையில் இவை அச்சாகி இருந்தாலும், அவை பலருக்கும் எளிதாகக் கிடைக்குமா? உலகில் பெர்னாட்ஷா, ஐன்ஸ்டீன் இறந்தது குறித்து ஆவணங்களும் இருக்கின்றன. அதுபோல் தமிழில் ஆவணங்கள் இல்லையே? இந்தப் பற்றாக்குறையை நான் உணர்கிறேன். எனக்கு திராவிட இயக்கத்தின் மீதும் சில ஆய்வுரீதியான பார்வைகள் உள்ளன. அந்த ஆய்வையும் நான் செய்வேன். பல தரவுகள் வைப்பறைக்குள் உள்ளன. அவை அச்சு வடிவில் வர அவகாசம் தேவை.
பாரதி, காந்தி பற்றிய புத்தகங்கள் இப்போதைக்கு வெளிவந்திருப்பதால் எனக்குத் தேசிய முத்திரை குத்த நினைக்கலாம். சிலருக்கு அது ஒரு வசதி. திராவிட இயக்கம் சம்பந்தமாகவோ அல்லது தமிழ்த் தேசிய சம்பந்தமாகவோ நாளை நான் ஆய்வு செய்வேன். அந்தப் புத்தகங்கள் வந்தால் நான் யார்? நான் என்ன வாதி? திராவிட இயக்கம் சார்ந்து நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. ஒரு வேலை முழுமை பெறும்வரை எந்த உத்தரவாதமும் தர முடியாது என்பது வாழ்வு கற்பிக்கும் பாடம்.. திராவிட இயக்கம் சார்ந்து ஆய்வு செய்ய குறைந்தபட்சம் 18 தலைப்புகள் என்னிடம் உள்ளன. காந்தியைப் பற்றி இன்னும் 8 நூல்கள் எழுதத் திட்டம் உள்ளது. ஆக, பல விசயங்களில் தமிழில் போதாமை இருக்கிறது. அவற்றை யாவும் ஒருநோட் போட்டு எழுதி வைத்துள்ளேன்.
இந்த ஆய்வுகள் யாவும் முடித்தால்தானே நூலாக வர முடியும். பாரதிதாசனைப் பற்றி 2000 பக்கம் எழுதுவதற்கு திட்டம் இருக்கிறது. இது பாரதிதாசனுக்காகச் செய்ய வேண்டிய எனது கடமை. இதற்கு நிதிகூடப் பிரச்னை கிடையாது. எனக்கு நிதி, தானாக வரும். ஒரு வேலையை ஆத்ம திருப்தியாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பணம் தானாக வரும். உடலும் மனமும்தான் பிரச்னை. நான் திமுக பற்றிய ஆய்வை 2002இல் ஆரம்பித்தேன். அந்த வேலையை இன்றுவரை முடிக்கவில்லை. அது திராவிட இயக்கத் தலைவர் சம்பந்தமான ஆய்வுதான். அதற்குப் பிறகான பாரதி, செட்டியார் உள்ளிட்ட வேலைகள் முடிந்துவிட்டன. நான் ஒரு பிரமாதமான தகவல் சேகரிப்பாளன்.
மூலையில் ஒரு துண்டுக் காகிதம் கிடைத்தால்கூட விடமாட்டேன். அதன் வழியில் போய்க் கொண்டிருப்பேன். அந்தப் பகுதி அவ்வளவுதான் என போகிறபோக்கிலும் அலட்சியம் காட்ட மாட்டேன். பாரதி குறித்த ஆய்வு விஷயத்தில் சாதாரண 2 அல்லது 3 வரிதான். அதற்காக 1 வருடம் சிரமப்பட்டேன். நான் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நான் தேடியவர் ஒரு தியாகி என்பது மண்டைக்குள் உறைத்தது. அப்படி என்றால் தியாகிகள் பட்டியலை அரசு வெளியிட்டிருக்குமே எனத் திடீரென்று ஞாபகம் வந்தது. அப்படி நூல் பிடித்து நடக்க கொஞ்சம் கூறு தேவை. அவகாசம் தேவை. சத்தியமாக சொல்கிறேன். நான் தேடியக் குறிப்பு தியாகி பட்டியலில் இருந்தது. அரசு ஆவணங்களை எடுப்பது குறித்து எனக்கு யாரும் சொல்லித் தந்ததில்லை. ஒரு வேலையை செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்துவிட்டால், அது உங்கள் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும். அதற்கு உங்களுக்குத் தேவை உடல் வலிமை மட்டும்தான். அது நன்றாக இருந்தால் வேலையை முடித்துவிடலாம்”.
ஆனாலும் உங்கள் ஆய்வுகளுக்குப் பல்கலைக்கழக அங்கீகாரம் ஏதேனும் கிடைத்துள்ளதா? இல்லை எனில் ஏன் தரவில்லை?
”தமிழகத்தில் பல்கலைக்கழங்கள் சரியான ஆய்வுகளைச் செய்வதில்லை என்று நவீன எழுத்தாளர்கள் பலர் சொல்கிறார்கள். பேராசிரியர்கள் பல ஆய்வுகளை செய்கிறார்கள். அந்த ஆய்வுகள் குறித்த விழிப்புனவு எழுத்தாளர்களுக்கு இல்லை. இரண்டு துறைகளும் தொடர்பு இல்லாமல் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்கள் அபரிமிதமான ஆய்வாளர்கள் மூலம் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளன. ஆனால், எழுத்தாளர்களோ யாரும் ஆய்வுகள் செய்யவில்லை என்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்திற்கே போகாதவன். அதன் வாசலைக்கூட நான் தொடாதவன். காரணம், அதற்கான வாய்ப்பை எனக்கு காலம் வழங்கவில்லை.
வறுமையில் உழன்று படிக்க வாய்ப்பில்லாத நான் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மாபெரும் வேலையைச் செய்திருக்கின்றன. அதற்கு எழுத்தாளர்களோடு தொடர்பு குறைவாக உள்ளது. ஆகவே அவை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வையாபுரிப்பிள்ளை செய்யாத சாதனையா? ஒரு மனிதர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமர்ந்து லெக்சிகன் 12 தொகுதிகளைக் கொண்டுவந்துள்ளார். அதை நான் சென்னைக்கு வந்த 3 மாதங்களில் வாங்கினேன். உ.வே.சாமிநாதய்யர் மாநிலக் கல்லூரியில் பாடம் சொல்பவராக அமர்ந்தபடி பல ஆய்வுகளைச் செய்துள்ளார். வானமாமலை என்பவர் யார்? அவர் பல்கலைக்கழகம் தந்த சொத்து இல்லையா?
மு.அருணாசலத்தைக் கொடுத்தது இந்தப் பல்கலைக்கழகங்கள்தானே? கார்த்திகேசுவையும் கைலாசபதியையும் நமக்குப் பல்கலைக்கழகம்தான் கொடுத்தது. எம்.ஏ.நுஃமான், லூர்து ஆகியோரை இந்தப் பட்டியலில் கட்டாயம் சொல்ல வேண்டும்.
