கிரேஸ் பிள்ளை

மொத்தம் 31 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு சிறந்த அச்சாக்கத்துடன் 2023-இல் வெளிவந்திருக்கிறது. நிகழ் அய்க்கண் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தனது சிறந்த கட்டுரைகளால், அரசியல் திறனாய்வாளராக அறியப்பட்டிருக்கிறார். இவரது திசை மாறும் அரசியல் என்னும் இந்தத் தொகுப்பு பல்வேறு நுணுக்கமான அரசியல் கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது. இந்தக் கட்டுரைகள் யாவும் 2002-2016 ஆண்டுகளுக்குள் அதாவது சந்தைமய – வலதுசாரி அடையாள அரசியல் எழுச்சிக் காலத்தில் எழுதப்பட்டவையாகும். இக்கொள்கைகளின் விளைவாக அரசியல்-சமூக-பொருளாதார அளவில் நிகழ்ந்த மாற்றங்களை விமர்சன நோக்குடன் பிரதிபலிப்பவையாக இந்நூல் அமைந்துள்ளது.
நிதி மூலதனம், தனியார் மயம், கட்டுப்பாடற்ற சந்தையின் விளைவாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் இதில் உள்ள கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. அதாவது, வலதுசாரி அடையாள அரசியலின் சனாதனச் சொல்லாடல்களானது எவ்வாறு கார்ப்பரேட் ஊடகங்களின் வழியாக மீள் உற்பத்தி செய்யப்பட்டு உரையாடலாக்கப்படுகிறது; கல்வியில் காவிமயம்; கல்வி, மருத்துவம், யாவும் தனியார்மயமாகி வருவதன் விளைவுகள்; பணநாயக அரசியலுக்கும், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடமளிக்கும் விதமான தேர்தல்; அடையாள அரசியலுக்கு வளம் சேர்க்கும் சினிமா, பறிபோகும் சமூக நீதி, வேலை வாய்ப்பின்மை, பறிக்கப்படும் தலித் பெண்கள் உரிமைகள்; வளர்ச்சியின் மறுபக்கமான சுற்றுச்சூழல் கேடுகள்; அரசின் சிக்கன நடவடிக்கைகளினால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவது ஆகியவற்றினைப் பற்றி சமூக அக்கறையுடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும், புதிய கோடாங்கி, அறிவு வழி, தாய்மண், எழுச்சி, சிலம்பம், உயிர் எழுத்து, சமநிலைச் சமுதாயம் போன்ற இதழ்களில் அந்தந்த அரசியல் சூழலுக்கேற்ப அந்தந்தக் காலகட்டங்களில் சமுதாயத் தேவை கருதி வெளியான கட்டுரைகளாகும். இவை அனைத்தும் அரசியல் நோக்கர்களால், கூர்ந்து கவனிக்கப்பட்டவை என்பதோடு, வாசகர்கள் மத்தியிலும் சிறப்பான கவனத்தைப் பெற்று, நிகழ் அய்க்கண் என்னும் மனிதரை அரசியல் திறனாய்வாளராக அடையாளம் காட்டின என்பது மிகைக்கூற்றல்ல.
இந்நூலில் உள்ள கட்டுரைகளில் ஆசிரியர் கொடுத்திருக்கும் தரவுகள், புள்ளிவிவரங்கள், வாசகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. ஒரு சாதாரண வாசகனும் புரிந்துகொள்ளும் வகையில் நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள், சொற்றொடர்கள், விவரணைகள், விவாதங்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களாக வெளிவந்திருக்கும் கருத்தாக்கங்கள், வாசகனை மனங்கொள்ளச் செய்கின்றன.
