கதவு திறந்தே இருக்கிறது எனும் தலைப்பில் நம் புத்தகம் பேசுது இதழில் நண்பர் பாவண்ணன் எழுதிய புத்தகங்கள் குறித்த அற்புத தொடரை விரும்பி வாசித்தவர்கள் பலர். இப்போது எல்லாருக்கும் வாசிக்க உதவியாக முழு புத்தகமாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.
எனக்கு பிடித்த அந்த தொடரின் புத்தகம் ‘கண் தெரியாத இசைஞன்’ நூல் சம்பந்தமானது. பாவண்ணன் கொரலேன் கோவின் வாழ்க்கையை பற்றி மிக அழகாக தனக்கே உரிய பாணியில் விவரித்திருப்பார். நான் நூலை கையிலெடுத்ததும் அந்த கட்டுரைக்கு திரும்ப தாவினேன். கியோஹிமின் புல்லாங்குழல் இசையில் திரும்பவும் மனம் உருகி கரைந்திட வைத்திருக்கிறார் பாவண்ணன்.
இதுபோல சலீம் அலி முதல் சாமிநாத சர்மா வரை நம்மில் பலரும் அறியாத தகவல்கள் புத்தகங்களின் சாரங்கள் புதிய கோணங்கள் என ஆர அமர பாவண்ணன் விவரிக்கும் நல்ல இலக்கிய கட்டுரைகள் கொண்ட தொகுதி இது.
கதவு திறந்தே இருக்கிறது - பாவண்ணன் பாரதி புத்தகாலயம், பக். 144, விலை.ரூ.120