எனவே பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளே செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழகத்தில் ஏராளமான கல்வெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. பல்கலைக்கழகங்கள் பல பணிகளைச் செய்துள்ளன. ஆனால், பல்கலைக்கழகத்தால் கண்டறிய முடியாத வேலை என்று சில உள்ளன. எல்லாவற்றையும் பல்கலைக்கழகங்களே கண்டுபிடித்துச் செய்ய முடியாது. ஜெயகாந்தன் சொல்வதுபோல் சமூகம் என்பது நான்கு பேர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை எனப் பல இடங்களில் உள்ள பேராசிரியர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளனர். பல்கலைக்கழகம் என் ஆய்வுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறதா என்றால், அதுபற்றி எனக்குக் கவலையில்லை. எனக்குள் எவனோ ஒருவன் மூளைக்குள் இருந்தபடி இதைச் செய் என்கிறான். மூளை சொல்லும்போது என்னால் அதைத் தட்டமுடிவதில்லை. ஏனென்றால் மூளை என் உடம்பின் ஒரு பகுதி. அதை ஏற்று நடப்பதே உடலின் தன்மை. எனக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை என்ன தெரியுமா? என் மனம் செய்யச் சொல்வதைச் செய்யாமல் தவிர்க்க முடியாமல் தவிப்பதுதான்.
ஆக, அதைச் செய்யும்போது மனம் எனக்குப் பெரிய நிம்மதியைக் கொடுக்கிறது. இந்தத் தமிழ் வாசகப் பெருமக்கள் என் உழைப்பு, தகுதி, அறிவை மீறி என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடியுள்ளனர். அவர்கள்தான் என் உந்துசக்தி. ஒரு செவிலியர் எதற்காக வேலை செய்கிறார்? ஒரு நோயாளி குணமடைய வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோயாளி குணமடைந்த பிறகு, தெய்வமே என கையை உயர்த்திக் கும்பிடும்போது, அந்தச் செவிலியர் கன்னி மாதாவைப்போல நோயாளியின் கண்களுக்குத் தெரிவார். அவளோ, சீக்காளியைக் காப்பாற்றியதற்காக பெருமிதம் கொள்கிறாள். அந்தப் பெருமிதத்தை நான் அடைந்துவிட்டேன். நான் ஆய்வு செய்யப் பணமில்லாமல் முடங்கி நின்றபோது, முதலில் இரு நபர்கள் நிதி உதவி அளித்தார்கள். சோற்றுக்கே வழி இல்லாத ஒருவர், 500 ரூபாய் கொடுத்து உதவினார். வேதாரண்யம் பக்கம் கருப்பம்புலம் என்ற ஊரைச் சேர்ந்த ஆசிரியர் பாலாஜி உனக்கு வேலை போனால் என்ன, பாரதியாரின் ஆய்வு உன்னைக் காப்பாற்றும் எனச் சொல்லி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். நிதி கேட்டு நான் இட்ட பதிவைப் படித்துவிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் என் வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் போட்டார். அவர் என் பெயரை எங்கும் சொல்லாதீர்கள் என்கிறார். அவரை இன்றுவரை நான் பார்க்கவில்லை.
`உங்களிடம் உதவிபெற்றுக்கொண்டு அதை வெளியே சொல்லவில்லை என்றால் எனக்கு அவமானமாக இருக்கிறது’ என்றேன். அதற்கு அவர் உனக்குப் பணம் போடவில்லை. உன் வேலைக்குப் போட்டுள்ளேன். எனக்குப் பாரதி தேவை; நீ இதையே இன்னும் இரண்டு வருடத்துக்கு முன்பு கேட்டிருந்தால் 2 லட்சம் ரூபாய் தந்திருப்பேன். இப்போது நான் தொழிலை விட்டுவிட்டேன். கொரோனாவில் முடங்கியிருக்கிறேன். அதனால் இந்தக் குறைந்த தொகையை அனுப்பியுள்ளேன் என்றார். இதையெல்லாம் மீறி யாரோ ஒருவர் எனக்குப் பரிசாக ஒரு லட்சம் தருகிறார் என்றால் மகிழ்ச்சிதான். என் வாசகர்கள் கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அதேநேரத்தில், எனக்குப் பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள் பரிசு கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களது சட்டையைப் பிடிக்க முடியுமா? எனக்குக் கொடுப்பவரை, நான் எவ்வளவு பெருமிதமாக நினைக்கிறனோ, என்னை வேண்டாம் என்று ஒதுக்குபவரையும் சம அளவில் மதிக்கிறேன். இரண்டுமே இணைந்ததுதான் உலகம்; ஒருவர்
30 ஆயிரம் போட்டாரல்லவா அது ஓர் உலகம்.
நீ ஒரு ஆளா? உன்னை நான் மதிக்க வேண்டுமா? என்கிறார்கள் இல்லையா, அதுவும் ஓர் உலகம். நான் என்னை ஏற்றுக்கொண்டவரையும், ஏற்றுக்கொள்ளாதவரையும் ஒரே தட்டில் வைத்துக்கொள்கிறேன். என் வேலை அவ்வளவுதான். அவர்கள் மீது வருத்தம் இருக்கலாம், வெறுப்பு இருக்காது. வருத்தம் வருகிறது என்பதற்காக அவர்கள் மீது அன்பு இல்லை என்று சொல்ல முடியாது. நான் செய்யும் வேலை என்னைப் புரிந்துகொண்டவர்களை என் பக்கம் அழைத்துக்கொண்டு வருகிறது. அதன் பேரில், எனக்கு உதவ வைக்கிறது.
அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் கதவுகள் ஒருநாள் திறக்கப்படலாம். திறக்காமல் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏனெனில், என் முன்னோடி ஆளுமைகள் என்னைவிட பிச்சைக்காரர்கள். இந்த வேலையைச் செய்தவர்கள் என்னைவிட கஷ்ட ஜீவனம் நடத்தியவர்கள். சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, பட்டேல், மார்ட்டின் லூதர்கிங், லூயி பிஷர் என உலகில் பல தலைவர்களோடு நேரடிப் பழக்கம் கொண்டிருந்த ஏ.கே.செட்டியார் மரணப்படுக்கையில் மருத்துவமனையில் கிடந்தபோது அவரது நண்பரிடம் ‘என் இறுதிக் காரியத்தை விரைவாக நடத்திவிடுங்கள். தலைவர்கள் வரும்வரை காக்கவைக்க வேண்டாம்’ என்று சொன்னார். உலகமே சுற்றிய அவருக்கு உள்ளூரில் பெரிய அளவில் உறவுக்காரர்கள் கிடையாது. அவரைவிட, சாதாரணமான ஆள் நான். விளம்பரம் தேடவோ, விருதுகளைப் பெறவோ இந்தப் பணிகளைச் செய்யவில்லை. கடமையாக நினைத்து தலைமேல் போட்டுக்கொண்டு செய்துவருகிறேன். நானோ மறைக்கப்பட்ட ஒருவரைத் தேடி எடுத்து ஆய்வு செய்யும் நபர். அவர்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்து போனவர்கள். அவருடைய புகழொளி வையத்தில் வீச வேண்டி நான் மேலே ஏறி ஒரு கட்டுமானத்தைக் கட்டுகிறேன். அவருடைய புகழைத் தாண்டி நான் மேலே வரக்கூடாது என நினைக்கிறார். ஏ.கே.செட்டியாருக்கு பெரிய பெரிய ஐசிஎஸ் அதிகாரிகள் பலரைத் தெரியும். அன்றைய மும்பை முதல்வர் செட்டியாரைத் தேடி ராயப்பேட்டை ‘குமரி மலர்’ அலுவலகத்திற்கு வந்து ‘வேர் இஸ் மை ப்ளாக் ஃப்ரெண்ட்?’ என்று வாஞ்சையுடன் விசாரித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய மனிதர் செட்டியார் கதர் வேட்டி, சட்டை, கையில் ஒரு குடையுடன் இந்த மெட்ராஸ் சாலைகளில் எளிமையாக நடந்து வாழ்ந்துள்ளார். அவரைப் பற்றி நான் ஆய்வுசெய்துவிட்டு, நான் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள முடியுமா? அப்புறம் பாரதி என்கிற மகாகவி ஒருவர் இருக்கிறார். காந்தியைவிட நான் பெரிய ஆளா என்ன? நான் காந்திக்குத்தான் வேலை செய்கிறனே ஒழிய, காந்தியாக ஆவதற்காக வேலை செய்யவில்லை. இரண்டும் வேறு வேறு. பொருளாதார ரீதியாக நினைக்கும் காரியத்தை செய்ய முடியாமல் தடைகள் வரும்போது என் மனம் சொல்கிறது என்னவென்றால் வயதான (65, 75, 85 வயதுகளில்) காலத்தில் விருது என்ற பெயரில் எனக்குப் பணம் தரலாம். தராமலும் போகலாம். அந்தப் பரிசுத் தொகையை என்னுடைய 35-45 வயதில் கொடுத்தால், நான் பிரமாதமான பல ஆய்வு நூல்களை அந்த நிதியைக்கொண்டு வெளியிடுவேன்
நானும் என் மூ
ளையும் ஊனமான பிறகு, எனக்கு அந்தப் பணம் எதற்கு? 85 வயதில் யாராவது ஒருவர் கண்டிப்பாக எனக்குப் பணம் கொடுப்பார். முதலில் அதுவரை நான் உயிரோடு இருக்கவேண்டும். தப்பித் தவறி வாழ்ந்தால் அதை வாங்கி நான் என்ன செய்யப்போகிறேன்? என் வீட்டில் அதை யாருக்காவது உதவித் தொகையாகக் கொடுக்கலாம். ஆனால், நான் நினைப்பது என்ன தெரியுமா? மருத்துவச் செலவுக்கு உதவி செய்யாமல் சமூக ஊழியம் செய்யும்போதே பரிசுத் தொகை கிடைத்தால் அந்த ஊழியத்தை இன்னும் சிறப்பாக, வேகமாகச் செய்ய முடியும். இதுதான் என் எண்ணமே தவிர, எனக்குக் கவுரவம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் துளியும் இல்லை. வருத்தப்படாமல் எப்படி நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேட்டால், பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வ.ரா., சி.சு.செல்லப்பா உட்பட கண்டுகொள்ளப்படாதவர்கள் என்று பெரும் பட்டியல் உள்ளது. இப்படி நான் பேசிக்கொண்டிருக்கும்போது என்னைக் கண்டுகொள்ளவில்லை என வருந்துவற்கு இடமே இல்லை. நீ ஊழியம் செய்பவன் என்றுதான் என் மனம் சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் இந்தத் துறைக்குள் வரும்போதே என்னை அப்படிச் சாந்தப்படுத்திக்கொண்டு வந்தேன். நாளை ஒரு லட்சம் தருகிறேன் என்று யாராவது சொன்னால், சந்தோஷம்தான். இந்த விருதுகளுக்குப் பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளன. அந்த நோக்கம் எனக்குத் தருவதால் நிறைவு பெறாது.
எனக்கு கொடுத்துவிட்டால் சிறப்பான விருது; எனக்குக் கொடுக்கவில்லை என்றால் அது மோசமான விருது என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில், நான் படித்த வரலாற்றில், நான் பார்த்த மனிதர்கள் அங்கீகாரம் இல்லாமல் இறந்துபோனவர்களின் கல்லறைக் கணக்குதான் அதிகம். கடைசிக்காலத்தில் புலமைப்பித்தன் இரண்டு பேட்டரி வாங்க வேண்டி காசு இல்லாமல் தவித்தார். காசநோய்க்கு மருந்துப் புட்டி வாங்க பணம் இல்லை எனப் பரிதவித்தார். ரத்த வாந்தி எடுத்தார். என்னிடம் இன்றைக்கு நாலு பேட்டரி வாங்கும் அளவுக்குப் பணம் வைத்துள்ளேன். அவரைவிட என் வாழ்க்கை மோசமில்லை. இதுதான் என் ஒப்பீடு. முல்லை முத்தையா 4 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால், பாரதிதாசன் புதுச்சேரியில் ஒரு வீடு வாங்கியிருக்க மாட்டார். அப்படித் தாங்கிப் பிடிக்க ஒரு கொம்பு தேவை. பலருக்கும் அது அமைவதில்லை. பாவேந்தர் தமிழ் மணக்க மணக்க கவிதைகளை எழுதியவர். அவரைப்போன்று சொற்களஞ்சியம் தமிழில் எவருக்கும் இல்லை. அவர் தமிழால் பழுத்த பலா. அவ்வளவு அற்புதமான ஒரு கவிஞன், அரசியல்வாதிகளால், சினிமா நடிகர்களால் வஞ்சிக்கப்பட்டார்.
புலமைப்பித்தன், உ.வே.சாமிநாதய்யரைவிட, நான் மிகப்பெரிய அறிவாளியா? எனக்கு அறிவாளி யார் என்பது தெரியும். நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பதும் எனக்குத் தெரியும். எனவே எனக்கு வருத்தம் வராது. நீங்கள் மிகவும் மமதையில் இருக்கும்போதுதான் வருத்தம் வரும். என் வசம் அது இல்லை. தெய்வமே அதை எனக்கு கொடுத்துள்ளது. என் வேலை விருதுகளைத் தேடி அலைவது அல்ல. நான் பிறந்தது இறப்பதற்காகத்தானே தவிர, விருது பெறுவதற்காக அல்ல. என் வேலை பிறவியைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதைத்தான் காந்தி எனக்குக் கற்றுக்கொடுத்தார். அதற்காக இந்த ஆய்வு வேலைகளைச் செய்கிறேன். இந்த வேலைகள் என்னை விடுவதில்லை.