சுற்றுச்சூழல், தண்ணீர் மாசுபடுதல் போன்ற தகவல்கள் சமூக அக்கறையுடன் போதிய தரவுகளுடன் கட்டுரைகளில் எடுத்தாளப் பட்டிருக்கின்றன. இந்துத்வத்தின் கொடூர நகங்கள் எவ்வாறு தலித்துகளையும் பெண்களையும் இழிவுபடுத்துகின்றன போன்ற சொல்லாடல்கள் வாசகனை சமூக அக்கறை கொள்ளச் செய்யவல்லனவாக இருக்கின்றன. வடக்கே ஆரியவர்த்தத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மழை வேண்டி பெண்களை நிர்வாணமாக ஏர் உழ வைப்பது, பூப்பெய்தும் பருவம் வந்த பள்ளி மாணவியை நிர்வாணமாக அக்னி ஹோமத்திற்கிடையே அமரச்செய்வது போன்ற பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டுகின்றன கட்டுரைகள்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே எவ்வளவு சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன என்பது நமக்குப்புலனாகும். உதாரணமாக, ‘சினிமாவும் அரசியலும்’, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊடகங்களின் வன்முறை’, ‘மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்: விஷமே உணவு உணவே விஷம்’, ‘கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் சமூகக் கடமைகளும்’, ‘அரசியல் கட்சிகள்-ரசிகர் மன்றங்கள் – ஆன்மிகவாதிகளின் நலத்திட்ட உதவிகள்’, ‘விளிம்புநிலை மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வெள்ளித்திரை/சின்னத்திரை உலகமும் ஊடகங்களும்’, ‘வாழ்வை மறிக்கும் சோதிடம்’, ‘கறுப்புப்பணம் ஊழல் லஞ்சம் வரிஏய்ப்பு முறைகேடுகள் – சிறுகுறிப்பு’, ‘பறிபோகும் வளங்களும் இறையாண்மையும்’, ‘கருத்துக் கணிப்பும் தொடர்பு சாதனங்களும்’, போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இன்றைய அரசியல், சமூக அக்கறை, ஊடகங்கள் குறித்த பரந்துபட்ட பார்வையை நம் முன் விரித்து வைக்கின்றன.
இவற்றுள் ’சாதியைக் காக்கும் தட்சிணை’ கட்டுரை, ஒரு பிராமணப் புரோகிதரை மதச்சடங்கு நடத்துவதற்கு அமர்த்தப்படும்போது அவர்கள் பெறும் தட்சிணை அவர்களின் வாழ்வாதாரமாக வேதகாலம் தொட்டு அமைந்து வந்துள்ளதையும், வேதங்கள் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், தானம் ஏற்றல் ஆகியவை சாஸ்திரப்படி பிராமணர்களின் பணியாக இருந்துவந்துள்ளதையும், பிற சமூகத்தினர், உடல் உழைப்பை இவர்களுக்கு நல்கிவந்துள்ளதையும் விரிவாக ஆராய்கிறது.
சினிமா குறித்த ஒரு கட்டுரை அது எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக, இக்கட்டுரையில், சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், பிரமாண்டங்களை உலகத்தரத்திற்கு ஏற்ப உருவாக்கி, சமூக முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கிற சாதி அமைப்பு பற்றியும், சமூக, பொருளாதாரத்தளத்தில் நிலவும் சமத்துவமின்மை குறித்தும் கேள்விக்குட்படுத்துகிற எந்தப் புதுமையையும் சினிமா அனுமதிப்பதில்லை; கதையம்சத்தைப் பொருத்தவரையில், தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் இவர்களுக்கு வழிகாட்டியாக இன்றளவும் துணை நிற்கின்றன என்னும் ஆசிரியரின் கூற்று, இக்கட்டுரை வெளியான காலத்தை அவதானிக்கத் தோன்றுகிறது. இன்று இச்சூழல் வெகுவாக மாறி வந்திருக்கிறது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுவாக இதுபோன்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்த குறித்த கட்டுரைகள் வெளியான அந்தந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்திருக்கும். ஆனால் அது ஒரு நூலாகத் தொகுக்கப் படுகையில், கட்டுரை வெளியான ஆண்டு குறித்த குறிப்பு இத்தொகுப்பில் வெளியிடப்பட்டிருப்பதால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அரசியல் சமூக விமர்சகர்கள், தான் வாழ்ந்த காலங்களை அவ்வப்போது தன் கட்டுரைகளில் பிரதிபலித்துவிடுவதால், இதுபோன்ற குறிப்பிடல்கள் கவனம் கொள்ளத்தக்கதாகும்.