கட்சி நோக்கில் நம் ஆய்வைக் கொண்டுபோனால், அதனுடன் நான் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்துகொள்ள வேண்டும். கொள்கைகளுக்கு சமரசம் செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எடுபிடி வேலை பார்க்க வேண்டும். இதுவா உன் வேலை? நான் 100 ஆண்டுகள் கழித்து வாழப் போகிறேனா? அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய பெரிய மனிதர்களை எல்லாம் நான் பார்த்துவிட்டேன். அவர்களுடைய வரலாற்றை எல்லாம் பார்க்கும்போது, நீ ஒரு தூசி… ஒன்றுமே இல்லை என மனம் பாடம் கற்பிக்கிறது. நான் திரும்பத் திரும்ப கடவுளிடம் வேண்டிக்கொள்வது, இறை நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால், எனக்கு உடல் சக்தியைக் கொடு என்றுதான். பாரதி சொல்வான் தெரியுமா? ஜெயம் உண்டாகட்டும் என்று. அதைப்போல நான் வாழ்வதற்கு தொல்லையற்ற செல்வத்தைக் கொடு என்பதுதான் என் வேண்டுதல். சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் யாரிடமும் விருதுக்காக நூல்களை அனுப்பியதே கிடையாது. நீங்கள் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்புங்கள் என்பார்கள். ஆனால் நான் அனுப்ப மாட்டேன். இது ஒரு கவுரவமா எனக் கேட்பார்கள். நான் சுயமரியாதை பிடித்தவன். உலகில் மிக மோசமான வியாதி சுயமரியாதை. எனக்கு அதீத சுயமரியாதையைக் கற்றுக் கொடுத்தவர் பெரியார். தேவைக்கு அதிகமாக எனக்கு சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்ததற்காக இப்போது அவரைப் பார்த்தால் அடிப்பேன். அவர் கற்றுக்கொடுத்த சுயமரியாதையை வைத்துக்கொண்டு என்னால் கையேந்த முடியவில்லை. இப்படிப் பேசுவதால் பணம், பொருள் மீது எனக்கு விருப்பமில்லை எனக் கருதிவிடக் கூடாது. காசு முக்கியம். பணத்தினைப் பெருக்கு என்கிறான் பாரதி. அதற்காக டூப்ளேவை போல பணத்தை மூட்டை மூட்டையாக கட்டுக்கட்டி கொண்டுபோக வேண்டி நான் இந்தப் பூமிக்கு வரவில்லை
என்பதும் முக்கியம்.
கொடுத்தால் நீங்கள் வாங்க மாட்டீர்களா என்றால், கொடுத்தால் வாங்கத்தானே செய்வார்கள்? அதற்காக நான் கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய மாட்டேன். அதை ஏன் நான் செய்ய மாட்டேன் என்றால், எனக்குப் பின்னால் நின்று பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னைக் கண்காணிக்கிறார்கள். உண்மையில் அப்படி யாராவது பின்னால் நின்று கண்காணிக்க முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் பின்னால் வரிசையில் நிற்கிறார்கள். டேய்! நான் 80 புத்தகங்கள் போட்டுள்ளேன். எனக்கில்லாத உரிமை உனக்கு இருக்கிறதா? என்று பின்னால் ஒளிந்து நின்று உ.வே.சா. என்னை அதட்டுகிறார். இப்படி அவர்களின் சாதனையில் நான் கலக்கும்போது என்னுடைய துயரம் குறைகிறது. என் துயரத்தை இப்படித்தான் குறைக்க முடியும். விருது கிடைக்கவில்லை என்பதற்காக எதன் மீதும் பழி சொல்ல முடியாது. நான் எப்போதுமே ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பேன். இந்த விருதுகள் என்பது முதலில் பணம். அந்தப் பணம் என்பது ஒரு நபரின் ஓய்வூதியமாக மாறிவிடக் கூடாது. பல பேர் என்ன நினைக்கிறார்கள் எனில், அவருக்கு
85 வயதாகிவிட்டது. ஆகையால் அவருக்குக் கொடுங்கள் என்கிறார்கள். தயவுசெய்து இதை மாற்றுங்கள். எனக்கு வேண்டாம். எனக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கு அவர்களுடைய இளம் வயதிலேயே பரிசைக் கொடுங்கள்.
ஆய்வுகளைத் தேடி சிறுவயதில் அவன் ஒவ்வோர் ஊருக்கும் செல்லும்போதே அந்தப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள். அந்த ஊக்கத்திலேயே வேலையைச் சிறப்பாகச் செய்துவிடுவான். வீட்டின் ஹாலில் யார் துணையும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும்போது தராதீர்கள். ஏனெனில் அந்தப் பணம் அவருக்குத் தேவையில்லை. அவர்களுடைய உடலும் மனமும் சோர்ந்துவிடும். சி.சு.செல்லப்பா மிகவும் வறிய நிலையில் இருந்தார். அவருக்கு நிதி கொடுக்கிறார்கள். அவர் எனக்கு விருதே வேண்டாம் என மறுக்கிறார். அந்த மனநிறைவு எப்படி வந்தது? அந்தத் துயரமே அவரிடம் இல்லை. தமிழ்ச் சமூகத்துக்காக இப்படி உழைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் ஆன்மாவிடமிருந்து நாம் பாடம் படித்தால், நான் சாதாரண ஆள்”.
தீராநதி இதழில் நீங்கள் ஆசிரியராக இருந்தபோது பல நேர்காணல்கள் செய்துள்ளீர்கள்? ஒவ்வோர் எழுத்தாளரையும் முழுமையாகப் படித்துவிட்டு, செறிவுடன் அவை எடுக்கப்பட்டிருந்தன. இது எப்படி முடிந்தது? அதில் உங்களுக்குச் சவாலாக இருந்தது என்ன?
“அதற்குக் காரணம், என்னுடைய வாசிப்பு ஞானம்தான். நான் நேர்காணல் வேலைக்காகப் படிக்கக்கூடிய பத்திரிகையாளனாக இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே இலக்கிய வாசிப்பு கூடவே தொடர்ந்து வந்தது ஓர் அனுகூலமாக அமைந்தது. நான் தரமான வாசகன். என் வாசிப்பு 14 அல்லது 15 வயதில் முகிழ்ந்தது. அண்மையில் பாவண்ணனுக்கு விளக்கு விருது கிடைத்ததற்காக ஒரு ஹோட்டலில் 10 பேர் சந்தித்துப் பேசினோம். அங்கே பாவண்னன் எழுத்து வாழ்வு பற்றி சில நண்பர்கள் பேசினர். நானும்கூட பேசினேன். நான் கடந்துவந்த அவரது எழுத்துப் பணியைப் பற்றிப் பேசினேன். சிறிய உரைதான். அதில் என் அனுபவத்தைச் சொன்னேன். ஒரு 10 நிமிடம்கூட இருக்காது. அதைக் கேட்டு, ‘என் 30 ஆண்டுகால வாழ்க்கையை தெளிந்த நடையில் சொல்லிவிட்டீர்கள். நானே மறந்துப் போன சில செய்திகள் இதில் இருந்தன. நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு’ என்று பாவண்ணன் வியந்தார். அதை நான் எழுதி வைத்துப் பேசவில்லை. நனவோடையாகச் சொன்னது. என் மண்டைக்குள் பதிவான சேமிப்பு அது.
அப்படித்தான் தீராநதி நேர்காணல்கள். அந்தப் பணியை நான் தேடிச் செல்லவில்லை. எனக்குப் பணிக்கப்பட்டது. அதுவரை நான் இலக்கிய ரீதியான நேர்காணல்களை எடுத்ததே இல்லை. அப்போது ஆசிரியராக இருந்தவர், இந்த வேலையை நீங்கள் எடுத்துச் செய்யுங்கள் என்றார். அவரிடம், ‘நான், நிறைய படிப்பேன்; இலக்கியத்தில் எனக்கு நிறைய ஆர்வம் உள்ளது. கவிதைகள்கூட எழுதுகிறேன். ஆனாலும், தீராநதியை ஏற்று நடத்துகின்ற அளவுக்கு தகுதி படைத்தவன் நான் இல்லை’ என மறுத்தேன். என்னை விட்டுவிடுங்கள் என்றேன். அதற்கு அவர், என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்?’ என்றார். நிறைய படித்திருக்கிறீர்கள்; இலக்கியத்தில் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்; அப்படியெனில் ஏன் இதைச் செய்யக்கூடாது?’ என்றார். தீவிர இலக்கிய அறிவு பெற்ற ஒருவன் நான் மட்டும்தான் ஆசிரியர் குழுவில் இருந்தேன்.
ஒரு எழுத்தாளரின் புகைப்படத்தைக் காட்டினால், அவர் யார் என அடையாளம் காண முடியாத அளவுக்குத்தான் பிறர் இருந்தனர். அவர்களுக்கு சுஜாதாவைத் தெரியும்; ஆனால், வல்லிக்கண்ணனைத் தெரியாது. தொ.மு.சி. ரகுநாதன் என்றால் யார் என்பார்கள்? அவ்வளவுதான் அவர்களின் வலிமை. எனக்கு வை.மு.கோதைநாயகி முதல் வையாபுரிப் பிள்ளை வரை தெரியும். இவ்வளவு இலக்கிய அறிமுகம் இருந்தும் தீராநதி பொறுப்பை நான் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு சொல்லுங்கள் என்றார். உடனே நான், சார்! நீங்கள் இன்னும் இரண்டு மாதம் நேரம் எடுத்து யோசியுங்கள், நான் இந்த வேலைக்கு சரிப்பட்டு வருவேனா என்று நீங்கள் நிதானமாக முடிவு எடுங்கள்’ என்றேன். இரண்டு மாதம் அவரும் காத்திருந்தார். மீண்டும் என்னைக் கூப்பிட்டு, ‘உங்களால் இதைச் செய்ய முடியும்’ என்றார். அப்போதும்கூட நான், ’என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்று தெரியவில்லை? என்றேன். இதற்கு தகுதியே இல்லாத நபர் நான்’ என்றேன். அப்போது அவர், எனக்கு நம்பிக்கை உள்ளது எனக் கூறி வேலையை தொடங்க உத்தரவிட்டார். நான் மீண்டும் அவரிடம், சத்தியமாக மறுத்தேன். திடீரென ஒருநாள் அழைத்து, ‘முதலாளி சொல்லிவிட்டார். நீங்கள்தான் இதைப் பார்க்க வேண்டும்’என்றார். முதலாளியின் உத்தரவு என்பதால் மறுக்க வழியில்லை. நான் வேலைக்குச் சேர்ந்து
2 வருடங்கள்தான் கடந்திருந்தன. உடனே வேலையை விட்டும் போகமுடியாதே? எனக்கு இன்னும் ஒரு மாதம் நேரம் கொடுங்கள் என்றேன். அந்த ஒருமாதம் வரை அவரே இதழை நடத்தினார். சரி, அதன்பிறகு நான் நினைத்தேன். இது நமக்கு ஒரு சவாலான வேலை. செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன். பொதுவாக நான் ஒரு வேலையை ஏற்பதற்கு முன்பு ஒரு லட்சம் தடவை யோசிப்பேன். எந்த வாய்ப்பாக இருந்தாலும் நம்மால் முடியுமா? நாம் செய்தால் சரியாக இருக்குமா? என்று யோசிப்பேன். பின்னர் சாருநிவேதாவை முதலில் நேர்காணல் செய்யலாம் என அனுமதி பெற்றேன். அவர் சம்மதித்தார். உடனே முன் தயாரிப்பு வேலைகளை முடித்தேன். இறுதியில் அவர் பாரிஸ் போகிறேன் என சந்திப்பை தள்ளி வைத்தார். எனக்குப் பத்திரிகையில் முன் அனுபவம் இருந்ததால், இன்னொரு பக்கம் அசோகமித்ரனை நேர்காணலுக்கும் தயார் நிலையில் இருந்தேன். முதல் பேட்டி அசோகமித்திரனில் இருந்து தொடங்கியது.
அவர்கூட உடனே சம்மதிக்கவில்லை. அந்நேரம் அவர் இண்டியன் எக்ஸ்பிரசில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ரேஷன் கடையில் தங்கள் சமூகத்திற்கு உரிய பங்களிப்பு இல்லை என்ற தொனியில். அவர் பிள்ளைகளைப் படிக்க வைக்க நேர்ந்த கஷ்டங்கள் பற்றி வெளியான கட்டுரை. அது ஏதோ இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமைந்துள்ளது என சர்ச்சை உலவிய காலம். நான் அவரை தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னேன். அவர், ‘மின்சாரம் வரவில்லை, உரிய நேரத்தில் ரயில் பிளாட்ஃபாரத்திற்கு வந்து சேரவில்லை, இதற்கு எல்லாம் என்னைக் கருத்து கேட்கிறார்கள். இதைப்பற்றி பேச ஒரு எழுத்தாளனிடம் என்ன விசயம் இருக்கும்? ஆகவே, வேண்டாம். என்னைப் படிச்சுண்டு வந்தா பேசலாம்’ என்றார். விளக்கம் அளித்தேன். அதன்பின்னர் அழைத்து சந்தித்தார். பேட்டி முடிந்ததும் என்னைப் பாராட்டினார். நல்லா படிச்சுட்டு வந்திருக்கேள், சந்தோஷம்’ என்றார்.