இன்றைய இந்தியாவிலுள்ள இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த சரியான புரிதல் என்பது கிடையாது என்பதை நாம் காணும் சமூக ஊடகங்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இட ஒதுக்கீடு சரியாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு இந்தியா விடுதலை அடைந்தது முதல் இன்றளவும் பேசப்படும் பொருளாகவே அமைந்து வந்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறை, குடிமைப் பணித்துறை போன்ற முக்கியமான துறைகளில், எந்தெந்த சாதியினர் எவ்வாறு பரவியுள்ளனர் என்பதைக் கணக்கெடுப்பதன் வாயிலாக, இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். இதில் நமது ஊடகங்களும் சுயநலம் சார்ந்து உயர்சாதி மனப்பான்மையுடன் செயலாற்றி வருகின்றன என்பதை ஆசிரியர் வாசகனுக்குத் தெளிவுபடுத்தத் தவறவில்லை. ஆசிரியர் தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சரியான தரவுகளை எடுத்துக் கையாண்டிருப்பது பாராட்டிற்குரியது.
மதச்சார்பற்ற தேசத்தில், தலித், சிறுபான்மை இன மக்களுக்கு சமவாய்ப்பு, சுதந்திரம் இங்கே உறுதி செய்யப்படுவதில்லை; சகோதரக்கூறுகளை வளர்த்தெடுப்பதில் இவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. ஆதிக்க எண்ணம் கொண்ட பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடுநிலை என்பதே பெண்களை, தலித்துகளை சிறுபான்மையினரை விளிம்பில் நிறுத்தி வைப்பதற்கேயாகும் என்னும் ஆசிரியரின் ஆதங்கம் வாசகர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இன்னும், சைவ உணவு வகைகளே ஆரோக்கியமானதாக முன்மொழிவது மணமகன்/மணமகள் தேவையில் சாதிகளைப் பிரதானப்படுத்துவது, சைவர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும் என்று கூறுவது, சுற்றுலா என்னும் பெயரில், இந்துத்துவம் சார்ந்த கோவில்களை முதன்மைப்படுத்தி கட்டமைப்பது, சோதிடம், ராசிபலன் சார்ந்த நிகழ்ச்சிகளை உருவாக்கி இவை அனைத்துத் தரப்பினருக்கானதாக்க முயற்சிப்பது இவை அனைத்தும் மூடநம்பிக்கை என்னும் வன்முறைக்குள் மக்களை அமிழ்த்தும் செயலாக இன்று காட்சி/பத்திரிகை ஊடகங்களின் செயலாக இருக்கின்றன என்று ஆசிரியர் கூறுவதன் மூலம் வாசகனுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதில் இவர் பெரும் பங்கு வகிக்கிறார். அடுத்து மிக முக்கியமான கட்டுரையாக இத்தொகுப்பில் காணப்படுவது தேர்தல் கருத்துக்கணிப்புகள்.
காட்சி ஊடகங்களின் வாயிலாக காட்டப்படும் கருத்துக் கணிப்புகளும் (தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின்) நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சுயநல ஊடகங்களால் ஒரு கட்சியினருக்கு ஆதரவாக மக்களின் மனதைத் தயார்படுத்துவதாகும்; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகத் தூண்டுவதற்கு ஏதுவாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இக் கட்டுரையின் மூலம் ஆசிரியர் கூறவரும் மிக முக்கியமான செய்தியாவது: பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களானது நுகர்வின் மூலமாக சந்தையின் எல்லையை விரிவுபடுத்தி அதிக லாபம் ஈட்டுவது போன்று தேர்தலினூடாக வாக்காளர்களையும் நுகர்வோர்களாக மாற்றிவிட முயல்கிறது என்பதாகும். மேலும், அனைத்து மக்களுக்கும் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் அரசியல் சட்டம் உறுதி செய்துள்ளது. அதே சமயம் கருத்துரிமை-பேச்சுரிமை என்னும் போர்வைக்குள் கருத்துக் கணிப்புகளை தடை செய்யக்கூடாது என ஆதிக்க சக்திகளின் குரல்களை பிரித்தறிந்து புரிந்துகொள்வது அவசியமானதாகும்.
பொதுவாக நவீன மனிதனுக்கு சமூகத்தையும், அரசியலையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் சமத்துவமின்மையையும், இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் எளிதில் புரிந்துகொள்ளும்படி, எளிமையான நடையில் நமக்குக் கிடைத்திருக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்!