நான் எந்தவொரு எழுத்தாளரிடமும் குடும்பக் கதை பேச மாட்டேன். அது ஒரு கொள்கை. படைப்பு சம்பந்தமாகவும், விவாதமாகவும் பேட்டிகள் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்கள்? எங்குப் படித்தீர்கள்? இந்த மாதிரி அடிப்படையான கேள்விகளைக் கேட்கக் கூடாது என முடிவு செய்தேன். நான் சிறு பத்திரிகைகளில் வந்தவன். சிறு பத்திரிகை உலகின் கிடங்கு நான். ஏதாவது ஊர்க்கோடியிலிருந்து வரும் பத்திரிகைகளைக்கூட நான் படித்திருந்தேன். எனவே நேர்காணலின்போது ஆரம்பக் கேள்விகளைக் கேட்பது தவறாகப்பட்டது.
அறிவார்ந்த விஷயத்தை ஓர் எழுத்தாளர் பேட்டியில் விவாதித்தால் அது மிகவும் வாசகனுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து எடுத்த நேர்காணல்கள் அவை. முதல் நேர்காணல் அசோகமித்திரன் வெளியானதும் பலரும் பாராட்டினர். அதன் பின்னர் நான் எடுத்த எம்.ஜி.சுரேஷ் நேர்காணல் பெரும் விவாதமானது. பலரும் பாராட்டினர். அவ்வளவு கடிதங்கள் வந்தன. நேர்காணல்களை எழுதி முடித்தபிறகு உரியவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் அச்சுக்கு அனுப்புவேன். எனது நேர்காணல்களின் தரம் பற்றி பலரும் சொன்னது உண்டு. நான் இதனை திட்டமிட்டுச் செய்யவில்லை. அது ஒரு தற்செயல். நான் தரமற்றதைப் படித்துப் படித்து அசதியில் உழன்றதால், புதிய பாணியில் எடுத்தேன். அது அனிச்சையாக நடந்தது. இறுதியில் அவை நேர்காணல் வடிவத்தின் போக்கையே மாற்றின. இலக்கிய நேர்காணல் என்பது குடும்ப வாராந்திரியில் வரும் படைப்பு அல்ல. ஆகையால், இதை மாற்ற வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் மறைமுகமாக இருந்தது. எனக்கு இருந்த பெரிய பலம் என்னவென்றால், நான் யாரிடமும் நேர்காணல் செய்யும்போது கேள்விகளை எழுதிக்கொண்டு போய் உட்கார்ந்து பேச மாட்டேன்.
உதாரணமாக, கார்ட்டூனிஸ்ட் மதனை பேட்டி எடுக்க வேண்டும் என நினைத்தேன். அது குமுதம் லைஃப்க்காக எடுத்தது. அப்போது மதன், ‘என்னைப்பற்றி நிறைய பேட்டிகள் வந்துள்ளன. நீங்கள் என்ன கேட்கப்போகிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘எனக்கே தெரியலை சார்… ஆனால், உங்களைப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ என்றேன். ‘கேட்ட கேள்வியே திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டால் அலுப்பாக இருக்கும்’ என்றார். அதற்கு நான், ‘உங்களைப் பற்றி என்னவெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என மெயில் அனுப்பட்டுமா?’ எனக் கேட்டேன். அவரும் சரி என்றார். அதற்குப் பிறகு நான் அவருக்கு 22 கேள்விகளை மெயில் அனுப்பினேன். அதன் கீழ் சிறு குறிப்பு ஒன்றையும் எழுதினேன். ‘இந்தக் கேள்விகள் நான் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான். மொத்தக் கேள்விகளையும் நான் உங்களிடம் கேட்போன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். சந்திப்பின்போது புதிய கேள்வியோடு என் பேட்டியை நான் தொடங்கக் கூடும். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்’ என்று அதில் கூறியிருந்தேன். உடனே அவர் போனில் தொடர்புகொண்டு, ‘என்னங்க நீங்க? இந்த
22 கேள்விகளை அனுப்பிவிட்டு, அதை எதையும் கேட்க மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?’ என்றார். ‘என்னைப்பற்றி புரிந்துகொள்வதற்கே இவை. அவற்றையே உங்களிடம் நான் கேட்க வேண்டும் என்பது கட்டாயமில்லை சார்!’ என்றேன். ‘வேறு என்ன கேட்பீர்கள்?’ என்றார். நான், ‘தெரியலை சார்!’ என்றேன். இதைக் கேட்ட அவர், ‘சரி, வாங்க பேசுவோம்’ என்றார். அவர் வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டில் மாட்டி இருந்த ஓவியத்திலிருந்து கேள்வியைத் தொடங்கினேன். பேட்டி முடிந்ததும் மாலி, ராலி, மணியன் என பழங்காலத்து விகடன் ஓவியர்களைப்பற்றிய என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ‘ஆனந்த விகடன்’ முதல் இதழில் இருந்து படித்தவன் நான். 1926-இல் முதல் இதழ் வந்தது. ஆவணக்காப்பகத்தில் 1970 வரையான இதழ்களை ஒட்டுக்க படித்தவன். ஆகவே என் பேச்சைக்கேட்ட அவர், ‘இத்தனை நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’ எனக் கேட்டார். ‘நான் விகடனில் வேலை பார்த்த காலத்தில் உங்களை சந்தித்திருந்தால், 10 வருடங்களுக்கு உங்களைத் தொடர் எழுத வைத்திருப்பேன். அந்தளவுக்குத் தகவல் களஞ்சியமாக இருக்கிறீர்கள்’ என்றார். பத்திரிகை உலகின் முன்னோடி அவர். அவரது பேச்சு எனக்கு உத்வேகம் தந்தது.
நேர்காணல் இயல்பாக அமைய வேண்டும். தருமிபோல் மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததைக் கொண்டு போய் காட்டி பதில் வாங்கி வரக்கூடாது. இது என் கொள்கை முடிவு. பேட்டி என்பது கேள்வி, அதற்குள் ஒரு குறுக்குக் கேள்வி, இடையில் ஒரு விவாதம், கூட தர்க்கம் என கலந்து வரவேண்டும். அந்தக் கூறு இருந்ததால் என் நேர்காணல்கள் பேசப்பட்டன. நான் அறிவாளி என்று அவை பேசப்படவில்லை. நான் அறிவுடன் பேசி எடுத்ததால் அவை பேசப்படவில்லை. இந்தத் துறை அந்தளவுக்குப் பின்தங்கியிருந்ததால் அவை பேசப்பட்டன. இந்தத் துறைக்குள் இவ்வளவு உழைப்பைக் கொட்டி வேலை செய்வதற்கு முன்னதாக யாரும் இல்லை என்பதால் பேசப்பட்டன. இவை என் சக்தியினால் வெற்றிபெறவில்லை. சோர்ந்து போய் நோஞ்சான் பிள்ளையாக இந்தத் துறை இருந்ததால், என் குரல் வேகமாகக் கேட்டது. மற்றபடி இதில் எந்தப் பெருமிதமும் எனக்கு இல்லை.
ஆனால், நீங்கள் கேட்டதைப் போல எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. என் செயல்பாட்டை முடக்க வெளியிருந்து அழுத்தம் வந்தது. என்னைப்போல் ஒரு சாதாரண மனிதன், வெற்றியடைவதை அவர்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள பலரும் என்னைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். கடற்கரய் நேர்காணலைப் போன்று எடு எனப் பலர் என் காதுபட சொன்னது உண்டு. அதைச் சிலரால் சகிக்க முடியாமல் சதி செய்தார்கள். தனக்கு கிடைக்காத ஓர் இடம் எனக்கு கிடைத்துவிட்டதே என்கிற ஓர் ஆதங்கம்? அவர்களிடமிருந்தது. என்னுடன் சேர்ந்து இந்தத் துறையை மேலும் வளர்ப்போம் என அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்தத் துறையில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சிகள் நடந்தன. அதற்காக கடுமையான முயற்சி செய்தார்கள். ஒரு குழுவாகவே வேலை செய்தது.
மறைமுகமாக என்னை அந்த வேலையிலிருந்து தூக்க சிலர் கட்டாயப்படுத்தினர். ‘அவனை இங்கே வைக்காதே; அவன் உன்னைச் சாப்பிட்டு விடுவான். அவனுக்கு இவ்வளவு பெயரும் புகழும் கிடைக்கிறது’ என அலுவலகத்திற்கு உள்ளேயே அழுத்தம் கொடுத்தனர். நான் செய்த மிகப்பெரிய தவறு என்ன? என் வேலையை மிக நேர்மையாகச் செய்தது. குறைந்தபட்சம் 30 எழுத்தாளர்களை தீராநதிக்காக நான் நேர்காணல் செய்திருப்பேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், இந்தத் துறையில், வெறும் வேலையை மட்டுமே நீங்கள் செய்ய முடியாது. பகை உணர்வை சம்பாதித்துகொண்டேதான் இந்த வேலையைச் செய்ய முடியும். போராடிக் கொண்டுதான் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். நான் எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய்தது கிடையாது. பணத்திற்குப் பின்னால் போகின்ற மனிதன் நான் கிடையாது. நான் வேலையை செய்துகொண்டே போனால் பின்னால் ஊதியமாகக் கிடைக்கும் பணம்தான் எனக்குத் தேவை”.
கலைஞர் மு.கருணாநிதியுடன் நேரடியாகப் பணி செய்துள்ளீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
“கலைஞர் மு.கருணாநிதிக்காக நான் பணி செய்த காலத்தில் அவர் குங்குமம் இதழில் முத்திரைச் சிறுகதைகளை எழுதி வந்தார். வேறு சில கட்டுரைகளையும் எழுதி வந்தார். அவர் கைப்பட்ட எழுத எழுத… வாங்கி சுடச்சுட டைப் செய்வோம். பின், பிழைகள் திருத்தப்படும். அதனைத் தொடர்ந்து அதற்கு சில ஓவியர்களிடம் படம் போடச் செல்லுவோம். ஒரே கதையை 3 அல்லது 4 ஓவியருக்கு அனுப்புவேன். சிறுகதையைப் படித்துவிட்டு
4 பேரும் படம் வரைந்து கொடுப்பார்கள். அந்த 4 ஓவியத்தையும் வைத்து லே அவுட் செய்வோம். அப்படியே அவற்றை கலர் பிரிண்ட் அவுட் எடுப்போம். அதை எடுத்துக்கொண்டு போய் நான் கோபாலபுரம் வீட்டில் அவரிடம் காட்டி கலந்தாலோசிப்பேன். கலைஞர் என்னைவிட பெரிய அறிவாளி. அவர் அந்த 4 ஓவியங்களில் எது நன்றாக இருக்கிறது என என்னைக் கேட்பார். நான் ஒரு படத்தைக் காண்பித்து இது நன்றாக இருக்கிறது என்பேன். அதற்கு அவர், ‘ஏன் அது நன்றாக இருக்கிறது?’ என்பார். எனக்கு ஓவிய அறிவு இருந்தது. நான் வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் ஓவியங்களைக் கடந்து ஆதிமூலம், டக்லஸ், அல்போன்ஸ், வீரசந்தானம், விஸ்வம் எனப் பலரைப் புரிந்து வைத்திருந்தேன். அதைக்கொண்டு வெகுஜன நுட்பத்தை விளக்கிப் பேசினேன். அதைக் கேட்டுவிட்டு, அவர் ஒரு காரணம் சொல்வார். அவருக்கு ஓவியர்கள் பலரையும்தெரியும். படங்களில் உள்ள ஓவியரின் கையெழுத்தைக்கொண்டு கண்டறியும் அளவுக்கு அவருக்கு அவகாசம் இருக்காது. எனவே பெயர்களைக் கேட்பார்.
உரையாடல் முடிந்தபின்னர் இறுதியில், நீ சொன்ன படத்தின் லேஅவுட்டையே பயன்படுத்திக் கொள்’ என்பார். நான் சின்னச் சின்ன விசயத்திற்கும் பதில் கைவசம் வைத்திருப்பேன். அவர் நீயே இனி பார்த்துக்கொள் என்றாலும் விடமாட்டேன். திரும்பத் திரும்ப போய் நிற்பேன். முழு அனுமதி வரும்வரை காட்டிக்கொண்டே இருப்பேன். நான் கோபாலபுரம் வீட்டுக்கு மாலை 6 மணிக்குப் போவேன். அங்கே அவர் 6.10 வரை இருப்பார். நான் உள்ளே நுழைந்ததும் ஸ்டாலின், துரைமுருகன் என யாராக இருந்தாலும் தானாக வெளியேறிவிடுவார்கள். அது இலக்கியத்திற்கான நேரம் என்பதை அவர்கள் அறிவர். எனது நேரம் தவறாமை அவருக்குப் பிடித்திருந்தது. அவர் வீட்டுப் படிக்கட்டுகளில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என ஒரு பலகையில் எழுதி மாட்டியிருந்தார். அது வெறும் வாசகம் அல்ல. நான் அவரிடம் அனுமதி பெறும்வரை விடாமல் செய்துகொண்டே இருக்கும் வேலைக்குப் பெயர்தான் கடமை. என்னைப் பார்த்ததும் உடனே அறையைவிட்டு திமுக மூத்த தலைவர்கள் கலைந்துபோவார்கள். அது கண்ணியம். நான் அவருடன் 3 ஆண்டுகள் பணி செய்தேன். தனிமையில்தான் அவரைச் சந்திப்பேன். யாருமே அறையில் இருக்கமாட்டார்கள். அவர் வெறும் லுங்கி மற்றும் பனியனுடன் அமர்ந்திருப்பார். கண்களில் கண்ணாடி அணியாமல் பல நாள் அவரை அருகில் பார்த்திருக்கிறேன். அவரது அடையாளமே அதுதான். அதைத் தவிர்த்து காண வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். என் விசயத்தில் அது தினம் நடந்தது. கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி ஒரு நாள்கூட என் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான ஆதாயம் சார்ந்த ஒரு கோரிக்கைகூட நான் அவரிடம் வைத்ததில்லை. அது சத்தியம்.
முதல்முறையாக நான் அவரிடம் சென்றபோது, நான் கொண்டு போன சிறுகதையை உரக்கப் படி’ என்றார். அதாவது வாய்விட்டுச் சத்தமாக. அதற்கு நான், ‘அப்படி எனக்குப் படிக்க வராது. மெளன வாசிப்புத்தான். என் குரல் கணீரென்று இருக்காது. ஏற்ற இறக்கத்துடன் படிக்க வராது ஐயா!’ என்றேன். அதற்கு அவர், ‘சும்மா படி..’ என்றார். நான் முதல் பாரா வரை படித்தேன். பின்பு அவரே உணர்ந்து, ‘நீ சொன்னது சரிதான்’ என்று சொல்லிவிட்டு, ‘நானே படிக்கிறேன். நீ கேள்’ என்றார். அதுதான் அவரது பிழை கண்டறியும் பாணி. அவரது பல கதை, கட்டுரைகளைப் படித்து ஒழுங்கு செய்துள்ளேன். ஒருமுறை அவர் கேட்டார், ‘கார்மேகம் இதற்கு முன்னர் வந்துள்ளாரா?’ என்று. நான் யோசிக்காமல் சட்டென்று இல்லை என்று சொன்னேன். உண்மையாக எனக்குப் பதில் தெரியாது. அவர் உடனே நான் என்ன கேட்கிறேன், புரிகிறதா? என்றார். சட்டென்று என் மூளை சொன்னது, கார்மேகம் என்ற பெயர் இதற்கு முன்னர் கதாபாத்திரமாக வந்துள்ளதா என்றுதானே கேட்க வருகிறீர்கள்? என்றேன். அவர் சபாஷ் என்றார். அதை அவர் ரசித்தார்.
மற்றொரு முறை ‘இந்தக் கதை நன்றாக இருக்கிறதா?’ என்றார். அதற்கு நான், ‘இல்லை’என்றேன். சொன்ன பிறகு உள்ளுக்குள் பயம். அதற்கு அவர், ‘எப்படிச் சொல்கிறாய்?’ எனக் கேட்டுவிட்டு, ‘நீ என்ன மாதிரி கதைகளைப் படித்திருக்கிறாய்?’ எனக் கேட்டார். நான் சில எழுத்தாளர்களின் பெயரைச் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அவர், பிடித்ததையும் சொன்னார். பிடிக்காததையும் சொன்னார். அப்போது எனக்கு
21 வயது. இளம் கன்று பயம் அறியாமல் துடுக்காக பாய்ந்த காலம். அதன்பிறகு, அந்தக் கதையை மாற்றிக் கொடுத்தார்.

அந்த 3 ஆண்டுகளில் நான் அவரை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். அவருக்கு லுங்கி கட்டிவிட்டுள்ளேன். பனியன் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அவரது இங்க் பேனாவில் கையெழுத்திட்டுப் பழகிப் பார்த்திருக்கிறேன். அவருடன் எனக்கு இருந்தது இலக்கிய உறவுதான். ஒரு பொடியனாக நான் சொன்ன விசயங்களை அவர் ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் உண்டு. இதேபோன்று இன்று உள்ள சில தலைவர்களிடம் நான் சொல்ல முடியுமா? என்பது மாபெரும் கேள்வி. 12 வயதில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர் அவர்.
21 வயதில் தமிழகம் அறிந்த தலைவர் அவர். ஒரு 21 வயது இளைஞனான எனக்கு உரிய மரியாதை கொடுத்தார். அப்போது அவருக்கு 77 வயது. நான் எந்தளவுக்கு அவரது கதைகளை ஊன்றிப் படிக்கிறேன் எனத் தெரிந்துகொண்டு என்னை அருகில் இருக்க அனுமதித்தார். அதன்பிறகு ஓவியத் திறமையில் எந்தளவுக்கு எனக்குத் திறமை இருக்கிறது என அவருக்குத் தெரிந்தது. அப்போது சொன்னார், ‘நீ இனிமேல் லே அவுட் செய்த கதையைக் கொண்டுவந்து காட்டத் தேவையில்லை. உனக்குப் பிடித்த மாதிரி படத்தை வைத்து லே அவுட் செய். பிறகு இறுதியாக ஒரு பிரிண்ட் அவுட் மட்டும் எடுத்துக்கொண்டு வா’என்றார். ஆனாலும், நான் அப்படி ஒருமுறையும் செய்யவில்லை. சகலத்தையும் காட்டி அனுமதி பெற்றே அச்சுக்கு அனுப்பினேன். அதற்கு அவர், ‘உன்னைத்தான் வரவேண்டாம் என்றேனே?’ என்றார். அதற்கு நான், ‘கடைசிப் பிரதிவரை காட்டிவிடுகிறேன். நீங்கள் சம்மதம் எனச் சொன்னால்தான் எனக்கு நிம்மதி’ என்றேன்.
ஒருமுறை சில திருத்தங்கள் போடச்சொன்னார். நான் அதை அவர் வீட்டிலிருந்து பத்திரிகை அனுவலகத்திற்கு ஃபேக்ஸ் அனுப்பி, திருத்தம் போட்டு மறுபடி பிரதியை அனுப்பச் சொன்னேன். வேலை வேகமாக முடியுமே என்று. அந்தப் பிரதியைப் பார்த்தவர் ‘இதில் ஏதோ அச்சு அழிந்ததுபோல் தெரிகிறதே?’ என்றார். நான் ஃபேக்ஸ் அனுப்பி பெற்ற விவரத்தைச் சொன்னேன். அந்தளவுக்கு நுட்பமாக தனது அச்சுப் பிரதிகளைப் பார்க்கும் ஆற்றல் பெற்றிருந்தார் அவர். என் பொறுப்புணர்வை உணர்ந்த அவர், நம்மிடம் இருந்து ஒப்புதல் பெறாமல் இவன் எதையும் செய்ய மாட்டான் என்றும், இவன் மிகவும் ரசனை உள்ளவன் என்றும் என்னை நம்பினார். நான் வேண்டாம் என்றதை அவர் திருத்தித் தந்துள்ளார். அவர் அனுபவத்திற்கு அருகில்கூட வராது என் அறிவு. ஆனால், என் சொல் அவரிடம் அம்பலம் ஏறியது. அது அவரது பெருந்தன்மை. என்னைப் பொறுத்தவரை நான் இறுதியாகவும் முதலாகவும் பார்த்த கடைசி ஜனநாயகவாதி அவர்”.
